அழைப்புகள்
அழைப்புகள் என்றுமே
எதையோ உணர்த்திக்கொண்டே இருக்கும்
சில நேரங்களில் விடுபட்ட அழைப்புகள்
சில நேரங்களில் தவறிய அழைப்புகள்
பல நேரங்களில் துண்டிக்கப்பட்ட அழைப்புகள்
என்றென்றைக்கும் அழைப்புகளால்
நமக்குத் தக்கவைக்கப்படும் உணர்வுகள்
எதை நமக்கு உணர்த்துகின்றன?
முகம் மறந்து
குரல் நினைவு மட்டும்
முகம் தெரிந்து
குரலுக்காக மட்டும்
நாம் என்றுமே
ஏதோ ஓர் அழைப்புக்காகக்
காத்துக்கொண்டேதான் இருக்கிறோம்!
ஈசலுக்காக மின்கம்பிகளில்
காத்திருக்கும் டைலான்போல...
- ஜீவா

உறவு
சோகத்தின் வெம்மை விரவிய
சாவு வீட்டின் புழுக்கத்திற்கிடையில்
மின்விசிறிக்கு நேர்கீழ் நாற்காலி நகர்த்தி
சார்ஜ்போட பொத்தானைத் தேடும் அளவில்
சுருங்கியிருக்கிறது
இறந்தவருக்கும் எனக்குமான
உறவு.
-கோவிந்த் பகவான்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
சாமானியனின் அச்சம்
ஒரு தேநீர் பருகச் செல்லும் முன்பே
பாலில் கலப்படம்
தேநீர்த் தூளில் கலப்படம்
வெள்ளைச் சர்க்கரை ஆகாது
இஞ்சியைத் தோல் நீக்கி உபயோகி என
அத்தனை அச்சம் விழிக்கிறது.
கண்களை மூடிக்கொண்டு
ஒரு தேநீர் பருகவேண்டிய நிர்பந்தம்
சாமானியனுக்கு.
ஒரு கீரைக்கட்டு வாங்கப் போகும்போதும்
இயற்கை உரம், கெமிக்கல் பூச்சிக்கொல்லி
இப்படியான அச்சம்.
அமாவாசைக்கு வேறென்ன வாங்க?
ஞாயிறுக்கும் அப்படியே...
பிராய்லர் கறி, வளர்ப்பு நாட்டுக்கோழி,
ஹைபிரிட் மீன் அச்சம்,
கார்ப்பைட் கல் மாம்பழம்
செறிவூட்டிய தக்காளி என
அச்சம்... அச்சம்...
பிறகு எதைத்தான் அச்சமின்றித் தின்பது?
ஒரு கோப்பை மது?
அங்கும் தொங்கிய பிள்ளை
பேரச்சமாய் இருக்கிறது சாமானியனுக்கு.
சாமானியனை ஏன் இப்படி
அச்சப்படுத்த வேண்டும்?
சாமானியர்கள் அச்சத்தோடு இருப்பதில்
சுழல்கிறதா இரவும் பகலும்?
யார் இரவு அது?
அங்கே அச்சமின்றி
உழைப்பதும் உறங்குவதும் யார்?
- கோகுலா