ஆள்குறைப்பு நடவடிக்கையை உறுதி செய்யத் தொடங்கியது அமேசான். ஏற்கெனவே அமேசானில் இருந்து 10,000 ஊழியர்கள் வரை நீக்கப்படுவார்கள் என நவம்பர் மாதத்தில் அமேசான் அறிவித்து இருந்தது.

கொரோனா தொற்றுப் பரவலின்போது அதிகமான அளவுக்கு பணியாளர்களை வேலைக்கு எடுத்த அமேசான் நிறுவனம், தற்போது நிச்சயமற்ற பொருளாதார (The Uncertain Economy) சூழல் நிலவுவதாகக் குறிப்பிட்டு 18,000-க்கும் அதிகமான ஊழியர்களை பணிநீக்கம் செய்ய உள்ளதாக அறிவித்துள்ளது.
இந்தப் பணியாளர்கள் குறைப்பு நடவடிக்கை குறித்து புதன்கிழமையன்று அமேசான் நிறுவனத்தின் சி.இ.ஓ ஆண்டி ஜாஸ்ஸி அறிக்கை வெளியிட்டுள்ளார்.
அதில், ``பருவ கால ஊழியர்களைத் தாண்டி உலகம் முழுவதிலும் செப்டம்பர் மாத இறுதியில் 1.54 மில்லியன் ஊழியர்கள் அமேசானில் பணிபுரிந்து வந்தனர்.
கடந்த காலங்களில் அமேசான் நிச்சயமற்ற, கடினமான பொருளாதார சூழலை எதிர்கொண்டது. இந்தத் திடீர் அறிவிப்பை வெளியிடுவதற்குக் காரணமே, எங்கள் குழுவில் உள்ள ஒருவர் தகவலைக் கசிய விட்டதால்தான். ஐரோப்பாவில் சில பணி நீக்க நடவடிக்கைகள் இருக்கும். இந்தத் தகவல் ஜனவரி 18 முதல் ஊழியர்களுக்கு அறிவிக்கப்படும்.

வேலையில் இருந்து நீக்குவது கடினமானது என்பதை நாங்கள் ஆழமாக அறிவோம். இந்த முடிவுகளை எளிதாக எடுத்துக் கொள்ள மாட்டோம். பாதிக்கப்பட்டவர்களை ஆதரிக்க நாங்கள் பணியாற்றி வருகிறோம். அவர்களுக்கு இடைநிலை மருத்துவ காப்பீட்டுப் பலன்கள் மற்றும் வெளிவேலை வாய்ப்புக்கான ஆதரவு அடங்கிய பேக்கேஜ்களை வழங்க உள்ளோம்’’ என்று குறிப்பிட்டுள்ளார். அமேசானின் இந்த அறிவிப்பு பணியாளர்கள் மத்தியில் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளது.