கோவிட் தொற்றுக்குப் பிறகான பணிநீக்க நடவடிக்கைகள் ஒவ்வொரு தொழில்நுட்ப நிறுவனங்களிலும் அதிகரித்து வருகிறது. ட்விட்டர், அமேசான், கூகுள் எனப் பல தொழில்நுட்ப ஜாம்பவான்கள் `செலவு குறைப்பு’ நடவடிக்கையாக பணிநீக்க நடவடிக்கைகளைச் செய்து வருகின்றனர்.
இதுவரையில், 570 பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் இருந்து சுமார் 1,68,918 ஊழியர்கள் வரை பணிநீக்கம் செய்யப் பட்டுள்ளதாக Layoffs.fyi என்ற இணையதளம் அறிவித்துள்ளது. இந்த எண்ணிக்கையானது வரும் காலங்களில் அதிகரிக்கலாம்.

பணிநீக்கங்களைச் செய்து வரும் நிறுவனங்கள் ஊழியர்களை பணிக்கு அமர்த்துவதற்கு முன்பு விதிமுறைகளை கடைப்பிடிப்பது போல, பணிநீக்க நடவடிக்கைகளிலும் சில விதிமுறைகளை கடைப்பிடிக்க வேண்டும்.
ஆனால், இதுவரை ஊழியர்களின் எவ்வித ஒப்புதலுமின்றி நிறுவனங்கள் தொடர்ச்சியாக பணிநீக்க நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
ஐரோப்பிய நாடுகளைப் பொறுத்தமட்டில், பணிநீக்க நடவடிக்கைகளை சட்டெனெ மேற்கொள்ள முடியாது. சட்டப்படி, பணிநீக்க நடவடிக்கைகளைச் செய்வதற்கு முன் நிறுவனங்கள் சட்டபூர்வமாக கவுன்சிலுடன் கலந்தாலோசிக்க வேண்டும். இதில் தரவு சேகரிப்பு, விவாதங்கள் மற்றும் மேல்முறையீடு என நீண்ட கால செயல்முறைகளுக்குப் பின்பே பணிநீக்கம் செய்ய முடியும்.
இந்நிலையில், பிரான்ஸ் மற்றும் ஜெர்மனியில் பணிநீக்க சிக்கல்களைத் தவிர்க்க, கூகுளின் தாய் நிறுவனமான Alphabet Inc, தன் பணியாளர்களைத் தாமாக முன்வந்து ராஜினாமா செய்து, வேலை இழப்பால் ஏற்படும் பாதிப்புகளைச் சரிசெய்ய கொடுக்கப்படும் இழப்பீடு பேக்கேஜ்களை (Severance packages) பெற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொண்டுள்ளது.
Amazon Inc-ல் 5 முதல் 8 வருட அனுபவமுள்ள சில மூத்த மேலாளர்கள் தாமாக முன்வந்து ராஜினாமா செய்தால், அவர்களுக்கு ஓராண்டு ஊதியம் என்ற தொகுப்பையும் வழங்குகிறது.

ஜெர்மனியிலும், அமேசான் நிறுவனத்தில் பணிபுரியும் தகுதிகாண் பயிற்சி காலங்களில் ( probationary periods) இருக்கும் ஊழியர்கள் தானாக முன்வந்து ராஜினாமா செய்யும் வாய்ப்பை வழங்கியுள்ளது.
இதுமட்டுமல்லாமல் தனித்தனியாக, கூகுள் தன் 500 பணியாளர்களை இங்கிலாந்தில் குறைக்கத் திட்டமிட்டுள்ளது. இந்த ஊழியர்களுக்கு ரகசிய பேக்கேஜ்கள் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
`எங்கு முடியும்... என்று முடியும்' இந்தப் பணிநீக்க நடவடிக்கைகள் என தொழில்நுட்ப நிறுவனங்களில் பணிபுரியும் ஊழியர்கள் வருத்தம் தெரிவித்துள்ளனர்.