
இ-பைக் - நப்பின்னைம.சக்கர ராஜன் - படங்கள்: பெ.கெசன்ட்ரா இவாஞ்சலின்
“அமெரிக்கா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் இ-பைக் பயன்பாடு கணிசமானது. அந்த அளவுக்கு இந்தியாவில் இ-பைக் பயன்பாட்டைக் கொண்டு வரமுடியாது என்றாலும், மக்களிடம் விழிப்புஉணர்வை ஏற்படுத்துவதில் ஒரு சின்ன அடியை எடுத்து வைக்க நினைத்தோம்” என்று உற்சாகத்துடன் கூறுகிறார் நைத்ரோவென்.

முதுநிலை தொழில் நிர்வாக பட்டதாரியான இவருக்கும், எலெக்ட்ரானிக் கருவிகளை விற்பவரான இவரது தந்தைக்கும், Muscular Dystrophy என்ற தசைநார் தேய்வு நோய் இருந்தது. பல தலைமுறை நோயான இதன் காரணமாக, இவர்கள் இருவராலும் சாதாரண மனிதர்களைப் போல நடமாட முடியாது. மேலும் கடந்த 2013-ம் ஆண்டில் இவர் சந்தித்த சாலை விபத்தில் காயமடைந்ததன் விளைவாக, நாற்காலியை விட்டே எழ முடியாத நிலை உருவானது. ஆனால், நைத்ரோவென் துவண்டு போகவில்லை. அவரின் தந்தை தனக்கென உருவாக்கி வைத்திருந்த சிறிய இ-பைக் மீது கவனம் செலுத்தினார்.
‘‘இந்த இ-பைக்கை உருவாக்க வேண்டும் என்று நினைத்த உடனே, என்ன மாதிரியான பயன்பாடு இருந்தால் சரியாக இருக்கும் என்பது குறித்து சில கேள்விகள் எழுந்தன. நான் வடிவமைக்கப்போகும் இ-பைக்கில்தான் நடக்க முடியாத நானே பயணிக்கப் போகிறேன் என்பதால், அதன் வடிவமைப்பில் எனக்கென்றே சில யோசனைகள் இருந்தன. அதனை மேலும் சீர்படுத்த, பெசன்ட் நகர் கடற்கரை பகுதிக்குச் சென்று, அங்கிருந்த மக்களுடன் பேசி சில யோசனைகளைக் கேட்டறிந்தோம்.

இந்த வேலையெல்லாம் முடிந்த உடன், பைக்கை டிஸைன் செய்யும் அணியினரை அழைத்து, அவர்களுடன் சேர்ந்து இ-பைக்கை வடிவமைத்தோம். பள்ளி, கல்லூரி வளாகத்திற்குள் மாணவர்கள் பயன்படுத்த, அருகில் இருக்கும் கடைகளுக்கு செல்ல, பெண்கள் பயன்படுத்த, தொழிற்சாலைக்குள் தொழிலாளர்களும், மேற்பார்வையாளர்களும் பயன்படுத்த என்று பலவித கோணங்களில் சிந்தித்துதான் இதனை வடிவமைத்து இருக்கிறோம். 25 கி.மீ வேகம் மட்டுமே செல்லும் வாகனங்களுக்கு, ஓட்டுநர் உரிமம் தேவையில்லை. எனவேதான் இ-பைக்கின் உச்சகட்ட வேகத்தை, ஒரு மணி நேரத்திற்கு 25 கிலோ மீட்டர் என நிர்ணயித்தோம். 200 கிலோ எடை வரை தாங்கும் வகையில் இதனைத் தயாரித்துள்ளோம்.
இ-பைக்கின் அத்தனை பாகங்களும் இந்தியாவிலேயே வடிவமைத்து தயாரிக்கப்பட்டுள்ளன. எனினும், இந்தியாவில் இ-பைக் பெரிய அளவில் பயன்படுத்தப்படவில்லை என்பதனால், அதற்கேற்ற மோட்டார்கள் இங்கு கிடைப்பதில்லை. எனவே, மும்பை வணிகர் ஒருவர் மூலமாக சீனாவிலிருந்து மோட்டார்களை இறக்குமதி செய்கிறோம்.
நாங்கள் இ-பைக் குறித்த விழிப்புஉணர்வை ஏற்படுத்தும் எண்ணத்துடன், ‘Just Buy Scheme’ என்ற திட்டத்தின் அடிப்படையில்தான் இதனை விற்பனை செய்யப்போகிறோம். இந்தியாவின் முதல் மூன்று சக்கர இ-பைக் இதுதான் என்பது குறிப்பிடத்தக்கது” என முடித்தார் நைத்ரோவென்.
ப்ளஸ்
ஓட்டுநர் உரிமம் தேவையில்லை.
சுற்றுச்சூழலுக்கு நண்பன்.
மைனஸ்
டிஸைன்.
டெக்னிக்கல் விவரங்கள்
• ஹப் மோட்டார், 250 வாட் திறனுடையது.
• மோட்டார் முன் சக்கரத்துடன் இணைக்கப்பட்டுள்ளது, எனவே, ஃப்ரன்ட் வீல் டிரைவ் சிஸ்டம்தான்.
• பத்து அங்குல அலாய் வீல்கள்.
• LED ஹெட் லைட், ரியர்வியூ மிரர், கடிகாரம், பேட்டரி அளவைக் காட்டும் கருவி, பூட்டு என தேவையான அனைத்து அம்சங்களும் இருக்கின்றன.
• இ-பைக்கின் எடை 25 கிலோ.