இ.நிவேதா
முகேஷ் அம்பானியின் இளைய மகன் ஆனந்த் அம்பானிக்கும், தொழிலதிபர் விரன் மெர்ச்சண்ட்டின் மகள் ராதிகா மெர்ச்சண்டிற்கும் நிச்சயதார்த்தம் நடந்தது.
ராஜஸ்தானின் நத்வாரா நகரில் உள்ள ஸ்ரீநாத்ஜி கோவிலில் பாரம்பர்ய முறைப்படி டிசம்பர் 29 வியாழன் அன்று இந்நிகழ்வு நடைபெற்றது.
தொழில்துறை பிரபலங்கள், திரைத்துறை பிரபலங்கள் எனப் பலரும் திருமண நிச்சயதார்த்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
அம்பானி குடும்பத்தில் ஒரு அங்கமாக மாறவிருக்கும், ராதிகா மெர்ச்சண்ட் ஏற்கனவே அம்பானி வீட்டு நிகழ்வுகளில் கலந்து கொண்டுள்ளார். ஆனந்த் அம்பானி சிறுவயதிலிருந்தே ராதிகாவுடன் பழகி வந்ததால், கடந்த சில ஆண்டுகளாக அம்பானியின் குடும்பத்தில் ஒருவராகவே இருந்து வந்தார்.
இவர் `Encore Healthcare’ என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரியான தொழிலதிபர் விரன் மெர்ச்ண்ட் மற்றும் ஷைலா மெர்ச்சண்ட்டின் மகள்.
குஜராத்தின் குட்ச் பகுதியை சேர்ந்த ராதிகா, பல ஆண்டுகளாக மும்பையில் வசித்து வந்தார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற `Cathedral and John Connon school’ மற்றும் ஜூஹூவில் உள்ள `École Mondiale World பள்ளியிலும் படித்தார்.
பி.டி சோமானி சர்வதேச பள்ளியிலும் சர்வதேச இளங்கலை டிப்ளமோ பட்டம் பெற்றார். அதன்பின் கல்வியைத் தொடர நியூயார்க் சென்றார்.
நியூயார்க் பல்கலைக்கழகத்தில் அரசியல் மற்றும் பொருளாதாரத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். 2017ம் ஆண்டு மும்பையில் தனியார் நிறுவனம் ஒன்றில் சிறிது காலம் வேலை செய்தார். தற்போது தனது தந்தையின் என்கோர் ஹெல்த்கேர் நிறுவனத்தில் இயக்குனராக இருக்கிறார்.
இவர் இந்திய பாரம்பர்ய நடனத்தில் பயிற்சி பெற்றவர், தனது முதல் அரங்கேற்றத்தை இந்தாண்டு மும்பையில் உள்ள ஜியோ வேர்ல்ட் சென்டரில் நிகழ்த்தினார். இதை நிதா மற்றும் முகேஷ் அம்பானி தொகுத்து வழங்கினர்.
ராதிகா விலங்குகளின் மீது அன்பு கொண்டவர் என்று தெரிவிக்கப்படுகிறது.
இந்த ஜோடிக்கு தற்போது பலரும் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.