அன்பானவர்களே
இன்றைக்கு யாரையெல்லாம் கொல்லப்போகிறீர்?
இன்றைக்கான பட்டியலில் நானும் இருப்பேனாகில்
எனது வரிசை எண்ணை முன்னிழுங்கள்
எனக்குள்ள வாய்ப்பனைத்தையும் பரிசீலித்தாயிற்று
வாழ்தலின் ஒளி மங்குகையில்
சடுதியில் கொல்லப்படுவதுதான் குறைவான வாதை
ஓ என் பெயரைக் கேட்கிறீர்களா?
என்ன பெயரிலிருந்தாலும் கொல்லப்போகிறீர்
எதற்கிந்த கருணை?
பொதுப்படைத் தோற்றமும்
சட்டென பிரித்தறியவியலாததுமான என் பெயரை
முழுதாகச் சொல்லி முடிக்கும்வரை
சுடுவிசையை முடுக்காதிருப்பது நேரவிரயம்
சுடுங்கள்,
முச்சந்தியில் கட்டிவைக்கப்பட்டு
ஆயிரம் கல்லடிக்கு அலறிச் சாகும்
நேரலைக் காட்சியாவதைவிட
நெற்றிப்பொட்டிலோ இருதயத்திலோ
ஒற்றைக்குண்டில் டப்பென மாய்வது சுகம்

நாள்நட்சத்திரம் பாராத என்னைக் கொல்வதற்கு
உகந்த நாளெதையும் குறித்துவைத்திருக்கிறீர்களா?
பதற்றங்களை முடிவுக்குக் கொண்டுவரும் அந்நன்னாளில்
எனது நண்பர்களைப்போலவே என்னையும்
நகரச்சதுக்கத்தின் நடைப்பயிற்சிப் பூங்காவில்
வீட்டு வாசலில்
நாடாளுமன்றத்தின் நடுமண்டபத்தில்
அட, நீதிபதியின் கண்முன்னே கொன்றாலும்
உம்மை தடுக்கவல்லார் எவருமில்லை
வேறுபட்ட அடையாளங்கள்
உங்களால் வெறுக்கத்தக்க என் விருப்பங்கள்
உங்களது முழக்கங்களைத்
திருப்பி உச்சரிக்க மறுக்கும் கீழ்ப்படியாமை
உயிர்ப்பிச்சைக்கு மன்றாடாது
தன்மதிப்பின் வலுவில்
இவ்விதமாய் கவிதையும் எழுதி ஆத்திரமூட்டுவது
-உங்களது கொலைப்பட்டியலைவிடவும் நீள்கிற
எனது குற்றங்களின் பட்டியலால்
துல்லியத் தாக்குதலுக்கான நியாயத்தைப் பெறுகிறது
அதிகாரமூறிய உமது தோட்டா
தெறிக்கும் எனது ஒவ்வொரு சொட்டு ரத்தமும்
பெருங்கடலாகிப் பாய்வதன்றி வேறு வழியில்லை
உமது கிரீடங்களை மூழ்கடிக்க.
