சைலபதி
அயோத்தி
உத்திரபிரதேச மாநிலம், பைசாபாத் மாவட்டத்தில் அமைந்துள்ளது அயோத்தி. திரேதா யுகத்தில் ஶ்ரீராமர் தசரதச் சக்கரவர்த்திக்கு மைந்தனாக அவதரித்த தலம்.
ராம பக்தர்கள் வாழ்வில் ஒருமுறையாவது தரிசிக்கத் துடிக்கும் க்ஷேத்திரம். இங்கு பிரமாண்ட ராமர் கோயில் கட்டப்பட்டு வருகிறது.
திருவள்ளூர்
திருவள்ளூர் - பல்லாயிரம் ஆண்டுகளுக்குமுன் ஸ்ரீராமன் இங்கு ஸ்ரீகோதண்டராமராக எழுந்தருளியதால், இந்தத் தலம், ‘ஸ்ரீராம க்ஷேத்திரம்’ என்ற பெயரில் அழைக்கப்பட்டது.
திருமணம் ஆகாதவர்கள் இங்கு வந்து ராமபிரானின் திருக்கரத்திலிருக்கும் வில், அம்பில் மலர்களைச் சூடி வணங்கினால், அவர்களுக்கு விரைவில் திருமணம் நடக்கும் என்பது பக்தர்களின் நம்பிக்கை.
திருவெள்ளியங்குடி.
கும்பகோணத்தில் இருந்து சோழபுரம் செல்லும் வழியில், அணைக்குடி சாலையில் இருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது திருவெள்ளியங்குடி.
திருவெள்ளியங்குடி கோலவில்லி ராமர், கண் பார்வைக் குறைபாடுகளை அகற்றும் கண்கண்ட தெய்வமாக அருள்கிறார்.
திருப்புள்ளம்பூதங்குடி
ஸ்ரீராமபிரான் ‘சக்கரவர்த்தித் திருமகன்’ என்ற பெயரில் மூலவராகவும், ‘வல்வில் ராமன்’ என்ற பெயரில் உற்சவராகவும் காட்சி தரும் திருத்தலம் திருப்புள்ளம்பூதங்குடி திருத்தலம்.
சூழ்நிலைகளின் காரணமாக, முன்னோர்களுக்குச் செய்யவேண்டிய தர்ப்பணம் கொடுக்கத் தவறியவர்கள் இந்தத் தலத்துக்கு வந்து தர்ப்பணம் கொடுப்பதன் மூலம் பித்ரு சாபத்திலிருந்து நிவர்த்தி பெறலாம்.
திருக் காழிச்சீராம விண்ணகரம்.
பெருமாள் வாமனாவதாரத்தில் முதலடியை அளக்கத் தமது இடது திருவடியைத் தூக்கியநிலையில் அருளும் தலம்தான் சீர்காழியில் அமைந்துள்ள திருக் காழிச்சீராம விண்ணகரம். இலங்கைக்குச் செல்லும் வழியில் இந்தத் தலத்தில் ராமன் மூன்று நாள்கள் தங்கியிருந்தார் என்பர்.
தொடர்ந்து ஒன்பது வெள்ளிக் கிழமைகள் கோயிலுக்கு வந்து தாயாரை வழிபட்டால், வறுமைகள் நீங்கும்; சகல செளபாக்கியங்களும் கிடைக்கும் என்பது ஐதீகம்.
திருப்புல்லாணி
ராமநாதபுரத்திலிருந்து சுமார் 12 கி.மீ. தொலைவில் உள்ளது திருப்புல்லாணி. இங்குள்ள பெருமாளை வழிபட்டு அவரின் திருவருளால் `பாணம்’ ஒன்றைப் பெற்றுச் சென்ற ராமன், அதைக் கொண்டே ராவணனை அழித்ததாகச் சொல்வர்.
இந்தத் தலத்துக்கு வந்து வழிபட்டுச் சென்றால், தடைகளும் தோஷங்களும் நீங்கிக் குழந்தைப் பேறு வாய்க்கும் என்பது நம்பிக்கை.
திருப்புட்குழி
திருப்புட்குழி- ஸ்ரீதேவி, பூமிதேவி பிராட்டிமார்களுடன் அருள்மிகு விஜய ராகவ பெருமாள் சேவை சாதிக்கும் அற்புத க்ஷேத்திரம். ஜடாயுவுக்கு, ஸ்ரீராம பிரான் இறுதிச் சடங்குகளைச் செய்து, ஸ்ரீதேவி, பூமிதேவி பிராட்டிமார்களுடன் காட்சி தந்த திருத்தலம்.
ஒவ்வோர் அமாவாசையன்றும் இங்குள்ள குளத்தில் தர்ப்பணம் கொடுப்பது மிகவும் சிறப்பு. பலரும் இங்கு வந்து தங்கள் முன்னோர்களுக்கு தர்ப்பணம் கொடுக்கிறார்கள்.