வாதைத் துணுக்கு

பெயர் தெரியா மீனொன்றின் கடலென இருந்துவிடப் பிரயத்தனப்படும்
பிரிவுக் காலங்களின் துயரக்கண்ணீர்
காலச்சக்கரம் நத்தையின் சாயலில் உருண்டோட மாபெரும் கடலைத் தாண்டிய அசதியில் புரள்கின்றதோர் கனவு
காரணமற்ற காரணங்களில் சிக்கிய ஒற்றைச் சொல்லின் முற்றுப்புள்ளியைக்
கடந்துவிட்டு மறையும் ஆச்சர்யக்குறி
இருளின் தொய்வில் துளிவெளிச்சமென ஒருத்தியின் நிலாச்சிரிப்பில் சரியும்
ஹார்மோன்களற்றவனின் புகைப்படம்
நாடித்துடிப்பில் முண்டும் சிசுவை நீவிப்பார்க்கும் கரங்களின் ரேகைப் பிளவில்
அயல்தேசக் காதலனின் முத்தக் கசிவு
ஏதுமற்ற வெளியில் இலக்கின்றிப் பறக்கும்
ஒற்றைப் பறவையின் பசிக்கு இரையென மாறும் மனிதப் பிண்டங்களின் வாடை
- நிவிகா மித்ரை

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
உங்கள் அன்றாட தேவைகளின் அனைத்து பொருட்களையும் சிறந்த தள்ளுபடியில் வாங்க
VIKATAN DEALS
வீட்டின் மொழி
`சொன்ன தேதிக்குப் பணத்தைத் தரல
வீட்ட தீயவச்சுக் கொளுத்திடுவேன்' என கடன்காரன் மிரட்டுகிறான்.
`இந்த வீடு வசதி குறைச்சலா இருக்கு இதெல்லாம் ஒரு வீடா’ன்னு
ஏசினான் விருந்தாளி.
வந்த எதிரி வீட்டின் எம்மூலையில்
சூனியம் வைக்கலாமென
நோட்டம் விட்டான்.
`டேய் வெளிய வாடா
இந்த வீட்ல ஒரு தம்கூட அடிக்கமுடியாது'
என்று கிளம்பினான் நண்பன்.
`எப்படியாவது இந்த வீட்டை விட்டு
ஓடி வந்துவிடுவேன்' என்றாள் காதலி.
வாசலில் நின்று ஆத்திரம் தீர
குரைக்கிறது நாய்.
நாம் ஏன் யாருக்குமே பிடிக்காத வீடாக இருக்கிறோமென பாரம் தாங்காத அவ்வீடு
ஆங்காங்கே விரிசல்விட்டது.
- நிவிகா மித்ரை
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் விகடன் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்... செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.

பட்டதாரி அம்மா
இந்த ஊரில் கல்லூரிப்படிகளைத் தொட்ட முதல் பெண்
உன் அம்மாதான்
டிகிரி படித்தாலும்
டைப்ரைட்டிங், டெய்லரிங், கவிதை என
எப்போதும் ஏதோவொன்றைச் செய்துகொண்டிருப்பாள்
கலர் பென்சில்களை அடிக்கடி வாங்குவாள்
இதோ இந்தச் சுவர்களில் இருப்பதெல்லாம் அவள் வரைந்ததுதான்
மேற்கொண்டு படிக்க வேண்டும்
மேல்நாடுகளுக்குச் செல்ல வேண்டும் என்பதுதான்
அவள் கனவு
சொந்தம் அறுந்துவிடக்கூடாது என்று கல்யாணம் செய்து வைத்தார்கள்
இதையெல்லாம் அம்மாவுடன் பத்தாவது வரை படித்த சரிதா அத்தை சொன்னாள்
வானளவு கனவுகள்
கொண்டிருந்த அம்மா
இப்போதெல்லாம் மறுநாள் வாசலில் இடம்போகும்
கோலத்தை
வெள்ளைத்தாளில்
கச்சிதமாக வரைந்து பார்க்க மட்டுமே
பேனாவைக் கையிலெடுக்கிறாள்.
- கு.தினகரன்

அழும் மூங்கில்
நானும் ஒருநாள்
புல்லாங்குழல் ஆவேன் என்று சொல்லிக்கொண்டே இருந்த
மூங்கிலைப் பாலமாக்கினார்கள்
நேர்ந்திட்ட நிலையை நினைந்து நினைந்து நீடுதுயரெய்திய அது தனக்குக் கீழ் நகரும் நதியை
நெடுங்கண்ணீராக்கி நிதமும் அழுதுகொண்டே இருந்தது
நீண்ட விடுமுறை முடிதலுக்குப்பின் ஒருநாள் அக்கரையிலிருக்கும் பாலர் பள்ளிக்குத் தன்மீது நடந்துசெல்லும் மழலைக் கூட்டங்களின் பிஞ்சுப் பாதங்களால் எழும் இசையால் தன்னைப் புதியதோர் இசைக்கருவியாய் உணரத்தொடங்கி மிகுமகிழ்வெய்தியது
இப்போது நதியோ
ஆனந்தக் கண்ணீராய் கரைபுரண்டு ஓடுகிறது.
- இனித்தன்