ஓரிரு வாரங்களுக்கு முன் ‘Base Erosion and Profit Shifting’ அதாவது ‘அடி அரிமானம் மற்றும் லாபச் சுருட்டல்’ என்றால் என்னவென்று கேட்டிருந்தோம். ஆனால், இந்தக் கேள்விக்குச் சரியான விடை எதுவும் வாசகர்களிடமிருந்து வரவில்லை.
அண்மை ஆண்டுகளாகப் பொருளாதாரச் செய்திகளில் இடம்பெறும் ஆங்கிலத் தொடர் இது. இதைச் சுருக்கமாக பெப்ஸ் பிரச்னை (BEPS Issue) என்பார்கள். இந்த பெப்ஸ் பிரச்னை என்பது பல நாடுகளில் தொழில் செய்யும் முக்கிய பன்னாட்டு நிறுவனங்கள், அதிக வரிவிகிதம் கொண்ட நாடுகளில் வரி ஏய்ப்பு செய்வதற்காக, அந்த நாடுகளில் இருந்து பெறும் தங்கள் வருமானம், குறைவான வரிவிகிதத்தைக்கொண்ட வேறு நாட்டில் இருந்து வருவதுபோல சித்திரிக்கும் தில்லுமுல்லைத்தான் பெப்ஸ் என்கிறார்கள். பெப்ஸ் தந்திரங்களைப் பற்றியும் இவற்றை எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும் ஜி-20 நாடுகள் கடந்த நான்கைந்து வருடங்களாகக் கவனம் செலுத்தி வருகின்றன.
இந்தப் பிரச்னை குறித்து, 2012-ல் மெக்சிகோவில் நடைபெற்ற ஜி- 20 மாநாட்டில் முதன்முதலாக விவாதிக்கப்பட்டது. வரி விதிமுறைகளில் நாடுகளுக்கிடையே காணப்படும் வேறுபாடுகள், வரிச் சட்டங்களின் சந்து பொந்து, இண்டு இடுக்கு ஆகியவற்றில் நுழைந்து தப்பிப்பது, டிஜிட்டல் வணிகம் மூலம் பொருள்களை சப்ளை செய்வதன் மூலம், அந்த சப்ளை எந்த நாட்டின் வரிச் சட்டத்தின் கீழும் வராது என்று முரண்டு பிடிப்பது எனப் பல உத்திகளைக் கையாண்டதால் இந்தப் பிரச்னை, ஜி-20 நாடுகளுக்குத் தலைவலியாக உருவெடுத்துவிட்டது.

பல பன்னாட்டு நிறுவனங்களின் இந்த மாதிரியான தில்லுமுல்லு லாபச் சுருட்டலால், ஒரு நாட்டின் ‘வரி கட்டும் அடிமானம்’ (Tax Base) வெகுவாகத் தேய்ந்துபோகிறது. அதனால்தான் இதை ஆங்கிலத்தில் ‘Base Erosion’ என்கிறார்கள்.
முக்கிய நகரங்களில் அலைபேசி மூலம், வாடகை கார் புக் செய்யும் வசதி வந்துவிட்டது. இத்தகைய சேவையை உலகின் 500-க்கும் மேற்பட்ட நகரங்களில் வழங்கும் நிறுவனங்களில் ஒன்று ஊபர் (Uber). இந்த வர்த்தகப் பெயரின் பின்னணி சுவையானது.
நம் ஊரில் வசதி வாய்ப்பு வந்தவுடன் தரையில் கால் படாமல் பந்தா செய்பவர்களை ‘அப்பாடக்கர்’, ‘கலக்குற சந்துரு’ என்று கேலி செய்வது உண்டு. இதேபோல ஜெர்மானிய மொழியில் புதிதாக காரில் பயணிக்கும் நடுத்தர வகுப்பினரை ஊபர் (பெரிய ஆளாயிட்டான்) என்று கொச்சையாகக் குறிப்பிடுவது வழக்கம்.
அந்தக் கொச்சைச் சொல்லையே தனது வர்த்தகப் பெயராக்கி நடுத்தரக் குடும்பத்தினருக்கு கார் வசதியை வழங்குகிறது இந்த நிறுவனம். இந்த நிறுவனம் பின்பற்றும் நிலைமாறும் விலை பற்றி இன்னொரு சந்தர்ப்பத்தில் பார்க்கலாம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கடந்த இதழில், நிதி உட்கொணரல் (Financial Inclusion) எனும் கருத்தாக்கத்துக்குச் செயல் வடிவம் கொடுத்து, மத்திய அரசு தொடங்கிய ஜன் தன் யோஜனா பற்றிக் குறிப்பிட்டோம். ‘பிரதமர் மக்கள் நிதித் திட்டம்’ என்றும் இதைக் குறிப்பிடலாம். 2014-ம் ஆண்டு சுதந்திர தினத்தில் உரையாற்றிய பிரதமர், விடுதலை பெற்று 68 ஆண்டுகள் ஆகியும் இந்தியாவில் இன்னும் 68 சதவிகிதம் பேர் வங்கிக் கணக்கு இல்லாமல் இருக்கிறார்கள் என்று குறிப்பிட்டு, அதை மாற்ற ஜன் தன் திட்டம் கொண்டுவரப்படும் என்றார். அதன்படி 2014 ஆகஸ்ட் 28-ல் தொடங்கப்பட்ட இந்தத் திட்டத்தின் கீழ், ஏழரைக் கோடி புதிய வங்கிக் கணக்குகளைத் தொடங்க ஆவன செய்யப்பட்டது.
இந்தத் திட்டம் குறித்து, இரண்டு முக்கிய எதிர் விமர்சனங்கள் எதிர்க்கட்சிகளாலும் ஊடகங்களாலும் வைக்கப்பட்டன.
முதல் குற்றச்சாட்டு - பிரதமரால் தொடங்கப்பட்ட திட்டம் என்பதால் இந்தத் திட்டத்தின் கீழ் தொடங்கப்பட்டு, செயல்படாமல் இருந்த சுமார் 2.4 கோடி வங்கிக் கணக்குகளைச் செயல்படும் வங்கிக் கணக்குகளாக மாற்றுவதற்கு வங்கி ஊழியர்கள், ஒவ்வொரு கணக்கிலும் ஒரு ரூபாய் போட வேண்டும் என்று நிர்பந்திக்கப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.
இரண்டாவது முக்கிய குற்றச்சாட்டு - இந்திய அரசாங்கம், கடந்த ஆண்டு நவம்பர் மாதத்தில் பண மதிப்புக் குறைப்பு நடவடிக்கை எடுத்தபோது எழுந்தது. ஏழை மக்களின் கணக்குகளான ஜன் தன் யோஜனா கணக்குகளைப் பழைய 500, 1000 ரூபாய் நோட்டுகளை மாற்றுவதற்கு (சுமார் 87,000 கோடி) சட்டத்துக்குப் புறம்பாகப் பலர் பயன்படுத்திக்கொண்டதாக பெரும் குற்றச்சாட்டு எழுந்தது.
ஐ.ஏ.எஸ் தேர்வுகளில் சில திட்டங்கள் பற்றி கேட்கும்போது, அந்தத் திட்டத்தைக் குறிப்பிட்டு ‘Critically Examine’ என்று கேட்பார்கள். அவ்வாறு கேள்வி கேட்கப்பட்டால், அந்தத் திட்டங்களைப் பற்றி ஊடகங்களில் முன்வைக்கப்பட்ட எதிர் விமர்சனங்களையும் மேலே குறிப்பிட்டதுபோல எடுத்து விளக்குவது அவசியமாகும்.
(தேர்வு தொடரும்)