<p><strong>கணம்</strong></p><p><strong>பெ</strong>ற்றோரை அழைத்து வர</p><p>பணிக்கப்பட்டு</p><p>தலைமையாசிரியர் அறைமுன்பு</p><p>நின்றுகொண்டிருக்கும் மாணவன்</p><p>மகளைச் சுமந்தபடி</p><p>உச்சியேகும் ஊஞ்சல்</p><p>தரைக்கு வர</p><p>கைகள் விரித்துக்</p><p>காத்திருக்கும் தகப்பன்</p><p>மனைவியின் மருத்துவ</p><p>அறிக்கையை உற்று நோக்கும்</p><p>மருத்துவரின் முகத்தைப்</p><p>பார்த்திருக்கும் கணவன்</p><p>தூரத்து உறவினர்</p><p>வரும் வரை</p><p>சிதையேறாமல்</p><p>கண்ணாடிப் பேழைக்குள்</p><p>நீண்டிருக்கும் பிரேதம்</p><p>எல்லாவற்றிற்கும் முன்பாக</p><p>காத்திருக்கிறது</p><p>திடுக்கிடும் ஒரு கணம்.</p><p><strong>- கே.ஸ்டாலின்</strong></p><p><strong>எல்லா மூங்கில்களும்...</strong></p><p><strong>மூ</strong>ங்கில் அனைத்தும்</p><p>இசைத்திருப்பதில்லை</p><p>சில மூங்கிலாகவே</p><p>இருந்திருக்கலாம்</p><p>சில கூரையேறி சூரியனுக்குத்</p><p>தடைபோட்டிருக்கலாம்</p><p>சில வயோதிகன் கூனுக்கு</p><p>முட்டுக்கொடுத்திருக்கலாம்</p><p>சில கன்னியின்</p><p>கைகளில் தாண்டியா ஆடியிருக்கலாம்</p><p>சில கூடையாகி சுமையைத்</p><p>தாங்கியிருந்திருக்கலாம்</p><p>எனவே எளிதில்</p><p>ஏற்றிவிடாதீர்கள்</p><p>அகராதிகளில்</p><p>மூங்கிலென்றால் வெறும்</p><p>இசைத்திருப்பதென...</p><p><em><strong>- கெளந்தி மு</strong></em></p>.<p><strong>கோடை</strong></p><p><strong>கொ</strong>ளுத்தும் வெயிலில்</p><p>எல்லோரும்</p><p>பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறார்கள்</p><p>அவரவர் நிழலை மிதித்தபடி</p><p>வெயில் தாக்கும் இலைகளின் </p><p>கண்ணீர்க் குளுமையே</p><p>மரத்தடி நிழல்களாகின்றன</p><p>வியர்வைதான்</p><p>வெயில்காலத்திற்கான</p><p>மழைத்தூறல்</p><p>தகிக்கும் வெக்கையில்</p><p>வேலை செய்பவர்களுக்குக்</p><p>கொடுக்கப்படும் கூலியென்பது</p><p>வெயிலுக்கானது மட்டுமே</p><p>கோடைக்காலத்தின்</p><p>சொற்கள்கூட</p><p>வெம்மை தோய்ந்திருக்கின்றன</p><p>வெயிலென்பது</p><p>யாரையும்</p><p>பட்டப்பகலிலேயே</p><p>பயப்பட வைக்கும்</p><p>தீயின் குழந்தை.</p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p><p><strong>பிம்பம்</strong></p><p><strong>க</strong>தவருகே நின்று</p><p>கத்திக்கொண்டிருக்கும்</p><p>பூனையின் கண்களுக்குள்</p><p>மீன்தொட்டியின் பிம்பம்</p><p>கையளவு நீரில்</p><p>கச்சிதமாய் நீந்தும்</p><p>மீனின் வாயருகே</p><p>உடையும் நீர்க்குமிழிகள் </p><p>என் இதயத்துடிப்பு</p><p>அதிகரித்தபடியே</p><p>அறைக்குள்.