யானை வரைவதற்காக
ஒரு வெள்ளைத்தாளைக் கையில் வைத்திருந்தேன்...
முதலில் வந்த நண்பர்
தூண்கள் நான்கை வரையுங்கள்
அவை கால்களாக மாறிவிடும் என்றார்.
இன்னொரு நண்பர்
இரண்டு முறங்களைக்
காதுகளாக மாற்றிவிடலாம் என்று
அவர் திட்டத்தை விற்றுப் போனார்.
இசைமீது பிரியம் கொண்ட கடம் வாசிக்கும் நண்பர்
பானையை வரையுங்கள்
வயிற்றோடு பொருத்திக்கொள்ளலாம் என்றார்.
விவசாயம் தெரிந்த தோழர்
கீற்றுகள் தவிர்த்த
தென்னையைத் தலைகீழாக வரையுங்கள்
தும்பிக்கையாக்கிக்கொள்வோம் என்றார்.
இப்போது என்னிடம் நான்கு தூண்களும்,
இரண்டு முறங்களும்
தலைகீழாக ஒரு தென்னை மரமும்,
ஒரு பானையும் உள்ளன.
யாரும் யானை வரைவதற்கு முன்
ஒரு காடு வரையுங்கள் என்று சொல்லவே இல்லை.
எனக்கு என்னவோ மனம் முழுக்க
தண்டவாளங்கள்மீதான ரயில் சத்தம்
கேட்டுக்கொண்டே இருக்கிறது...
யானையை வரைவதற்குக்
காடு நோக்கி நகர்ந்துகொண்டிருக்கிறேன்.
என் காதுகளுக்கு ஆலோசனைகள் ஏதும் வேண்டாம்.
ரயில் சத்தம் கேட்காமலிருந்தால் அதுவே போதும்.
- க.இராஜாராமன்
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
மின்காலம்
மரம் ஏதும் தென்படாததால்
மின்சாரக் கம்பிகளில்
கூடுகட்டியது ஒரு
பறவை.
ஆனால்
நிம்மதியாக இருந்தது.
வெட்ட கோடரியோடு
யாரும் வரமாட்டார்கள்.
காற்றடித்தால் வேரோடு
சாய வாய்ப்பு குறைவு.
பூக் கிள்ள
காய் பறிக்க
பழம் தின்ன என்று
மனிதர்கள் தொந்தரவு
செய்யும் மரம்போலக் கிடையாது
இந்த மின்சார மரம்.
தாறுமாறாகப் பிரியும்
ஒயருக்குள் போகும் மின்சாரம் தன்னால் பறவையை ஒன்றும் செய்ய
முடியவில்லையே என்று
மூச்சயர்ந்த நேரம்
வீட்டில் விளக்கு
அணைந்திருந்தது.
- ந.வீரா
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
ஆசுவாசம் தேடும் கால்கள்
சற்று அமர்ந்து கால் ஆறக்கூட
நாற்காலி அனுமதிக்கப்படாத
பரபரப்பான
வணிகக்கடையொன்றில்
பணிமுடித்து
பேருந்துபிடிக்க ஓடிவரும் பெண்ணிற்கு
அவ்வளவு நெரிசலிலும்
எழுந்து இடமளிக்கும்
மனமொன்றுதான்
நம்பிக்கையுடன்
நகர்த்திக்கொண்டிருக்கிறது
அவள் வாழ்வை.
- சாமி கிரிஷ்