
எஸ்.எம்.இ
ஆடிட்டர் ஜி.கார்த்திகேயன்
நமது நாட்டில் விவசாயத்துக்கு அடுத்தபடி யாக குறு, சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள்தான் (MSME) வேலைவாய்ப்பு, பொருளாதார வளர்ச்சிக்கு முக்கியமான பங்கு வகிக்கின்றன. இந்தியாவில் 6.5 கோடி குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் உள்ளன. இந்த நிறுவனங்கள்மூலம் சுமார் 12 கோடி மக்கள் வேலைவாய்ப்பு பெறுகின்றனர். மொத்த உள்நாட்டு உற்பத்தியில் எஸ்.எம்.இ நிறுவனங்களின் பங்கு 30% ஆகும். சி.ஐ.ஐ அமைப்பு தரும் தகவலின்படி, இந்தியாவின் ஒட்டுமொத்த உற்பத்தியில் எஸ்.எம்.இ-யின் பங்களிப்பு 33.4% ஆகும். ஏற்றுமதியைப் பொறுத்தவரை, மொத்த ஏற்றுமதியில் எஸ்.எம்.இ பங்களிப்பு 45%.

நிதி வசதி இல்லை
ரூ.10 கொத்தமல்லிக்கு மொபைல் ஆப் வழியாக பணம் செலுத்தத் தொடங்கிவிட்டோம். நாட்டில் அதிவேக இணையதள வசதியும், டிஜிட்டல் பணப் பரிவர்த்தனையும் பெருகிய வேகத்துக்கு எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்களுக்கு நிதி உதவிகளும், பெரிய சந்தை அமைப்புகளும், தொழில்நுட்ப வசதி களும் கிடைக்கவில்லை. தற்போது சிறப்பாகச் செயல்படும் எஸ்.எம்.இ-கள்கூட இன்னமும் பாரம்பர்ய முறையில்தான் தொழில் நடத்திவருகின்றன. தரமான பொருள்கள் உற்பத்தி, திறமையான பணியாளர்கள், சந்தை வாய்ப்புகள் இருந்தும், தொழிலை விரிவு படுத்த தேவையான முதலீடு இல்லாமல், குறிப்பிட்ட குறுகிய எல்லையைத் தாண்ட முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
சமீபத்திய ஆய்வில், 5 கோடி எஸ்.எம்.இ-களில், 68% நிறுவனங்கள், இணையதளங்களுடன்கூட இணைக்கப்படவில்லை என்பது தெரியவந்தது. எஸ்.எம்.இ-கள் அசுர வேகத்தில் இல்லாவிட்டாலும், ஆசைப்படும் அளவுக்கு வளர்ந்தால்தான் ‘ஐந்து டிரில்லியன் டாலர் பொருளாதாரம்’ என்ற இலக்கை இந்தியா அடைய முடியும்.
சிறு தொழில் நிறுவனங்கள் தங்கள் வளர்ச்சிக்கு அரசையும் வங்கிகளையும் மட்டுமே எதிர்பார்த்து இருக்காமல், சிறிய தொழில் நிறுவனங்கள் சுயமாக வளர்வதற்கு பங்குச் சந்தையில் பட்டியல் இடுவதற்கு வழி செய்து தந்திருக்கிறது ‘செபி’ அமைப்பு.

எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்ச்
எஸ்.எம்.இ-களுக்கு தேவையான சிறிய அளவில் முதலீடுகளைப் பொதுமக்களிடம் திரட்ட ஒரு வாய்ப்பு கிடைத்தால், அரசாங்கம், வங்கி, தனிநபர்கள் என யார் கையையும் எதிர் பார்த்து காத்திருக்காமல் எழுந்து நிற்பார்கள். அதை நோக்கமாகக்கொண்டே, பங்குச் சந்தை மூலமாக எஸ்.எம்.இ-கள் நிதி திரட்டும் வாய்ப்பை ‘செபி’ வழங்கியிருக்கிறது. அதற்கென நிறைய கட்டுப்பாடுகளும் விதிமுறைகளும் அறிவிக்கப் பட்டுள்ளன.
கொரோனா வைரஸ் பெருந்தொற்று பரவலுக் குப் பிறகு, இந்தியாவின் பொருளாதாரம் புது வேகமெடுத்துள்ளது. குறிப்பாக, எம்.எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்கள் வளர்ச்சியில் மத்திய அரசு கவனம் செலுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக சிறு நிறுவனங்களுக்கான ‘எஸ்.எம்.இ எக்ஸ்சேஞ்ச்’ உருவாக்கப்பட்டிருக்கிறது.
