தாத்தா, எப்போதுமே கறுப்பு, பச்சை சிவராயர் கரை அல்லது குண்டஞ்சி வேஷ்டிதான் கட்டு-வார். அதில் அரை டஜன்... நல்ல கிளாக்ஸோ மல் ஜிப்பா ஆறு... ரெடியானது.
''குளிரப் போறது...'' என்று பதறினாள் பாட்டி.
''போடி பைத்தியமே.. இப்படி மெல்லிசா இருந்-தாத்-தான் ஒரு தடவை குளிச்சுட்டு வந்தவுடனேயே காயப் போட வசதியா இருக்கும்.''
''அப்ப நான் பட்டுப் புடவை எடுத்துக்க வேண்டாமா...''
''ரெண்டு வச்சுக்கோ. மீதிய சின்னாளம்பட்டுல எடுத்துக்கோ. அருவி விழற வேகத்துல, புடவை எல்லாம் தார் தாராக் கிழிஞ்சுடும்.''
''தலை துவட்டிக்கற துண்டு?''
''அங்கேயே கிடைக்கும். அதெல்லாம் மூட்டை சேர்க்காதே...'' டூர் டிப்ஸ்களை கொட்டினார் தாத்தா.
''எதுக்கும் கொஞ்சம் பட்சணம்... குழந்தைகளோட போறோம். 'குழந்தை பசியோ, கொள்ளித் தேளோ'னு சொல்லுவா...''
- கட்டிலம்மாவுக்கு உற்சாகம் பிய்த்துக் கொண்டு விட்டது. முள் தேன்குழல், மனோகரம், தேங்காய் பர்ஃபி, தட்டை.
போதாக்குறைக்கு என் அம்மா வேறு, கட்டிலம்மா-வுக்கு தபால் போட்டிருந்தாள்...
'சமையல் மாமிகிட்ட சொல்லி, கொஞ்சம் புளிக்காய்ச்சல், மாவடு, நார்த்தங்காய் எடுத்துக்கோ. உன் பெரிய டிபன் கேரியர். கூஜா மறக்காதே. சீஸன் சமயத்துல குற்றாலத்துல ஆகாரம் சரியா இருக்காதுனு இங்கே எல்லாரும் சொல்றா. உன் மாப்பிள்ளை ஒருவேளை சாப்பாடு சரியில்லைனாலும் ருத்ரதாண்டவம் ஆடிடுவார்.'
கடிதத்தின் விளைவாக புளிக்காய்ச்சல், தக்காளித் துவையல், தேங்காய் பொடி, சின்னதாக ஒரு ஸ்டவ், இரண்டு உருளை, ஒரு ருக்மிணி குக்கர்... எல்லாம் ரெடி செய்துவிட்டாள் கட்டிலம்மா!
கோடை விடுமுறை கரைந்து, இதோ... இதோ... என் அம்மா, அப்பாவும் வந்தாகிவிட்டது. மறுநாள் காலையில் திருநெல்வேலி பாசஞ்சரில் பிரயாணம்.
எத்தனை ஏற்பாடுகள்..? ஒரு வாரம் வீட்டை விட்டுப் போவதென்றால் எதையெல்லாம் யோசித்து யோசித்துத் திட்டமிட வேண்டியிருக்கிறது..?!
சமையல் பாட்டிக்கும், வேலைக்காரி கண்ணம்-மாவுக்கும் ஒரு வாரம் லீவு கொடுத்து அனுப்பியாகி விட்டது. பால்கார காபாலியிடம் அன்றிலிருந்து ஏழாம் நாள் சாயந்திரம் பக்கத்து வீட்டில் பால் கொண்டு வந்து கொடுத்தால் போதும் என்று சொல்லியாகி விட்டது.
ஏரியா கூர்காவுக்கு ஐந்து ரூபாய்... எங்கள் வீட்டுப் பக்கம் வந்தால் மட்டும் வாசல் கேட்டில் இரண்டு தரம் பலமாக சத்தம் செய்யும்படி!
தாத்தாவும் அவர் நண்பர் ராமண்ணாவும் போய், 'வாடகை டாக்ஸி இரண்டு, விடிகாலையில் வர வேண்டும்' என்று சொல்லி வந்துவிட்டனர்.
அடுத்த அரை மணி நேரத்திலேயே இரண்டு பெரிய டாக்ஸிகள் வீட்டு வாசலில் வந்து நிற்க...
ராமண்ணா தாத்தா 'குடுகுடு'வென வாசலுக்கு ஓட...
கார் கதவுகளை அகலத் திறந்து கொண்டு, நெல்லிக்காய் மூட்டையை அவிழ்த்தாற் போல...
தாத்தாவுடைய... தாத்தாவுடைய... உறவு முறைகள்... இஷ்டமித்ர பந்துக்கள்... கஷ்டம் தரவென்றே வந்திறங்கி விட்டன.
''மணி சௌக்கியமாடா..? ஜானகி, என்ன மலைச்சுப் போய் நிக்கறே..?! சுப்புணி சொன்னான்... ஒரு லெட்டர் போட்டுட்டுப் போகலாம்னு. நான்தான் வேணாம்னுட்டேன். நம்ம வீட்டுக்கு வர்றதுக்கு... அட, பட்டா... குழந்தைகள் எல்லாரும் இங்கேதான் இருக்காங்களா... சரியாப் போச்சு! பருத்தி, புடவையாக் காய்ச்சாப் போல! அடியே... சரஸ்வதி... எல்லாரையும் இங்கேயே பார்த்துடலாம்...''
சொன்னால் நம்ப மாட்டீர்கள்... கிட்டத்தட்ட ஏழெட்டு பெரிய உருப்படிகள். நாலைந்து வாண்டுகள்!
இரவு எட்டு மணிக்கு மேல் அம்மாவும், கட்டிலம்மாவும் அவர்கள் கட்டி வைத்திருந்த சாக்கு மூட்டையைப் பிரித்து, ருக்மிணி குக்கரை எடுத்து சாதம் வடித்து, புளிக்காய்ச்சலைப் போட்டுக் கலந்து, வடகத்தைப் பொரித்துக் கொடுத்ததைச் சொல்வதா? விடிகாலை இருட்டில், தலையில் துண்டைக் கட்டிக் கொண்டு, தாத்தாவும், ராமண்ணாவும் பால்கார கபாலியைத் தேடிச் சென்றதை சொல்வதா? வந்திருந்த வாண்டுகள் எனக்கும் என் தங்கைக்குமாக எடுத்த சாட்டீன் பாவாடை- சட்டையை மாட்டிக் கொண்டு ஆனந்தப்பட்டதை சொல்வதா?
''அம்மாமி... எப்படியும் ஒரு தடவை மெட்ராஸைப் பார்த்துடணும்னு ஆசை. அம்மாவுக்கு, தன் தம்பியோட வீட்டையும், தோட்டத்தையும் தன் நாட்டுப் பெண்களுக்குக் காட்டணும்னு கழுத்து மட்டும் ஆதங்கம். அதான் கிளம்பிவந்துட்டம்...''
- அத்தைப் பாட்டியின் இளைய மகன் பேசிக் கொண்டிருக்கையிலேயே, தாத்தா ஏற்பாடு செய்திருந்த இரண்டு டாக்ஸிகளும் வந்ததைச் சொல்வதா?
எங்கள் கண்களில் குற்றால பொங்குமாங்கடல் பொங்கிப் பாய ஆரம்பித்ததைச் சொல்வதா?!
|