சன்னல் வழியாக
சன்னல்வழியாக
வீட்டுக்குள்ளே எட்டிப்பார்க்கிறது
வெயில்
இசையொன்றை
அனுப்பி வைக்கிறது வேப்பமரக் குயில்
நுங்கு விற்றுப் போவதைத்
தெரியப்படுத்திப் போகிறான் வியாபாரி
தன் பயணத்தை
தட தட சப்தங்களோடு தெரிவிக்கிறது
தூரத்து ரயில்
பக்கத்து வீட்டில்
கோழி பிரியாணி என்று
அறிவிக்கிறது வாசம்
கடைசி நாள்களில்
வீட்டை விட்டு
வெளியே செல்ல முடியாதவனுக்கு
கண்களாகவும் காதாகவும் நாசியாகவும்
ஆகிவிடுகிறது சன்னல்.
- சௌவி
நினைவுக் குறிப்புகள்
மூன்றாம் வகுப்பு ஆசிரியரை
தற்செயலாகப் பார்க்க நேர்ந்தது
நலம் விசாரிப்பில்
யாரோ ஒருவரின் வாழ்க்கையில்
தான் கூடுதலாக இருப்பதாகச் சொன்னார்
மேற்கொண்டு எதையும் எழுத
இடமில்லாமல் இருந்தது அவர் முகத்தில்
நினைவுக் குறிப்பிலிருந்து
என்னை எடுக்கமுடியவில்லை அவரால்
இருப்பினும்
தொடர்பு எண்ணைக் கேட்டு
எழுதத் தொடங்கிய கணத்தில்
நினைவுக் குறிப்பிலிருந்து வெளிவந்தது
அந்த மூன்றாம் வகுப்பிலிருந்து
என் கையெழுத்து.
- ஆண்டன் பெனி

கீழிறங்கும் அச்சம்
மாலை ஆறு மணி
பத்திரமாகப் பிடித்துக்கொண்டேன்
ஏணியை
பதற்றமாக இருந்தது
என் பால்யம்
மின்கம்பத்தில் ஏறும்
மின் வினைஞரைப் பார்த்தல்ல
அவர் பிய்ந்த கம்பியிழையை
செப்பனிட்டு
மின் இணைப்பைத் தந்ததும்
அதுவரை வேடிக்கை பார்த்திருந்த
சிட்டுக்குருவி
கூடடையப் புறப்பட்டது
வானின் முற்றத்தில்
முகமொளிரத்தொடங்கியது நிலவு
மெல்ல இறங்கியது பயம்
வானையே துழாவிக்கொண்டிருந்தது
என் நிம்மதி.
- ச.அர்ஜூன்ராச்
வனமும் மனமும்
ஆலகால விருட்சத்தின் சிலிர்ப்பு மழையே
ஆழி மழையின் அகங்காரத்தைக் கட்டுக்குள் வைத்து
அவிழ்த்து விடுகிறது
சிங்கத்தின் கர்ஜனைகள்
வனங்களின் எத்தனை பரப்பை
ஆண்டுவிட முடியும்
சில்வண்டுகளின் ரீங்காரம்போலே
நான்கு டன்
யானைகளின் காலுக்கு அழியாத புல்வெளிகள்
50 கிலோ மனிதனின் காலுக்கு
அஞ்சுகின்றன
சிதறிக் கிடக்கும்
தேநீரை உதறிவிட்டு
ஒரு கோப்பைத் தேநீருக்கு
ஆசைப்பட்டு
இறந்துபோன ஈயைப்போல்
வனம் விட்டு ஊருக்குள் தாவுது மனம்!
- இளந்தென்றல் திரவியம்