சில பொறுமைசாலிகள்கூட சிக்னல்களில் அவசரக் குடுக்கைகளாக மாறுவார்கள். ஒரு விநாடிகூட விட்டுத் தரமாட்டார்கள். சிக்னல்களில் சிவப்பு விளக்கு எரிந்தபிறகும் ஆக்ஸிலரேட்டர் முறுக்க நினைக்கும் நாம், மஞ்சள் விளக்கு எரிவதற்கு முன்பே பிரேக் பிடிப்பதற்கு மனசு வராது. 10 நிமிடம் முன்பாகப் போக வேண்டும் என்று ஒன்வேயில் புகுந்து போய் விபத்துக்குள்ளாகி, 10 மாதம் கழித்து வீட்டுக்குப் போனவர்களும் உண்டு. ஆபத்து என்பதைத் தாண்டி, இது மிகப் பெரிய சட்டமீறல் என்பதும் நமக்குத் தெரியாது. இனி இந்த ஏமாற்று வேலையெல்லாம் எடுபடாது.

இதுபோன்ற டிராஃபிக் விதிமுறை மீறல்களைத் தடுக்கத்தான் காவல்துறை அதிரடி நடவடிக்கையாக, ANPR (Automated Number Plate Recognition) கேமராக்களைப் பொருத்தியுள்ளது. அதாவது இது ஏற்கெனவே சிக்னல்களில் இருக்கும் வழக்கமான CCTV கேமராக்கள்தான். அதில் கொஞ்சம் சாஃப்ட்வேர் அப்டேட் செய்து, சில தொழில்நுட்பங்களை மேம்படுத்தி இருக்கிறது தமிழகக் காவல்துறை. இதன் முதல் கட்டமாக அண்ணாநகர் ரவுண்டானா, மாதவரம் ரவுண்டானா சிக்னல்களில் இந்த அதிநவீன அப்டேட் செய்யப்பட்ட 64 கேமராக்களைப் பொருத்தி ட்ரையல் பார்த்துள்ளது காவல்துறை.
அண்ணாநகரில் இந்த CCTV கேமராக்களைப் பொருத்தினார் சென்னை கமிஷனர் ஷங்கர் ஜிவால். இதில் அதிகபட்சமாக ஒரு நாளைக்கு 90,000 டிராஃபிக் வயலேட்டர்களைக் கண்டறிந்துள்ளதாம் அந்த கேமரா.


இதற்கு முன்பு – இதே ANPR கேமராக்கள், வயலேஷன் நடக்கும்போது அது அந்த வாகனத்தின் நம்பர் பிளேட்டைப் படம் பிடிக்கும். பிறகு அதை காவல்துறைக் கட்டுப்பாட்டு அறைக்கு அனுப்பும். அவர்கள் அதைச் சரிபார்த்து பிரின்டட் வெர்ஷனாக, கூரியர் வழியில் அந்த நபரது வீட்டுக்கு சலான் அனுப்புவார்கள். இப்படி ஏழு கடல் ஏழு மலை தாண்டி ஒருவர் அரசாங்கத்துக்கு அபராதம் கட்டுவதற்குள், மூன்றாவது அலை வந்துவிடும்.
இப்படி சுமார் ஒரு நாளைக்கு சுமார் 300 பேருக்கு சம்மன் அனுப்பும் இந்த வேலையைச் செய்ய சுமார் 20 பேர் தேவைப்படுவார்களாம். ஆனால், இந்தத் தொழில்நுட்பங்கள் மூலம் ஒரு நாளைக்கு 10,000 பேர் வரை ஆன் தி ஸ்பாட்டிலேயே கண்டறிந்து, அவர்கள் அடுத்த சிக்னலை வயலேட் செய்வதற்குள் அவர்கள் மொபைலுக்கு குறுஞ்செய்தி மூலம் நோட்டீஸ் அனுப்பும் வேலையைத் தானாகச் செய்யும் இந்தத் தொழில்நுட்பம்.
இந்த 64 கேமராக்களை ஹூண்டாய் கார் நிறுவனம்தான் ஸ்பான்சர் செய்துள்ளது. அப்படி என்ன தொழில்நுட்பம் இது; எப்படி இந்த ஐடியா வந்தது?

இந்த கேமராக்கள் தொழில்நுட்பத்துக்குச் சொந்தக்காரர், சென்னையைச் சேர்ந்த Alco Systems நிறுவனர் அரவிந்த்.
‘‘ஹூண்டாய் நிறுவனத்துக்குத்தான் இதற்கு முதலில் நன்றி சொல்ல வேண்டும். ஹூண்டாய்க்கு எப்போதுமே சாலைப்பாதுகாப்பில் ஆர்வமும் விழிப்புணர்வும் அதிகம். தென் இந்தியாவில் எங்களைப் போன்ற சுமார் 10 குழுக்களிடம் இப்படி ஒரு டெமோ கேட்டது ஹூண்டாய். எங்கள் Alco Systems-ன் ஐடியாவும் தொழில்நுட்பமும் அவர்களுக்குப் பிடித்துப் போனது.
வேறொன்றுமில்லை; முன்பிருந்த அதே ANPR கேமராக்களில் PTZ (Pan Tilt and Zoom), RLVD (Red Light Violation Detection) போன்ற சில தொழில்நுட்பங்களைச் சேர்த்தோம். இவற்றின் மூலம் NIC (National Informatic Centre) மையத்தின் சர்வருடன் இன்டக்ரேட் செய்திருக்கிறோம். அதாவது, நமது ஒவ்வொரு வாகனத்தின் நம்பர் பிளேட்களும் இந்த கேமராக்களுடன் நேரடித் தொடர்பில் இருக்கும். எனவே, டிராஃபிக் விதிமீறல்களில் ஈடுபட்ட அடுத்த விநாடி, இது அந்த நம்பர் பிளேட்டைப் படம் பிடித்து, அதிகபட்சம் அடுத்த 15 நிமிடங்களுக்குள் உங்கள் பதிவு செய்யப்பட்ட மொபைல் எண்ணுக்கு நோட்டீஸ் அனுப்பிவிடும். அதன் பிறகு உங்களுக்கு அபராதத் தொகை கட்ட வேண்டிய தேதியும் தொகையும் சலான் மூலம் உங்கள் வீட்டுக்கு வரும். இதன் மூலம் 20 பேர் வேலை செய்ய வேண்டிய இடத்தில் வெறும் 2 பேர் வேலை பார்த்தால் போதும்! இதுதான் எங்கள் ஐடியா!’’ என்றார் இந்த CCTV தொழில்நுட்பத்தை வடிவமைத்த Alco Systems அரவிந்த்.

இதில் எல்லைக் கோட்டைத் தாண்டினால் ஓர் அபராதம், சிக்னலை வயலேட் செய்தால் ஒரு தொகை என்று வெரைட்டியாக அபராதங்கள் உண்டு. ‘கேமரா கண்ணுல படாம ஸ்பீடா போயிடலாம்’ என்று பறக்கும் ரேஷ் டிரைவ் பார்ட்டிகளுக்கும் ஒரு சிக்கல் உண்டு. 150 கிமீ வேகம் வரை எந்த லைட்டிங் கண்டிஷனிலும் இந்த கேமரா புகைப்படம் எடுத்துவிடுமாம். இதற்கும் அதிகபட்ச அபராதத் தொகை உண்டு மக்கா!
இனிமேல், டிராஃபிக் சிக்னல்களில் போலீஸைப் பார்த்து மட்டும் பயப்படாதீங்க! சிக்னலைப் பார்த்தும் பயப்படுங்க!