இந்தியாவிலும் ஆரம்பமாகும் ஆப்பிளின் ஆன்லைன் ரீடெய்ல்... இதில் என்னவெல்லாம் கிடைக்கும்?

இந்தியாவில் வரவுள்ள ஆப்பிள் இணைய ரீடெய்ல் சேனலில் கல்விக்கென பிரேத்யகமான விற்பனை மையமும் உருவாக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் முன்னணித் தொழில்நுட்ப நிறுவனமான ஆப்பிள் நிறுவனம் இந்தியாவில் முதன்முறையாகத் தனது இணைய ரீடெய்ல் சேனலைத் திறக்கவுள்ளது. இந்த நிறுவனம் இதுவரை இந்தியாவில் இணையம் மூலமாக இ-காமர்ஸ் முறையிலும் விற்பனை நிலையங்கள் மூலமும் தனது தயாரிப்புகளை விற்பனை செய்து வந்தது. இதையடுத்து செப்டம்பர் 23-ம் தேதி முதல் இந்தியாவில் தனது ரீடெய்ல் சேனலைத் தொடங்கவுள்ளது.
இதன் வழியாக ஆப்பிளின் எல்லா தயாரிப்புகளும் இந்தியாவில் விற்பனை செய்யப்படும். மேலும், இதோடு இந்தியாவில் உள்ள ஆப்பிளின் சர்வீஸ் நிலையங்களின் முகவரியும் இதில் இடம்பெற்றிருக்கும். இதில் பொருள்களை வாங்க யு.பி.ஐ மூலமாகவும் பணம் செலுத்தலாம். அதே சமயம், 'கேஷ் ஆன் டெலிவிரி' வசதியும் இடம்பெற்றுள்ளது.
இதுகுறித்து ஆப்பிள் நிறுவனம், "இந்தியாவில் இணையம் மூலமாக ரீடெய்ல் மார்க்கெட் தொடங்குவதற்கு மூலம் எங்கள் தயாரிப்புகளின் மீது மக்களுக்கு ஆர்வம் ஏற்படும். இதன் வழியாக வாடிக்கையாளர்களுடன் நேரடியாகத் தொடர்புகொள்வதற்கு வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இப்போது வரை உலகம் முழுவதும் ஆப்பிளின் இணைய ரீடெய்ல் விற்பனையகம் நல்ல முறையில் வியாபாரம் செய்து வருகிறது" எனத் தெரிவித்துள்ளது.
இந்தியாவில் வரவுள்ள இணைய ரீடெய்ல் சேனலில் கல்விக்கென பிரேத்யகமான கடையும் உருவாக்கப்பட்டுள்ளது. லேப்டாப், ஐபாட், டேப்லெட் மற்றும் ஆப்பிளின் ப்ரீமியம் ஆதரவு வசதியான ஆப்பிள்கார் பிளஸூம் இதில் இருக்கும்.
தற்போது இந்த இணையதளத்தில் ஆப்பிளின் தயாரிப்புகள் மட்டுமே இடம்பெற்றிருக்கும். இனிவரும் காலங்களில் இதர மூன்றாம் தரப்பு (third party accessories) பாகங்களும் இடம்பெற்றிருக்கும். இதன் வழியாக இந்தியாவில் அடுத்த மாதம் நடைபெறவுள்ள தீபாவளி விற்பனைக்கு ஆப்பிளும் தயாராகி வருகிறது.
இந்தியாவை பொறுத்தவரை, மொத்த ஸ்மார்ட்போன் சந்தையில் 2% மட்டுமே ஆப்பிள் வசம் உள்ளன. ஆனால், கடந்த சில ஆண்டுகளில் ஆப்பிள் தயாரிப்புகளின் விற்பனை இந்தியாவில் அதிகரித்துள்ளது. இதைப் பற்றி உலக தகவல் நிறுவனம் (International Data Corporation) வெளியிட்டுள்ள தகவலில், ``இந்தியாவின் பிரீமியம் பிரிவு சந்தையில் 48.8% பங்கு ஆப்பிள் வசம் உள்ளது. இது கடந்த ஆண்டு 41.2 சதவிகிதமாக இருந்தது குறிப்பிடத்தக்கது. இப்போது வரவுள்ள இணைய ரீடெய்ல் விற்பனையகம் மூலம் இந்த சதவிகிதமானது அதிகரிக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த இணைய சேனல் மூலம் மேக் கணினிகளுக்கு வாடிக்கையாளர்களே கஸ்டம் கான்ஃபிகரேஷன் செய்துகொள்ள முடியும். இந்த வசதி இந்தியாவில் இதுவரை முழுமையாக அமல்படுத்தப்படவில்லை என்பது கவனிக்கத்தக்கது. இவற்றுடன் ஐபோனுக்கான டிரேட் இன் புரோக்ராமும் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.
கடைசியாக, ஐபேட், ஏர்பாட்ஸ், ஆப்பிள் பென்சில், ஏர்பாட்ஸ் ப்ரோ ஆகியவற்றை இந்தி, தமிழ், மராத்தி, பெங்காலி, தெலுங்கு, கன்னடம் மற்றும் ஆங்கிலத்திலும் பயன்படுத்தும் வசதியும் கொண்டுவரப்பட்டுள்ளது.