உலகமெங்கிலும் ஆப்பிள் நிறுவன பொருள்களுக்கு தனி மவுசு இருந்துகொண்டே வருகிறது. மவுசு என்பதைக் காட்டிலும் ஆப்பிள் லேப்டாப், ஆப்பிள் போன், ஆப்பிள் வாட்ச் என அனைத்து ஆப்பிள் நிறுவன பொருள்களும் கெத்தாகப் பார்க்கப்படுகிறது. இத்தனை நாளாக ஆப்பிள் நிறுவன பொருள்களை நாம் ஆன்லைனிலும், மொபைல் ஷோரூம்களிலும்தான் வாங்கி வந்தோம். ஆனால், இப்போது முதல் ஆப்பிள் ஸ்டோர் இந்தியாவில் மும்பையில் தொடங்கப்பட உள்ளது.

மும்பையில் பந்த்ரா குர்லா காம்பிளக்ஸில் உள்ள ஜியோ வோர்ல்டு டிரைவ் மாலில் ஆப்பிள் ஸ்டோர் அமைய உள்ளது. இந்த மால் முகேஷ் அம்பானிக்குச் சொந்தமானது என்பது குறிப்பிடத்தக்கது. இந்தப் புதிய ஸ்டோருக்கு `Apple BKC' என்று பெயரிடப்பட்டுள்ளது. இந்த ஸ்டோர் 20,800 சதுர அடியில் அமைய உள்ளது. இந்த ஸ்டோரின் வாடகை மாதம் ரூ.42 லட்சம் ஆகும். இந்த ஸ்டோருக்காக மொத்தம் 11 ஆண்டுகள் குத்தகை ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது.
மேலும், இந்த ஸ்டோருக்கான வாடகை தொகை ஒவ்வோர் ஆண்டும் 15% உயரும். முதல் மூன்று ஆண்டுகளுக்கு ஆப்பிள் நிறுவனம் தனது வருவாயில் 2% தொகையும், அதன் பின்னர் 2.5% தொகையும் பகிர்ந்துகொள்ள வேண்டும்.
முக்கியமாக Amazon, Google, Facebook, LG, Microsoft, Sony, Twitter, Bose, Dell, Devialet, Foxconn, Garmin, Hitachi, HP, HTC, IBM, Intel, Lenovo, Nest, Panasonic, Toshiba, Samsung உள்ளிட்ட 22 நிறுவனங்கள் இந்த ஸ்டோரின் அருகில் அவர்களது ஸ்டோரை தொடங்கக்கூடாது என்று ஒப்பந்தம் போடப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.

ஆப்பிள் தனது இரண்டாவது ஸ்டோரை டெல்லியில் திறக்க உள்ளது. இந்த ஸ்டோருக்கு `Apple Saket' என்று பெயரிடப்பட்டுள்ளது. மும்பையில் முதல் ஸ்டோர் அமைக்கப்பட்ட இரண்டு நாள்களில் டெல்லியில் இந்த ஸ்டோர் தொடங்கப்படும்.