விகடன் பொக்கிஷம்
தொடர்கள்
Published:Updated:

நான் தமிழன்!

நான் தமிழன்!


08-07-09
"நான் தமிழன்!"
நான் தமிழன்!
நான் தமிழன்!
நான் தமிழன்!
நான் தமிழன்!
நான் தமிழன்!

எஸ்.வி.ரங்காராவ், ஆந்திராவில் பிறந்தவர் என்பது எல்லோருக்கும் தெரியும். ஆனால், அவருக்கு தமிழில் 'அக்ஷராப்பியாசம்' நடைபெற்றது என்பது அநேகருக்குத் தெரியாது. ஆம். சிறு வயதிலேயே அவர் தமது சகோதர சகோதரிகளுடன் சென்னைக்கு வந்துவிட்டார். ஆறாவது ஃபாரம் வரை திருவல்லிக்கேணி ஹிந்து ஹைஸ்கூலில்தான் படித்தார். பிறகுதான் விசாகப்பட்டினத்தில் 'இன்டர்மீடியட்'டை முடித்துக் கொண்டு, காக்கிநாடாவுகுப் போய் தாவர சாஸ்திரத்தில் பி.எஸ்ஸி. பட்டம் பெற்றார்.

" 'தமிழில் பேசவும் படிக்கவும் எப்படிப் பழகிக்கொண்டீர்கள்?' என்று என்னைப் பார்த்து யாராவது கேட்டால் எனக்குச் சிரிப்புதான் வரும். நான் தமிழ்நாட்டைச் சேர்ந்தவன்! நான் தமிழில் பேசுவதில் அதிசயம் ஒன்றுமில்லை. ஹைஸ்கூல் படிப்பை முடித்துவிட்டு நான் ஆந்திராவுக்குச் சென்றபோது, அங்கு எல்லோரும் நான் பேசிய தெலுங்கைக் கண்டு சிரித்தார்கள். நான் பேசியது மெட்ராஸ் தெலுங்கு! கொஞ்சம் சிரமப்பட்டு சுத்தத் தெலுங்கு பேசக் கற்றுக்கொண்ட பிறகுதான் நாடகங்களில் நடிக்க ஆரம்பித்தேன்.

பள்ளிக்கூடத்தில் படிக்கும்போது நான் சிறு நாடகங்களில் நடித்திருக்கிறேன். இந்து ஹைஸ்கூலில் அப்போது ஆசிரியராக இருந்த தேசிகாச்சாரி என்பவர்தான் என்னை இந்தத் துறையில் பழக்கி வைத்தார். அவர்தான் என்னுடைய நாடக குரு என்று சொல்லவேண்டும். அப்போதே ஷேக்ஸ்பியர் நாடகங்களிலெல்லாம் முக்கிய பாகம் ஏற்று நடித்திருக்கிறேன். 'வெளிநாட்டு நகர வர்த்தகன்' என்ற நாடகத்தில் 'ஷைலக்' வேஷம்தான் என் 'மாஸ்டர் பீஸ்'!''

நான் தமிழன்!

கல்லூரியில் படிக்கும்போதும், அதற்குப் பிறகும் ரங்காராவ் நாடகங்களில் நடிப்பதை விடவில்லை. 'யங்மென் ஹாப்பி கிளப்' என்ற சங்கத்தார் நடத்திய நாடகங்களில் எல்லாம் அவர் நடித்திருக்கிறார். இப்போது பிரபலமாயிருக்கும் பல ஆந்திர நடிக, நடிகைகள் அங்கு தயாரானவர்கள்தான்.

இரண்டாவது உலக யுத்தத்தின் போது ரங்காராவ் தீயணைக்கும் படையில் சிறிது காலம் பணியாற்றிவிட்டு, 1945-ல் அவருடைய மாமன் ராமானந்தம் தயாரித்த 'வருதினி' என்ற புராணப் படத்தில் நடித்தார். அதுவே அவருடைய முதல் படம். ஆனால், அந்தப் படம் ஒரு பெரும் தோல்வி. மனமுடைந்த ரங்காராவ் ஜெம்ஷட்பூர் லோகோ ஒர்க்ஸில் பணி புரியப் போய்விட் டார்.

அவர் மீண்டும் சென்னைக்கு வந்தது 1947-ல். அப்போது அவருக்கு வயது 30. நான்கு ஐந்து நண்பர்களுடன் ஓர் ஓட்டலில் தங்கியிருந்த அவர், வேலை தேடிப் பட்டணம் பூராவும் சைக்கிளில் அலைந்துகொண்டிருந்தார். 'சினிமாவில் ஒரு சான்ஸ் கிடைக்குமா?' என்று தவியாய்த் தவித்தார். அப்போது அவருக்கு அபயம் அளித்தவர் டைரக்டர் பிரசாத்.

