சே.அறிவுச்செல்வன் & இ.நிவேதா
தாய்ப்பால் கொடுப்பது குழந்தைக்கு மட்டுமல்ல, தாயின் உடல்நலத்துக்கும் நல்லது. தாய்ப்பால் புகட்டலில் பரிந்துரைக்கத்தக்க 5 நிலைகள் (Positions) உள்ளன.
பந்து நிலை (Football Position) - பந்தைப் பிடிப்பதுபோல குழந்தையை உள்ளங்கையில் கழுத்துடன் தலையையும் சேர்த்துப் பிடித்து, குழந்தையின் உடலை முன்னங்கையால் சற்று உயர்த்திப் பிடித்து, குழந்தையின் உடல் தாயின் அக்குள் பகுதியையொட்டி இருக்குமாறு அணைத்துப் பால் புகட்ட வேண்டும்.
சிசேரியன் அறுவைசிகிச்சை செய்தவர்கள், இரட்டைக் குழந்தை பெற்றவர்கள் பந்து நிலையில் பால் புகட்டலாம்.
தொட்டில் நிலை (Cradle Position) - தொட்டில்போல கையை வைத்துக்கொண்டு, மறுகையில் முன்னங்கைகளால் குழந்தையைத் தாங்கிக்கொண்டு பால் புகட்ட வேண்டும்.
குறுக்குத் தொட்டில் நிலை (Cross Cradle Position) - குழந்தையின் தலையை உள்ளங்கையாலும் உடலை முன்னங்கையாலும் பிடிக்க வேண்டும். மார்பகத்துக்கு எதிராகக் குழந்தையைக் குறுக்குவாட்டில் பிடித்து, மற்றொரு கையால் மார்பகத்தைப் பிடித்துக்கொண்டு பால் புகட்ட வேண்டும்.
பக்க சாய்வு நிலை (Side Lying Position) - தலையைச் சற்று உயர்த்திப் படுத்துக்கொண்டு ஒரு பக்கமாகச் சாய்ந்து, குழந்தையின் உடலை தாயின் உடலுடன் அணைத்தபடி பால் கொடுக்க வேண்டும்.
இரவு நேரத்தில் இந்த நிலையில் பால் புகட்டலாம். அதுவே சிசேரியன் செய்துகொண்டவர்கள், அதிக ரத்தப்போக்கு உள்ளவர்கள் குழந்தை பிறந்த சில தினங்கள் படுத்த நிலையில் பால் புகட்டலாம்.
படுக்கை நிலை (Back Lying Position) - தலை மற்றும் தோள் பகுதிக்குச் சற்று உயரம் கொடுத்து, தாய் படுத்த நிலையில் தாயின் உடலில் குழந்தை முழுவதுமாக இருக்கும்படி பால் புகட்ட வேண்டும்.
ஆகஸ்ட் 1 - 7 வரை உலக தாய்ப்பால் வாரமாகக் கடைப்பிடிக்கப்படுகிறது.