தொழில்கள் பலவிதம்...
நமது நாட்டில், பப்ளிக் லிமிடெட், பிரைவேட் லிமிடெட், ஜாயின்ட் வென்ச்சர், பார்ட்னர்ஷிப் பேர்ம், தனிநபர் நிறுவனம், டிரஸ்ட்டுகள் என்று பலதரப்பட்ட தளங்களில் வணிக நிறுவனங்கள் இயங்கி வருகின்றன.
அதில், பங்குச் சந்தையில், பங்குகள் விற்பதன் வாயிலாக, பொதுமக்களிடமிருந்து பெறப் படும் முதலீடுகள் வாயிலாக, பல பிரைவேட் லிமிடெட், பப்ளிக் லிமிடெட் கம்பெனிகள் இயங்கி வருகின்றன. பப்ளிக் லிமிடெட் நிறுவனங்களில், லிஸ்டட், அன் லிஸ்டட் என்று இரு வகையில் இயங்கி வரு கின்றன. அன் லிஸ்டட் கம்பெனி கள், தங்களது பங்குகளைப் பொதுமக்களுக்கு வழங்காமல், தங்கள் உறவினர், நண்பர்களுக்கு வழங்கி நிறுவனத்தை நடத்தி வருகின்றன. லிஸ்டட் கம்பெனி யின் பங்குகள், பொதுமக்களுக்குக் கிடைக்கும்.
லிஸ்டட் கம்பெனியின் பங்குகளை வாங்குவதால், இரு விதமான ஆதாயங்கள் முதலீட் டாளர்களுக்குக் கிடைக்கின்றன. ஒன்று, பங்குகள் மூலம் கிடைக் கும் டிவிடெண்ட்; மற்றொன்று, பங்குகளின் மதிப்பு உயரும்போது கிடைக்கும் லாபம்.
6,600 நிறுவனங்கள்...
பங்குச் சந்தைகளில் பட்டியலிடப்படும் நிறுவனங்களைக் கண்காணிக்கும் பணியை, செபி கவனிக்கிறது. இந்தியாவின் மிகப் பழைமையான பங்குச் சந்தை யான பாம்பே ஸ்டாக் எக்ஸ் சேஞ்ச், தேசிய பங்குச் சந்தை வாயிலாக பங்கு பரிவர்த்தனை கள் நடக்கின்றன. பி.எஸ்.இ-யில் 5,000 கம்பெனிகளுக்கு மேலும், என்.எஸ்.இ-யில் 1,600 கம்பெனி களுக்கு மேலும் பட்டியலிடப் பட்டு பங்கு வர்த்தகங்கள் நடைபெற்று வருகின்றன.
பெரிய நிறுவனங்கள் மட்டுமே பங்குச் சந்தைகளில் பட்டியலிடப் பட்டு, பங்குகள் மூலம் முதலீடு திரட்டிவந்த நிலையில், சிறிய, நடுத்தர நிறுவனங்கள்கூட பங்குச் சந்தைகள் வாயிலாக, நிதி திரட்டும் ஒரு வாய்ப்பு 2012-ம் ஆண்டில் ஏற்படுத்தப்பட்டது. அந்த ஆண்டில்தான் ‘எஸ்.எம்.இ, எக்ஸ்சேஞ்ச்’ தொடங்கப்பட்டு, நடுத்தர நிறுவனங்களுக்கு நம்பிக்கை கதவு திறந்துவிடப் பட்டது.
பாம்பே ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச்சில், பி.எஸ்.இ, எம்.எஸ்.இ வாயிலாகவும், நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்சில், ‘என்.எஸ்.இ எமர்ஜ்’ வாயிலாகவும், எஸ்.எம்.இ நிறுவனங்கள் பங்கு வெளியிட்டு பரிவர்த்தனைகளை செய்ய முடியும்.

நன்மைகள் என்ன?
பங்குச் சந்தைகளில், எஸ்.எம்.இ நிறுவனங்கள் பட்டியலிடப்படு வதால் பல நன்மை கிடைக்கும்.
பங்குச் சந்தைகளில் பட்டிய லிடப்படும் எஸ்.எம்.இ-களுக்கு குறைவான வட்டியில் கடன் வழங்கப்படுகிறது.
