இ.நிவேதா
ஓரினச்சேர்க்கைக்கு மருத்துவரீதியாகவோ, உணர்வுரீதியாகவோ ஏதாவது காரணம் உள்ளதா என்ற கேள்வி பலருக்கும் இருக்கிறது.
ஆண் பெண்ணை விரும்புவதும், பெண் ஆணை விரும்புவதும் எவ்வளவு இயல்பானதோ, அதே அளவுக்கு இயல்பானதுதான் ஓரினச்சேர்க்கையும். இதற்கான காரணமாக நான்கு தியரிகள் சொல்லப்பட்டு வந்தன.
முதல் தியரி, மரபணுக்களில் கோளாறு இருந்தால் இப்படி ஏற்படலாம். ஆனால், ஆராய்ச்சி செய்து பார்த்ததில் அது காரணமல்ல என்பது உறுதியானது.
இரண்டாவது தியரி, தாயின் கருவில் இருக்கும்போது செக்ஸ் ஹார்மோன்களில் குறைபாடு ஏற்பட்டிருந்தால் ஓரினச்சேர்க்கையில் ஈடுபாடு வரலாம் என்றது. இது தொடர்பான ஆராய்ச்சியில், இதுவரை எந்தத் தெளிவான முடிவும் கிடைக்கவில்லை.
மூன்றாவது, சைக்கோ அனலிட்டிக் தியரி (Psychoanalytic theory). அம்மாவைத் துன்புறுத்திய அப்பாவின் மேல் இருக்கும் கோபத்தில், ஆண்களைப் பிடிக்காமல், பெண் பெண்ணையே விரும்பலாம்.
அப்பாவை துன்புறுத்திய அம்மாவின் மேல் இருக்கிற வெறுப்பில் பெண்களைப் பிடிக்காமல், ஆண் ஆணையே விரும்பலாம். இந்த தியரியும் நிரூபிக்கப்படவில்லை.
நான்காவது தியரியோ, ஒரு நபரின் நெருங்கிய வட்டத்தில் இருப்பவர்களில் ஓரினச்சேர்க்கையாளர்கள் அதிகமாக இருந்தால், அந்த நபரும் அப்படி ஆகி விடலாம் என்றது.
ஆனால், உடன் இருப்பவர்கள் ஓரினச்சேர்க்கையாளர்களாக இருந்தாலும் எதிர்பாலின ஈர்ப்பு கொண்டவர்கள் மாற மாட்டார்கள் என்கின்றன ஆராய்ச்சிகள்.
ஆக, இதுநாள் வரைக்கும் ஓரினச் சேர்க்கைக்கு இதுதான் காரணம் என்று மருத்துவத்துறையில் எதுவும் கண்டறியப்படவில்லை. இதை, மாற்றுப் பாலியல் நாட்டம் (Alternative sexual orientation) என்போம்.
எதிர்பாலின ஈர்ப்பு எப்படி இயற்கையானதோ, அதேபோல இதுவும் இயற்கையானதுதான். இது நோய் கிடையாது. அவர்களும் மற்றவர்களைப் போல நார்மல்தான். அவர்களை ஒதுக்கி வைக்க வேண்டாம். குறைவாக நடத்த வேண்டாம். சமமாக நடத்த வேண்டும்.