
தலையில் கட்டியிருந்த டார்ச் வெளிச்சத்தால்,
ஒரு மாபெரும் மாளிகையைத் திறப்பதுபோல்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
மையிருட்டு பின்னிரவைத் திறந்துபோனார்கள்
முயல் வேட்டைக்காரர்கள்.
காடு விழித்துக்கொண்டதை அறிந்த ஜீவக்கூட்டங்கள்
கொத்தமல்லி பூத்திருந்த நிலத்தை,
கச்சேரி நடக்கும் மைதானம்போல் மாற்றியிருந்தன.
சில்வண்டின் உச்சஸ்தாயிக் குரல்
தூரத்து வேலங்காட்டிலிருந்து வெளியேறி
அந்தச் சமவெளியைக் கடந்துபோனது.
எழுந்து பறந்தமர்ந்த காடைகள்
இறங்கி ஓடிய பாத்தியில்
ஈர மண்ணோடு பெயர்ந்து துடித்தன மண்புழுக்கள்.
தனித்தலையும் மிரண்ட மானைப்போல்
நிலவு நின்றிருந்த திக்கில்
அடுத்தடுத்து, தொடர்ச்சியாக
தேக்கிலைகள் உதிர்வதைக் கேட்க முடிந்தது.
முயலொன்று ரவையால் துளையிடப்பட்டபோது
ஒரு கூடையைப்போல் அந்தக் காட்டைத் திறந்தது ஊதக்காற்று.
நாசியையும் நாவின் சுவை நீட்சிகளையும்
ஒரே நேரத்தில் மயக்கும் வாசனை
காடெங்கும் பரவி வியாபித்தது.
அந்த மணம்
கொத்தமல்லியுடையதுபோலவும் இருந்தது
கலவியின்போது தன் இணையை இழந்த
முயலுடையதுபோலவும் இருந்தது.