மெளனமாக இருப்பதற்கும்
மெளனமாக ஆக்கப்படுவதற்குமிடையில்
பரவும் ஒலியைக் கேட்டுக்கொண்டிருக்கிறது
என் நிலம் மெளனமாய்.
ஆயிரமாயிரம் ஆண்டுகளாய்
உறைந்துபோன மொழி சலசலக்கிறது
இல்லாத நதிகளில்.
மிகவும் தூரமான மிகவும் ஆழமான
மருத நினைவுகளைக் களைகளென
உழுது அழிக்கின்றன ட்ராக்ட்டர்கள்.
நினைவில் நதிகொண்ட என் வேந்தியின்
கால்களில் முளைக்கின்றன உலோக வேர்கள்.
சிவப்பு விருமானைத் தொடர்வது
என் வேந்தனுக்கு ஒரு தட்பவெட்பக் கோட்பாடு
அதன் இன்மை அவனுக்குப் புரிபடவில்லை
கீரைப்பூக்களை மறக்கத் தொடங்கிவிட்டான்
அடியுரதிற்கான காரணங்களைத் தவறவிடுகிறான்
விற்பனையாளனுக்கு ஒரு டீ வாங்கிக் கொடுத்து
ஞாபகத்தின் துருவேறிய தடுமாற்றத்தை
காய்ந்த புன்னகையில் மறைத்துக்கொண்டு
மறுபடியும் கேட்கிறான் என்ன செய்ய வேண்டுமென்று
தனது மனைவியிடமிருந்தும் அதிகாரியிடமிருந்தும்
தொடர்ந்து கட்டளைகளைப் பெற்றுக்கொண்டிருக்கும்
விற்பனையாளன் சூடான டீயை வேந்தனின்
முகத்தில் துப்புவதற்கான ஒத்திகையிலிருக்கிறான்
நினைவில் மண்கொண்ட என் வேந்தனின்
கனவில் பூக்கிறது எருக்கலம்.

அதிகாரம் மிக்கது தும்பை
வெண்மையாய் பிரகாசிக்கிறது
பட்டாம்பூச்சிகளுக்குத் தேனைத் தந்துவிட்டு
குழந்தைகளிடம் தாத்தாச்செடிகளைக்
காட்டிக்கொடுக்கிறது.
நிலம் என்பது பண்பாட்டுச் சந்தை
அதில் என் வேந்தனின் உடல் முதலாகிறது
என் வேந்தியின் கனவு கழிவாகிறது
லாபத்தின் நதி பாய்கிறது.
மருதத்தின் உச்சிக்கிளையில்
ஒரு மரநாய் ஊளையிடுகிறது
காலகாலமாக விசும்பு நோக்கி.
நினைவில் சொல்கொண்ட எம் கவிஞர்
திணை பிரிக்கின்றனர் போதத்தில்.
எம்மனார் வேந்தி காதலி
எம்மனார் வேந்தன் காதலன்
தவளைகள் தெறித்துக் கரைவிழ
நதியினடியில் புணர்ந்தனர் மகிழ்ந்தனர்
பிறந்தது மருதம்.
பழுப்பும் அடர்ந்த கறுப்பும் சேர்ந்து மின்னும்
அவர்களின் கண்களுக்கு பூர்வ வயது
நிலத்தை உப்பிட்டு வளர்த்தார்கள்.
அவர்கள் தங்கள் உடம்பிலிருந்தே
வனைந்தார்கள் நிலத்தை
அதில் ஒரு மண்கூட்டை.
நினைவில் பாதம்கொண்ட மண்
மருவிக்கொண்டிருக்கிறது கந்தகமாக.
அவர்கள் எதிலும் பங்குகொள்வதில்லை
மாறாக அதன் பங்காகவே இருந்தார்கள்
தங்களையே விதைத்தார்கள்
தங்களையே வளர்த்தார்கள்
தங்களையே தின்றார்கள்
தங்களையே பெற்றார்கள்
தங்களையே மரபாக்கினார்கள்
நினைவில் மரபைக்கொண்ட மனிதன்
உண்மைக்கு ஓரடி முன்னால் இருக்கிறான்.