</p><p><em><strong>-சிவ ஞானம்</strong></em></p><p><strong>தொட்டி இதயம்</strong></p><p><strong>ஆ</strong>றடி நீளம்</p><p>இரண்டடி அகலக் கடலுக்குள்</p><p>கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு</p><p>தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக</p><p>உணவு உருண்டைகளின் மீது </p><p>பூசிக்கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை</p><p>நீள்பாதை நோக்கி மட்டுமே</p><p>சப்பையாய் வளர முடிந்ததில்</p><p>ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க</p><p>மாதம் இரண்டு முறை வந்து போகும்</p><p>மன அழுத்த டாக்டர்</p><p>நிவாரணி ஊற்றிச் செல்கிறார்</p><p>அந்த மீனுக்குத் தெரியவில்லை</p><p>தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்</p><p>தன் மன அழுத்தத்தால்</p><p>அந்த டாக்டரின் மன அழுத்தம் </p><p>கொஞ்சம் நீங்கும் என்றும்</p><p>அடுத்த முறை வரும் டாக்டரிடம்</p><p>நிச்சயம் கேட்க வேண்டும்</p><p>‘இந்தக் கடலை மீறி வளர</p><p>நான் என்ன செய்ய வேண்டும்?’</p><p><em><strong>- தக்ஷன்</strong></em></p><p><strong>அதனதன் நிமித்தம்</strong></p><p><strong>ஒ</strong>ரு பூவுக்குக்கூட</p><p>பறக்கும் ஆசை இல்லை</p><p>ஓர் இலைக்குக்கூட</p><p>பூவின் வண்ணத்தில்</p><p>பொறாமை இல்லை</p><p>ஒரு வேருக்குக்கூட</p><p>ஆகாயம் பார்க்கும்</p><p>ஆசை இல்லை</p><p>ஒரு கொடிக்குக்கூட</p><p>கிளையின் உறுதியில்</p><p>கவலை இல்லை</p><p>ஒன்றைத் தாண்டி</p><p>ஒன்றை விரும்பினால்கூட</p><p>அது பேராசை என்ற எண்ணம்தான்</p><p>வாழ்தலின் ஆதாரம்.</p><p><em><strong>-இளந்தென்றல் திரவியம்</strong></em></p>
<p><strong>கணம்</strong></p><p><strong>பெ</strong>ற்றோரை அழைத்து வர</p><p>பணிக்கப்பட்டு</p><p>தலைமையாசிரியர் அறைமுன்பு</p><p>நின்றுகொண்டிருக்கும் மாணவன்</p><p>மகளைச் சுமந்தபடி</p><p>உச்சியேகும் ஊஞ்சல்</p><p>தரைக்கு வர</p><p>கைகள் விரித்துக்</p><p>காத்திருக்கும் தகப்பன்</p><p>மனைவியின் மருத்துவ</p><p>அறிக்கையை உற்று நோக்கும்</p><p>மருத்துவரின் முகத்தைப்</p><p>பார்த்திருக்கும் கணவன்</p><p>தூரத்து உறவினர்</p><p>வரும் வரை</p><p>சிதையேறாமல்</p><p>கண்ணாடிப் பேழைக்குள்</p><p>நீண்டிருக்கும் பிரேதம்</p><p>எல்லாவற்றிற்கும் முன்பாக</p><p>காத்திருக்கிறது</p><p>திடுக்கிடும் ஒரு கணம்.</p><p><strong>- கே.ஸ்டாலின்</strong></p><p><strong>எல்லா மூங்கில்களும்...</strong></p><p><strong>மூ</strong>ங்கில் அனைத்தும்</p><p>இசைத்திருப்பதில்லை</p><p>சில மூங்கிலாகவே</p><p>இருந்திருக்கலாம்</p><p>சில கூரையேறி சூரியனுக்குத்</p><p>தடைபோட்டிருக்கலாம்</p><p>சில வயோதிகன் கூனுக்கு</p><p>முட்டுக்கொடுத்திருக்கலாம்</p><p>சில கன்னியின்</p><p>கைகளில் தாண்டியா ஆடியிருக்கலாம்</p><p>சில கூடையாகி சுமையைத்</p><p>தாங்கியிருந்திருக்கலாம்</p><p>எனவே எளிதில்</p><p>ஏற்றிவிடாதீர்கள்</p><p>அகராதிகளில்</p><p>மூங்கிலென்றால் வெறும்</p><p>இசைத்திருப்பதென...