இ.நிவேதா
செக்ஸ் டாய்ஸ் என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி போன்றது. கத்தியைப் பயன்படுத்தி அறுவை சிகிச்சை செய்து உயிரைப் பிழைக்க வைக்கவும் முடியும், உயிரை எடுக்கவும் முடியும்.
செக்ஸ் டாயை யார் பயன்படுத்துகிறார்கள் என்பதைப் பொறுத்தே அதன் பயன்பாட்டின் நன்மை, தீமை அமையும்.
திருமணம் செய்யும் வயதில் இருப்பவர்கள், திருமணமாகாதவர்கள், திருமணமானவர்கள் என அனைவரும் விருப்பம் இருக்கும்பட்சத்தில், செக்ஸ் டாய்ஸை பயன்படுத்தலாம். அதனால், அவர்களுக்கு உடல்ரீதியில் எந்தக் கெடுதலும் ஏற்படாது.
கணவர் வெளிநாட்டில் இருந்தால், இன்டர்நெட் வழியாகக் கணவனும் மனைவியும் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்தி உறவு வைத்துக் கொள்ளலாம். அந்த வகையில் கணவன், மனைவிக்கு இடையே தாம்பத்ய உறவு கொண்ட திருப்தியையும் செக்ஸ் டாய்ஸ் தரும்.
அடுத்ததாக, தம்பத்ய உறவு கணத்திலும் செக்ஸ் டாய் பயன்படுத்தப்படலாம். ஆண் சில நிமிடங்களில் உச்சக்கட்டம் அடைந்துவிடுவான். பெண்ணுக்கு 10 நிமிடங்களுக்கு மேல் தூண்டுதல் தேவைப்படும். அப்போது செக்ஸ் டாயை பயன்படுத்தலாம்.
பெண்ணுக்கான தூண்டுதல் குறித்த விழிப்புணர்வு கணவருக்கு இல்லாதபோது, அல்லது கணவரால் வெகு நேரம் தூண்ட முடியாமல் போகும்போது வைப்ரேட்டர் பயன்படுத்துவதில் எந்தத் தவறுமில்லை. அதனால் ஆரோக்கியத்துக்கு எந்தக் கெடுதலுமில்லை.
கணவனும் மனைவியும் வழக்கமான முறையில் தாம்பத்ய உறவு கொள்ளாமல் செக்ஸ் டாய்ஸை மட்டுமே பயன்படுத்திக் கொண்டிருந்தால், ’என்னைத் தவிர்க்கத்தான் செக்ஸ் டாய்ஸ் பயன்படுத்துகிறாரோ’ என்ற எண்ணம் இருவரில் ஒருவருக்கு வந்துவிடலாம்.
தம்பதியில் ஒருவர் அதிகமாக செக்ஸ் டாய் பயன்படுத்தும்போது, அது சில மனக்கஷ்டங்களை இணையருக்கும், தம்பதிக்கும் இடையிலும் ஏற்படுத்திவிடலாம். இதனால், தாம்பத்ய உறவில் விரிசல் ஏற்படலாம்.
தனக்குப் பதிலாக தன் துணை செக்ஸ் டாய் பயன்படுத்துவதை சிலரால் ஏற்றுக் கொள்ளவே முடியாது. இதுவும் ஒருவகையான பொசசிவ்னெஸ் தான். ஒருவருக்குப் பிடிக்கவில்லை என்றால் தவிர்ப்பதே நல்லது. இருவருக்கும் சம்மதம், இதனால் உறவு கொள்வதில் ஈடுபாடு அதிகரிக்கிறது என்றால் ஓ.கேதான்.
ஒரு செக்ஸ் டாயை பலர் பயன்படுத்தினால், ஹெச்.ஐ.வி போன்ற பால்வினை நோய்கள் வருவதற்கு அதிக வாய்ப்பிருக்கிறது என்பதால் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும்.