மயக்கம். முழுக்க முழுக்க ஆளைத் தின்னும் மயக்கம். 37 வயதில் இந்த மயக்கம் வரலாமா என்ற கேள்வியைத் தாண்டிக் குதித்து வந்து வெகுநாளாகிவிட்டது. இது வெறும் மயக்கம் என்று மட்டும் அடையாளப்படுத்துவது நியாயமா? இல்லை, காதல் என்ற அடையாளம் சரியாகுமா?
ஹார்மோன்கள் உச்சத்தில் இருக்கும் காலத்தில், இனம் புரியாத இந்த உணர்வு ஆட்டிப்படைத்தால், அதை இனக்கவர்ச்சி, எதிர்பாலின ஈர்ப்பு என்ற படிநிலைகளைத் தாண்டி 'காதல்' என்று கௌரவமாக முத்திரை குத்தலாம். ஆனால், கல்யாணமாகி அழகான இரண்டு பெண் குழந்தைகளின் தாயாகி, கொஞ்சம் இடை பெருத்து... மார்பு தளர்ந்து, நாலைந்து நரை முடிகள் எட்டிப்பார்த்த பிறகும் காதல் வருவது சாத்தியமாகுமா? அதுவும் இன்னொருத்தியின் கணவன் மீது; ஒரு குழந்தையின் பொறுப்பான அப்பா மீது; கௌரவமான பதவியில் உட்கார்ந்திருக்கும் ஒரு புரொஃபஷனல் மீது?! ஆனால், வந்திருக்கிறதே! உடலின் ஒவ்வொரு செல்லும் மனதின் ஒவ்வோர் அசைவும், 'ஆமாம், நீ காதலில் விழுந்துவிட்டாய்' என நொடிக்கு நொடி கூப்பாடு போடுகிறதே!
சக ஊழியர் என்றாலும், என்னைவிட உயர்ந்த பதவியில் இருப்பவர். என் கேபினுக்கு எதிரில் அவர் கேபினும் என்ற ஓர் அற்பக் காரணம் மட்டுமே காதல் வருவதற்குச் சாத்தியமான விஷயம் இல்லை. என்ன விஷயம் அவர்பால் என்னை ஈர்த்தது என்று இன்னமும் எனக்கு விளங்கவில்லை. அவருடைய சாஃப்ட் அப்ரோச், கனிவான பேச்சு, இப்போதுதான் குளித்து வந்த மாதிரியான பளிச் தோற்றம், டிரெஸ்ஸிங் சென்ஸ்... எது என்னை ஈர்த்தது? கேள்விகளை அடுக்கிக்கொண்டுதான் போக முடிகிறதே தவிர, பதில் கிடைக்கவில்லை.
அவர் ஜென்டில்மேன். என்னை, தன்னுடன் பணிபுரியும் ஒரு சக ஊழியை என்கிறரீதியில்தான் பார்த்து வந்தார். நான்தான் ஆரம்பித்தேன். பாப்-அப்பில் 'ஹாய், குட் மார்னிங்' - மெசேஜ் அனுப்பினேன். பல நூறு முறை அனுப்பியும் பதில் இல்லை. அசரவில்லை. முயற்சியைத் தொடர்ந்தேன். ஒருநாள் பதில் கிடைத்தது, 'வெரி குட் மார்னிங்'.
தொடர்ந்தது பாப்-அப் மெயில், 'இன்னிக்கு உங்க ஷர்ட் சூப்பர்', 'ஓ, தேங்க்யூ' பதில். மனத்துக்குள் லிட்டர் லிட்டராகத் தேனைக் கொட்டிய உணர்வைத் தந்தது. 'இன்னிக்கு என்ன சாப்பாடு?, ஏன் டல்லா இருக்கீங்க?, ஆர் யு நாட் ஃபீலிங் வெல்?, மாத்திரை தரட்டுமா?' பாப்-அப்பில் மெசேஜ் அனுப்புவதே தினசரி வேலைகளில் ஒன்றாகிப்போனது.
ஒருநாள் பார்க்காவிட்டாலும் உயிர் போகும் அளவுக்கு வலித்தது. அன்று முழுதும் என்னை எதிலும் இயங்கவிடாமல் செய்யும் அந்த வலி. இந்த பாப்-அப் மெசேஜைத் தாண்டி, அடுத்து என்ன செய்வது என்று தெரியவில்லை. அலுவலகத்தில் மற்ற யாருக்கும் தெரியாமல் அடிக்கடி ஒருவரையருவர் கண்களாலேயே பார்த்துக்கொள்வோம், எப்போதாவது ஒரு முறை, புன்னகைப்பதே தெரியாமல் ஒரு புன்னகை. அதைத் தாண்டி என்ன செய்வது? இது எதில் போய் முடியும்?
