ஜெ.ஷோ.ஜெபிஷா
மார்கழி மாதம் என்றாலே, தெய்வீக மாதம். ஸ்ரீகிருஷ்ணரே கீதையில், "மாதங்களில் நான் மார்கழி" என்கிறார்.
மார்கழி என்றால் மழை முடிந்த மாதம் என்றும் பொருள்படும். இது பனி படர்ந்த அழகிய மாதம்.
மார்கழி மாதம் பீடுடைய மாதம். 'பீடு' என்றால் பெருமை என்பது பொருள். பல உயர்வுகளை அள்ளித் தரும் மாதம் இது.
மார்கழி மாதத்தை தனுர் மாதம் என்றும் சொல்வர். சைவர்கள் இந்த மாதத்தை 'தேவர் மாதம்', என்கின்றனர்.
அதிகாலையில் தியானம், யோகா போன்ற செயல்களில் ஈடுபடுவதற்கு இது சரியான மாதம். மனது ஒருநிலைப்படும், நேர்மறை எண்ணங்களும் அதிகம் தோன்றும் மாதமிது.
கோகுலத்தில் இந்திரனின் பொறாமையால் வெள்ளம் தோன்ற, ஸ்ரீகிருஷ்ணர் கோவர்த்தன மலையைத் தாங்கி மக்களைக் காத்தது இந்த மாதமே.
மார்கழியின் சிறப்பே ஆடலரசனின் ஆருத்ரா தரிசனமும், அபிஷேகமும்தான். தில்லையில் நடராஜரின் தரிசனம் காண மோட்சமும் ஞானமும் கிட்டும் என்பது நம்பிக்கை.
மார்கழி மாதமே சொர்க்க வாசல் திறக்கும் வைகுண்ட ஏகாதசி நன்னாளும் வரும் என்பதும் சிறப்பு.
பாவை நோன்பு, காத்யாயினி நோன்பு, ஐயப்ப விரதம், முருகப்பெருமானுக்கான பூச நோன்பு என விரத மாதமாகவே இது உள்ளது.
திருமணம் ஆகாத பெண்களும் ஆண்களும் விஷ்ணுவை எண்ணி விரதமிருக்க தக்க வரன் கிட்டும் என்பது ஐதிகம்.
முருகன் படி உற்சவம், விநாயகர் சஷ்டி விரதம், அனுமன் ஜயந்தி என விழாக்களால் நிரம்பியது மார்கழி.