ஆற்றின்
நீளமும்
கடலின் எல்லைகளும்
ஒரு கெண்டை மீனின்
நீச்சல் வட்டத்துக்குள் சிக்குவதில்லை
புல்லின் தலைக்கு
அகப்படும் வானமும்
வேருக்குப் பிடிபடும்
மண்ணும்தான்
எத்தனை சிறியது?
ஒரு பிறப்புக்கு
நூற்றாண்டு மனிதர்களின் சிரிப்பும்
ஒரு மரணத்துக்கு
யுகயுகத்து மனிதர்களின் அழுகையும்
எந்தளவு புரிபடும்? தும்பிக்கையால் சுமைகளை
தூக்கிச் சுருட்டிக்கொண்டு
நெஞ்சிலிருந்து மூச்சுப் பாதையில்
ஏறுகின்றன
ஏகாந்த யானைகள்
சுமைகளை அவை
இறக்கவும் இல்லை
நெஞ்சுக்கும் நாசிக்குமான
அதன் மிதித்தல்
ஓயவும் இல்லை!
பறந்துவிடத்
தவமிருக்கும் மனசு
கனவுகளைச்
சுமந்திருக்கும் உயிர்
இரண்டுக்கும் பொருந்தாமல்
எழுதப்படாத சட்டங்களால்
சீசாவில் அடைக்கப்பட்டுள்ளது
பெண் என்னும் உடல்
அறிவும் மனசும்
லட்சியமும் உடலும்
ஒவ்வொரு திசைநின்று
மோதிக்கொள்ளும்போது தெரியும்
பெண் என்றால் என்னவென்று!
|