இந்தியாவில் ஜனவரி இரண்டாம் வாரத்தில் அந்நிய செலாவணி கையிருப்பு 572 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என்று ரிசர்வ் வங்கி வெளியிட்டுள்ள வாராந்தர புள்ளிவிவர குறிப்பு கூறுகிறது.

ஜனவரி 13-ம் தேதியுடன் முடிவடைந்த வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 10.417 பில்லியன் டாலர் அதிகரித்து 572 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது என ரிசர்வ் வங்கியின் குறிப்பு தெரிவித்துள்ளது.
அதற்கு முந்தைய வாரத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 561.583 பில்லியன் டாலராக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
ஒரே வாரத்தில் இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு 10 பில்லியன் டாலருக்கு மேல் உயர்ந்து, கடந்த ஐந்து மாதங்களில் இல்லாத உச்சத்தைத் தொட்டுள்ளது.
2022-ம் ஆண்டு தொடக்கத்தில், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சுமார் 633 பில்லியன் டாலராக இருந்தது.

கடந்த ஆண்டு அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாய் மதிப்பு சரிவதைத் தடுப்பதற்காக நிறைய டாலரை இந்திய ரிசர்வ் வங்கி விற்பனை செய்தது. இதனால், இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு சரிந்துகொண்டே வந்தநிலையில், கடந்த சில வாரங்களாக இந்தியாவின் அந்நிய செலாவணி கையிருப்பு மீண்டும் உயர்ந்து வருகிறது.