</p><p><em><strong>- கெளந்தி மு</strong></em></p>.<p><strong>கோடை</strong></p><p><strong>கொ</strong>ளுத்தும் வெயிலில்</p><p>எல்லோரும்</p><p>பரபரப்பாக நடந்துகொண்டிருக்கிறார்கள்</p><p>அவரவர் நிழலை மிதித்தபடி</p><p>வெயில் தாக்கும் இலைகளின் </p><p>கண்ணீர்க் குளுமையே</p><p>மரத்தடி நிழல்களாகின்றன</p><p>வியர்வைதான்</p><p>வெயில்காலத்திற்கான</p><p>மழைத்தூறல்</p><p>தகிக்கும் வெக்கையில்</p><p>வேலை செய்பவர்களுக்குக்</p><p>கொடுக்கப்படும் கூலியென்பது</p><p>வெயிலுக்கானது மட்டுமே</p><p>கோடைக்காலத்தின்</p><p>சொற்கள்கூட</p><p>வெம்மை தோய்ந்திருக்கின்றன</p><p>வெயிலென்பது</p><p>யாரையும்</p><p>பட்டப்பகலிலேயே</p><p>பயப்பட வைக்கும்</p><p>தீயின் குழந்தை.</p><p><em><strong>- சாமி கிரிஷ்</strong></em></p><p><strong>பிம்பம்</strong></p><p><strong>க</strong>தவருகே நின்று</p><p>கத்திக்கொண்டிருக்கும்</p><p>பூனையின் கண்களுக்குள்</p><p>மீன்தொட்டியின் பிம்பம்</p><p>கையளவு நீரில்</p><p>கச்சிதமாய் நீந்தும்</p><p>மீனின் வாயருகே</p><p>உடையும் நீர்க்குமிழிகள் </p><p>என் இதயத்துடிப்பு</p><p>அதிகரித்தபடியே</p><p>அறைக்குள்.</p><p><em><strong>-சிவ ஞானம்</strong></em></p><p><strong>தொட்டி இதயம்</strong></p><p><strong>ஆ</strong>றடி நீளம்</p><p>இரண்டடி அகலக் கடலுக்குள்</p><p>கட்டைவிரல் அளவில் நீந்தத் தொடங்கிய மீனுக்கு</p><p>தனக்கெனத் தூவப்படும் பிரத்யேக</p><p>உணவு உருண்டைகளின் மீது </p><p>பூசிக்கிடக்கும் அதிர்ஷ்டங்கள் புரிவதில்லை</p><p>நீள்பாதை நோக்கி மட்டுமே</p><p>சப்பையாய் வளர முடிந்ததில்</p><p>ஏற்பட்ட மன அழுத்தத்தைப் போக்க</p><p>மாதம் இரண்டு முறை வந்து போகும்</p><p>மன அழுத்த டாக்டர்</p><p>நிவாரணி ஊற்றிச் செல்கிறார்</p><p>அந்த மீனுக்குத் தெரியவில்லை</p><p>தன்னால் ஒரு டாக்டர் உருவாகியிருப்பதும்</p><p>தன் மன அழுத்தத்தால்</p><p>அந்த டாக்டரின் மன அழுத்தம் </p><p>கொஞ்சம் நீங்கும் என்றும்</p><p>அடுத்த முறை வரும் டாக்டரிடம்</p><p>நிச்சயம் கேட்க வேண்டும்</p><p>‘இந்தக் கடலை மீறி வளர</p><p>நான் என்ன செய்ய வேண்டும்?’</p><p><em><strong>- தக்ஷன்</strong></em></p><p><strong>அதனதன் நிமித்தம்</strong></p><p><strong>ஒ</strong>ரு பூவுக்குக்கூட</p><p>பறக்கும் ஆசை இல்லை</p><p>ஓர் இலைக்குக்கூட</p><p>பூவின் வண்ணத்தில்</p><p>பொறாமை இல்லை</p><p>ஒரு வேருக்குக்கூட</p><p>ஆகாயம் பார்க்கும்</p><p>ஆசை இல்லை</p><p>ஒரு கொடிக்குக்கூட</p><p>கிளையின் உறுதியில்</p><p>கவலை இல்லை</p><p>ஒன்றைத் தாண்டி</p><p>ஒன்றை விரும்பினால்கூட</p><p>அது பேராசை என்ற எண்ணம்தான்</p><p>வாழ்தலின் ஆதாரம்.</p><p><em><strong>-இளந்தென்றல் திரவியம்</strong></em></p>