ஏதோ ஒரு சந்தர்ப்பத்தில் இருவரும் மிக அருகில் நிற்க நேர்ந்தபோது, பதின்ம வயதில் நமக்குப் பிடித்த ஒருவர், நம் அருகில் நிற்கும்போதோ, பார்க்கும்போதோ... அடிவயிற்றில் இருந்து ஒரு மின்சாரம் கிளம்பி, உடலின் ஒவ்வொரு செல்லுக்குள்ளும் பரவி, நரம்புக்குள் விரவி, 'ஜிவ்'வென்ற உணர்வைத் தருமே, அப்படி இருந்தது அவர் என் அருகில் நின்றபோது. அந்த உணர்வு இன்னும் சில நிமிடங்கள் நீடிக்க வேண்டும் என்று மிக அருகில் நின்றேன். இது, எதில் போய் முடியும்?
இப்படி அடுத்தவர் கணவர் மீது என் காதல் பொழிந்து கொட்டினால்... என் கணவருக்கும் எனக்கும் பிரச்னை, சரியான புரிதல் இல்லை என்று நினைத்துக்கொண்டால், அது முட்டாள்தனம்!
என் கணவர் சராசரியானவரும் இல்லை; மகா புனிதரும் இல்லை. இரண்டுக்கும் இடைப்பட்டவர். எங்களுடையது 100% அரேன்ஜ்டு மேரேஜ். கல்யாணமாகி சரியாக இரண்டாவது மாதம் நான் கர்ப்பமானேன். மார்னிங் கிடினெஸால் எழுந்திருக்க முடியாமல் காலை எட்டரை வரை தூங்கி, மயக்கம் தெளிந்து எழுந்து வரும்போது கிச்சனில் தனக்குத் தெரிந்ததை ரொம்ப நீட்டாகச் சமைத்துவைத்திருக்கும் அளவுக்கு ஆசையான கணவர்.
ஒவ்வொரு முறையும், 'கூடல்' முடிந்த பிறகு 'ஆர் யூ சேட்டிஸ்ஃபைட் டியர்' என 'அங்கும்' சமத்துவம் பார்க்கிறவர். எத்தனையோ முறை, 'பாப்லோ நெரூடா இப்போ உயிரோடு இருந்தா, அவரைத்தான் நான் கல்யாணம் பண்ணியிருப்பேன். அவருக்குப் பல மனைவிகள் இருந்தாலும், 'ப்ளீஸ்! என்னையும் கல்யாணம் பண்ணிக்கோங்க'ன்னு நெரூடாவின் காலில் விழுந்து, கதறியழுது கல்யாணம் செய்திருப்பேன். அவரின் ஒவ்வொரு கவிதைக்கும், ஆயிரமாயிரம் முறை அவரை அளவில்லாமல் காதலிக்கலாம்' என்று நான் சொல்லும்போது எல்லாம் என்னைப் பைத்தியம்போல் பார்த்ததே இல்லை. நெரூடாவை இன்டர்நெட்டில் படித்தார். ஓர் அழகான மாலைப் பொழுதில், கவிஞர் சுகுமாரன் மொழிபெயர்ப்பு செய்த 'நெரூடாவின் கவிதைகள்' புத்தகத்தை என் மடியில் சஸ்பென்ஸாகவைத்து, காதல் வழிய நெற்றியில் முத்தமிட்ட அதிதீவிரக் காதலன் என் கணவர்.
'ஏன், எப்பப் பார்த்தாலும் சாம்பார்ல இப்படி உப்பை அள்ளிக் கொட்டுற, புல்ஷிட்!' என்று திட்டுகிற சராசரிக் கணவரும்கூட. சில சமயங்களில் 'உனக்கு சிலி பார்க்கணுமா, உன் காதலன் பாப்லோ நெரூடா பிறந்த நாடு... பார்க்கணுமா' எனச் சாத்தியப்படாத விஷயத்தைச் சாத்தியமாக்கும் தொனியில் கேட்கும் மாமனிதரும்தான் என் கணவர்.
|