`எப்படா வாய்ப்பு கிடைக்கும்' என்று வங்கிகள் காத்திருந்தது போலவே தோன்றுகிறது.
ரிசர்வ் வங்கி இந்திய வங்கிகளுக்கு வழங்கும் குறுகிய காலக் கடன்களுக்கான ரெப்போ வட்டியை 0.40 சதவிகிதம் உயர்த்துவதாக அறிவிப்பு வெளியிட்ட வேகத்தில் உடனடியாக வங்கிகளும் தங்களுடைய வட்டி விகிதங்களை உயர்த்தியுள்ளன.
நாட்டின் முன்னணி வீட்டுக்கடன் வழங்கும் நிறுவனமான ஹெச்.டி.எஃப்.சி நிறுவனம் பெஞ்ச்மார்க் கடன் விகிதத்தை 30 அடிப்படை புள்ளிகள் உயர்த்துவதாக அறிவித்தது. இது ஏற்கெனவே கடன் வாங்கியவர்களுக்கும், புதிய கடன் வாங்குபவர்களுக்கும் பொருந்தும் என ஹெச்.டி.எஃப்.சி ஹவுசிங் ஃபைனான்ஸ் நிறுவனம் தெரிவித்துள்ளது.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
புதிய கடன் வாங்குபவர்களுக்கான திருத்தப்பட்ட விகிதங்கள் கடன் மற்றும் கடன் தொகையைப் பொறுத்து 7 சதவிகிதம் முதல் 7.45 சதவிகிதம் வரை இருக்கும். தற்போதுள்ள வரம்பு 6.70 சதவிகிதம் முதல் 7.15 சதவிகிதம் வரை உள்ளது. தற்போதுள்ள வாடிக்கையாளர்களுக்கு கட்டணங்கள் 30 அடிப்படை புள்ளிகள் அல்லது 0.3 சதவிகிதம் உயரும் என்று கூறப்படுகிறது.
இதுபோலவே, பஞ்சாப் நேஷனல் வங்கி அடிப்படைக் கடன் விகிதத்தை 0.40 சதவிகிதம் உயர்த்தியுள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதன்மூலம் வட்டி விகிதம் 6.50 சதவிகிதத்தில் இருந்து 6.90 சதவிகிதமாக மாற்றப்பட்டுள்ளது. இது, ஜூன் 1 முதல் நடைமுறைக்கு வரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
புதிய வாடிக்கையாளர்களுக்கு திருத்தப்பட்ட ஆர்.எல்.எல்.ஆர் மே 7-ம் தேதி முதல் அமலுக்கு வரும் என்று பஞ்சாப் நேஷனல் வங்கி தெரிவித்துள்ளது. அதுபோல, 2 கோடிக்கும் குறைவான டெபாசிட்டுகளுக்கான வட்டி விகிதங்களை 5.10 சதவிகிதத்தில் இருந்து 5.15 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
ஐ.சி.ஐ.சி.ஐ வங்கியில் ரூ.35 லட்சம் வரையிலான கடன்களுக்கு 6.70 சதவிகிதத்திலிருந்து 7.10 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.35 லட்சம் முதல் ரூ.75 லட்சம் வரையிலான கடன்களுக்கு 7.10 சதவிகிதத்திலிருந்து 7.70 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது. ரூ.75 லட்சத்துக்கு அதிகமான கடன்களுக்கு 7.10 சதவிகிதத்திலிருந்து 7.80 சதவிகிதமாக உயர்த்தப்பட்டுள்ளது.

பேங்க் ஆஃப் பரோடா, பேங்க் ஆஃப் இந்தியா 6.5 சதவிகிதத்திலிருந்து 6.9 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது. ஃபெடரல் வங்கி 7.65 சதவிகிதத்திலிருந்து 8.05 சதவிகிதமாக உயர்த்தியுள்ளது.
இனி என்ன, அடுத்தடுத்து பிற வங்கிகளும் தங்களின் வசதிக்கேற்ப அறிவிக்கும். கடன் வாங்கிய, கடன் வாங்க விரும்புகிற மக்களின் பாடு இனி திண்டாட்டம்தான்...