தெய்வத்தின் மனசு
தினமும் பூமாலை
சாத்தியும்
வாரம் தவறாமல்
அபிஷேகம் நடத்தியும்
மாதத்திற்கு ஒருமுறை
பட்டாடைகள்
வாங்கித் தந்தும்
அருகிலேயே அமர்ந்து
வணங்கியும்கூட
இன்னும் வேண்டுதல்
நிறைவேறவில்லை என
அலுத்துக்கொள்பவர்களுக்குத்
தெரிய வாய்ப்பில்லை
வணங்க நேரமின்றி
அவசர அவசரமாய்
கோபுர வாசலருகே
கன்னத்தில் போட்டுக்கொண்டு
வேலைக்கு ஓட்டமெடுக்கும் ஒருவனின்
பிரார்த்தனைக்கு செவி சாய்க்க
வெளியிலேயே கால் கடுத்தபடி
நின்றுகொண்டிருக்கிறது
தெய்வம் என்று.
தி.கலையரசி
பூச்சாண்டி
முன்பு
பூச்சாண்டிகளின் உலகுக்குள்
குழந்தைகள் நுழைவதில்லை
அந்த
ரகசிய உலகின் கதவுகள்
திறக்கப்படாமலேயே
வளர்ந்துவிட்டார்கள் குழந்தைகள்
இன்று
பூச்சாண்டிகள்
தம் உலகிலிருந்து
வெளி வருவதேயில்லை
கார்ட்டூன் பார்த்தபடியே
இரவு உணவு
அனிமேஷன் வில்லன்களின் குகை
ரிமோட்டின் ஒற்றைப் பொத்தானில்
திறந்துகொள்கின்றன
வெறிச்சோடிய
முன்னிரவு நேரத் தெருக்களில்
சத்தமின்றிக் கடந்துபோகும்
பின்னிரவுப் பூச்சாண்டிகளை
ஊளையிட்டு வழியனுப்புகின்றன
தெருநாய்கள் மட்டுமே.
தக்ஷன்

முகங்கள், கதைகள்!
பத்து பன்னிரண்டு வயது மகன்
மகனாகத்தானிருக்கும்
இல்லாவிட்டால் என்ன
கலக்கத்துடன்
ஏதும் செய்வதறியாது நிற்பதும்
அவளைப் பார்க்கும் தொனியும்
அப்படித்தான் இருந்தன
குழந்தைகள் துணிக்கடை முன்
பைக் நிறுத்தும் மேட்டில்
அமர்ந்திருந்தாள் அம்மா
அம்மாவாகத்தான் இருக்க முடியும்
யாருக்கு அம்மாவாக இருந்தால் என்ன
விரித்துப்போட்ட தலைமயிரும்
இரவின் சாயம் போகாத நைட்டியும்
கண்ணில் துளிக் கண்ணீரும்
வாழ்க்கை வெறுத்துப்போய்விட்டது
என்பதை ஒரு நொடியில் வெளிப்படுத்திவிட்டன
கடந்துதான் வந்துவிட்டேன்
ஒரு சில நொடிகளில்
அந்த முகங்களை
கடக்க முடியவில்லை
அந்தக் கதைகளை
நானும் ஒரு மகன்தானே!
தேடன்
பால்யகால தாயின் சாயல்
நதியின்
புடவை தலைப்பைப் பிடித்து
விளையாடிக்கொண்டிருக்கின்றன
மீன் குஞ்சுகள்
நிம்மதியாக
தன் அமைதியை
இழந்துகொண்டிருக்கும்
நதிக்கு
அப்படி என் பால்யகாலத்
தாயின் சாயல்.
- ச.அர்ஜூன்ராச்