பட்டியலிடப்பட்ட கம்பெனி கள், அடுத்த தலைமுறைக்கு மாற்றம் செய்யப்படும்போது அவற்றைக் கையாள்வது மிக எளிது.
பங்குச் சந்தைகளில் பட்டிய லிடப்படும் சிறு, நடுத்தர தொழில் நிறுவனங்கள் பட்டியலிடப்பட்டு இரண்டு ஆண்டுகளில், ‘மெயின் போர்டு’ என்று சொல்லப்படும் பி.எஸ்.இ அல்லது என்.எஸ்.இ-க்கு மாற்றிக்கொண்டு பரிவர்த்தனை நடத்த முடியும்.
நிறுவனத்தின் நிதி விவரங்களை, மூன்று மாதங்களுக்கு ஒருமுறை செபிக்கு வழங்குவதற்குப் பதில், ஆறு மாதங்களுக்கு ஒருமுறை வழங்கினால் போதும்.
தகுதி என்ன?
ஒரு நிறுவனம், ரூ.1 கோடிக்கு அளிக்கப்பட்ட நிகர மதிப்பு (Paidup Networth) வைத்திருக்க வேண்டும். பட்டியலிடப்பட்டபின், அளிக்கப்பட்ட நிகர மதிப்பு ரூ.25 கோடிக்கு மிகாமல் இருந்தால்போதும்.
பட்டியலிடப்படுவதற்கு மூன்று ஆண்டுகளுக்கு தொடர்ந்து லாபம் காட்டும் நிறுவனங்களையே பட்டியலிட அனுமதிக்கப்படுகின்றன. ஸ்டார்ட்அப் நிறுவனங்கள், ஓர் ஆண்டு லாபம் ஈட்டினாலே பட்டிய லிடலாம்.
எஸ்.எம்.இ தொழில் நிறுவனங்களில் குறைந்தபட்ச முதலீடு ரூ.1 லட்சம் என்ற அளவில் தொடங்குகிறது. இதற்குக் காரணம், எஸ்.எம்.இ-கள் அதிக ரிஸ்க் கொண் டவை. இதில் சிறுமுதலீட்டாளர்கள் எளிதில் நுழைவதைத் தடுக்கவே அதிக அளவில் முதலீட்டுத் தொகை நிர்ணயிக்கப் பட்டுள்ளது. நிறுவனம், முதலீடு குறித்த பரந்த அறிவைப் பெற்றவராக இருப்பார் என்ற காரணத்துக்காக, குறைந்த பட்ச முதலீடு ரூ.1 லட்சத்தில் இருந்து தொடங்குகிறது.
நம் நாட்டில் இப்போது பி.எஸ்.இ. மூலம் 377 எம்.எஸ்.இ நிறுவனங்களும், என்.எஸ்.இ மூலம் 200 நிறுவனங்களும் தங்கள் நிறுவனங்கள் பட்டியல் இட்டுள்ளன. நீங்கள் ஒரு எஸ்.எம்.இ நிறுவனத்தை நடத்தி வருகிறீர்கள் எனில், நீங்களும் உங்கள் நிறுவனத்தை பங்குச் சந்தையில் பட்டியல் இடலாமா?
மற்ற நாடுகளில்...
லண்டன் பங்குச் சந்தையின் மாற்று முதலீட்டு சந்தை 1995-ல் நிறுவப்பட்டது, இதன்மூலம், கிட்டத்தட்ட 30 பில்லியன் பவுண்டுகள் திரட்டப் பட்டுள்ளன.
ஆஸ்திரேலியாவில் உள்ள நேஷனல் ஸ்டாக் எக்ஸ்சேஞ்ச் எஸ்.எம்.இ-களை பட்டியலிடுவதில் கவனம் செலுத்துகிறது. தென் ஆப்பிரிக்காவில் உள்ள எஸ்.எம்.இ-களுக்கான மாற்று பரிமாற்றம் அக்டோபர் 2003-ல் அமைக்கப்பட்டது.
தென் சீனாவின் குவாண்டாங் மாகாணத்தில் உள்ள ஷென்சென் பங்குச் சந்தை, எஸ்.எம்.இ-களுக்கான பரிமாற்றப் பாதையை மே 2004-ல் அதிகாரபூர்வமாகத் தொடங்கியது.
ஹாங்காங், ஜப்பான் உட்பட முன்னணி நாடுகள் அவரவருக்கான கொள்கைகளுடன் எஸ்.எம்.இ- களுக்கான நிதி திரட்டும் பங்குச் சந்தைகளை திறந்துவிட்டுள்ளன.