"அவர் என்னை திரு.சக்ரபாணியிடம் அழைத்துச் சென்று அறிமுகம் செய்து வைத்துவிட்டு, என் நாடகங்களைத் தாம் பார்த்திருப்பதாகவும், என் நடிப்பில் அபார நம் பிக்கை இருப்பதாகவும் துணிந்து ஒரு பொய்யையும் சொன்னார். ஆம், பொய்தான்! பிரசாத் என் நாடகங்களைப் பார்த்ததே இல்லை. என் நடிப்பைப் பற்றிக் கேள்விப்பட்டிருக்கிறார். அவ்வளவுதான்! 'என்னடா, இப்படிப் பச்சைப் பொய்யைச் சொல்லுகிறாரே' என்று எனக்குத் தர்ம சங்கடமாகி விட்டது. ஏதோ சொல்ல நினைத்தவன் அடக்கிக் கொண்டுவிட்டேன். அன்று பிரசாத் அந்தப் பொய்யைச் சொல்லியிருக்காவிட்டால், நான் இன்று இந்த நிலையில் இருக்கமாட்டேன்.

பிரசாத் சிபாரிசு செய்தும்கூட சக்ரபாணிக்கு நம்பிக்கை ஏற்படவில்லை, 'ஆசாமியைப் பார்த்தால் சூட்டு அணிந்து ஸ்டைலாக இருக் கிறான். இவன் 'ரௌடி' வேஷத் திற்குப் பொருந்துவானா!' என்ற சந்தேகக் குறி அவர் முகத்தில் தோன்றிற்று. 'நாளைக்கு வாருங்கள், உங்களுக்கும் 'குடும்ப ராவ்'வுக்கும் மேக்கப் போட்டுப் பார்க்கிறேன். வேஷம் யாருக்கு நன்றாகப் பொருந் துகிறதோ அவரைத் தேர்ந்தெடுத்துக் கொள்கிறேன்' என்றார். நான் அதற்கு ஒப்புக் கொள்ளவில்லை. பிறகு 'சௌகார்' படத்தில் 'ரௌடி' பாத்திரத்தில் நடிக்க என்னையே ஒப்பந்தம் செய்தார்கள். படப்பிடிப் பன்று நான் 'மேக்கப்' போட்டுக் கொண்டு வந்தேன். என் மீது நம்பிக்கையில்லாத சக்ரபாணி வேறொரு ஆசாமியைத் தயாராக வைத்துக் கொண்டிருந்தார். அன்று நான் என் திறமையையெல்லாம் காட்டி நடித்தேன். பிறகு 'ரஷ்' போட்டுப் பார்த்துவிட்டுப் பிரசாத்தும் சக்ரபாணியும் என்னை மிகவும் பாராட்டினார்கள். அந்த நாளை என்னால் மறக்கவே முடியாது.''

இதுவரை சுமார் 150 படங்களில் நடித்துள்ள ரங்காராவ் நடிப்புத்துறையில் தமது சாதனை மிகவும் அற்பமானது என்று கருதுகிறார்.

நான் தமிழன்!

"நான் சாதித்துள்ளது ஒரு துளி தான்; எனக்கு முன்னால் ஒரு சமுத்திரமே இருக்கிறது. 'நாம் கற்றது கைம்மண் அளவு, கல்லாதது உலகளவு' என்று ஒவ்வொரு கலைஞனும் நினைக்க வேண்டும். 'நாம் வெற்றி அடைந்துவிட்டோம்; எல்லாவற்றையும் சாதித்து விட்டோம். நமக்கு நிகர் யார்?' என்று மார்தட்டிக் கொள்ள ஆரம்பித்து விட்டால் ஒரு நடிகனும் முன்னேற முடியாது. ஒரு பாத்திரத்தை ஏற்றுக் கொண்டால், நான் அதைப் பற்றியேதான் சதா சிந்தித்துக்கொண்டு இருப்பேன். 'இப்படிச் செய்யலாமா? அப்படிச் செய்யலாமா?' என்று எனக்குள்ளேயே தீர்மானித்துக் கொண்டுதான் படப்பிடிப்புக்குப் போவேன். வசனங்களை எத்தனை குறைக்க முடியுமோ, அத்தனை குறைத்துக் கொள்வேன். ஒவ்வொரு பேச்சும் ரசிகர்களின் அறிவுக்கு விருந்தாக இருக்கவேண்டும். ஒவ்வொரு முகபாவமும் அவர்களின் இதயத்தைத் தொட வேண்டும். இதுதான் என் லட்சியம்!''

'தமிழ்ப் பட உலகில், கதாபாத்திரங்களைவிட அவற்றை ஏற்று நடிப்பவர்களுக்குத்தான் அதிக முக்கியம் கொடுக்கப்படுகிறது. இது வருந்தத்தக்கது' என்கிறார் அவர்.

ரங்காராவ் இப்போது 'நானும் ஒரு பெண்' இந்திப் படத்தில் நடித்துக்கொண்டிருக்கிறார். இதற்கு முன் 'பாதாள பைரவி', 'சண்டி ராணி' ஆகிய இரண்டு இந்திப் படங்களில் நடித்திருக்கிறார். "இந்திப் படங்களில் நான்தான் பேசுகிறேன். நான் நன்றாக இந்தி பேசுவேன்'' என்கிறார் அவர்.

 
நான் தமிழன்!
-
நான் தமிழன்!