அதிர்ந்து பரவும் மருதப் பண்!
குருகு பறந்த மருத வானில் வட்டமடிக்கின்றன பருந்துகள்
கரிமுகனின் குடமுழுக்கின்பொருட்டு
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
யாழ்மீட்டிய பாணன்கள் சட்டென இசைமீண்டு
கன்னத்தில் போட்டுக்கொள்கிறார்கள் நிலை மறந்து
உழத்தியின் கசிந்து செழித்த பசும்வெளி
காலத்தின்கீழ் மிதிபடுகிறது நாதியற்று
நெல்லரிக்கிணை கொட்டிமுழக்கும் மறக்கிழத்திகள்
எல்லாருள்ளும் அமர்ந்திருக்கின்றனர் கனன்றபடி
பரத்தையின் உறவறிந்த தலைவியின் மனமென
கலவரமுறுகின்றன மூதூர் வீதிகள்
வெள்ளத்தனையது மலர்நீட்டம்தான் நாறும் கமலமே
கரைகள் உடையும் வரை அல்லது உடைக்கும் வரை
தவிர
திமிறலும் திமிறல் நிமித்தமுமே இயல்பாய்க்கொண்டதனால்
பசித்த தம் மக்களின் வயிற்றுக்கு
அவர்கள் அவ்வப்போது மாட்டுக்கறி சமைக்கிறார்கள்.
- சச்சின்

நடு விழா!
என்னைக் கொன்று அழைப்பிதழ் அடித்தார்கள்
என்னைக் கொன்று இடம் அமைத்தார்கள்
என்னைக் கொன்று மேடை சமைத்தார்கள்
என்னைக் கொன்று இருக்கை செய்தார்கள்
என்னை நட உன்னை அழைத்தார்கள்!
- சேயோன் யாழ்வேந்தன்
கேட்கக்கூடாத கேள்வி!
நசுக்குவதற்கு முன்
ஒரு முறை கண்காட்சி நடத்துவார் அப்பா
இதுதான் வெள்ளைத் தேளென.
உரலிடுக்குகளில் வாழும்
தவளைகளை கோணியுறைக் கைகளால்
அள்ளி வீசுவாள் பாட்டி.
பூச்சிகளின் குறுகுறு சத்தமில்லா இரவு
கீங்கென்றிருக்கும் எங்கள் காதுகளுக்கு.
சேவல் கோழிகளின் பசி தீர
கம்பு சிதறிக்கிடக்கும் எங்கள் வாசல்கள்.
ஊர் சுற்றி
நேரம் தவறி வரும் வளர்ப்பு நாய்க்கு
'எங்க போயித் தொலஞ்ச?’ என்று
திட்டிக்கொண்டே சோறிடுவாள் அம்மா.
தேடியலையுமென் கண்களுக்கு
டீயாத்தும் அண்ணாச்சி குறிப்பு தருவார்
'மேக்கால மேயுது உங்க கன்னுக்குட்டி...’
அடுக்குச்சுவர் தொடர் வரிசைகளை
ஊரென்று சொல்ல யோசிக்கும்
குடிபெயர்ந்து இதயம்பெயராதவரிடம்
உங்களுக்கு எந்த ஊரென
கேட்டுவிடாதீர்.
வெறும் பெயரோடு
நிறுத்தத் தெரியாது அவருக்கு.
- கனா காண்பவன்