கவிதைகள்: கார்த்திக் நேத்தா
ஓவியம்: பாலா


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
குட்டி சைக்கிளும் உப்புக் காகிதமும்
ஒரு சின்ன பாத்திரத்தில்
தண்ணீர் பிடித்து வைத்துக்கொண்டு
காற்றடைத்த சைக்கிள் டயூபை
முக்கி முக்கி எடுக்கிறார்
பொட்டுக்காரத் தாத்தா
மீன் முட்டை விடுவதுபோல
டயூப் மூச்சு விடுவது அழகாய் இருந்தது
அருகிலிருந்த எனக்கு.
காற்றைப் பிடுங்கிவிட்டு
உப்புக் காகிதத்தில் மூச்சுத் துளைகளில்
தேய்த்துத் தேய்த்துப் பார்க்கிறார்
தாத்தா
அந்த வாசத்தில் சொக்கிச் சொக்கி
விழுகிறேன் நான்
பஞ்சர் ஒட்டிய பிறகு
சைக்கிளை உரியவரிடம் சேர்த்துவிட்டு
ஒரு ரூபாய் வாங்கிக்கொள்கிறார்
சைக்கிள் மிதந்து போவதை வியந்துகொண்டிருக்கும் என்னிடம்
எட்டணா தந்து
வேட்டியில் முடிந்திருந்த பீடியைப்
பற்றவைத்துக்கொண்டு
என் குட்டி சைக்கிளை நோட்டமிடத் தொடங்கினார்
எனக்கென்னமோ அன்று
உப்புக் காகிதம் வாங்கத்தான்
விருப்பமாய் இருந்தது.
சாரோனின் ரோஜா வாசம்
சாரோனின் ரோஜா
சாணி மெழுகிய வாசலில்
கோலம் போடும்போது
அப்படி அழகாய்ப் பார்ப்பாள்
பாதத்தில் ஒட்டிய சாண ஈரத்தோடு
நடக்கும்போது உண்மையாக
பாதத்தை மட்டுமேதான் பார்ப்பேன்
நெற்றி முடியை
கோல மாவு மணக்கும் விரல்கொண்டு
ஒதுக்கிவிட்டுப் பார்ப்பாள்
சாணி வாசமும் கோல மாவின் வாசமும்
அவளின் வாசமும் கலந்து
காதலோ காமமோ ஏதோ ஒன்றை
எனக்குள் தூண்டிவிட்டுப் போகும்.
இருட்டும் வரை அதே மயக்கத்தில்
கிடப்பதுதான் எத்தனை வலிய சாபம்?
கலந்துபோதல்
அணங்கே
மாதே
மகிசாசுர மத்தினியின்
மார்புச் சூடே
ஆண்டாளின்
அதர ரேகையே
உமையின் உதரக்
கரைசலே
ஆங்காரம் உரித்த
ஓங்கார மவுனமே
யானும் நீயும்
எவ்வழி அறிதும்
அப்போது போட்ட
ஆட்டுப் புழுக்கையில் ஒட்டிய
மண்போல்
நம் எண்ணம் கலந்ததுவே..