
கவர் ஸ்டோரி
திருமணம் எந்தளவுக்கு வாழ்க்கையில் மகிழ்ச்சியானதும் அழகானதுமாக இருக்கிறதோ, அதே அளவுக்கு சிக்கல்கள் நிறைந்ததாகவும் இருக்கிறது என்பதுதான் நிதர்சனம். காரணம், திருமணத்தில் ஒரு ஆணும் பெண்ணும் மட்டுமே இணைவதில்லை. இரண்டு குடும்பங்கள், இரண்டு வெவ்வேறு கலாசார முறைகள், வளர்ப்பு முறைகள் ஒன்றாக இணைந்து மகிழ்ச்சியான பல சம்பவங்களையும், வருத்தம் தரும் சில நிகழ்வுகளையும் தந்துவிடுகின்றன.
சிக்கல்கள் நிறைந்த திருமண வாழ்க்கையை எந்தவித பிரச்னையும் இல்லாமல் சுமுகமாகக் கொண்டு செல்ல பரஸ்பரம் சரியான புரிந்து கொள்ளலும் அன்பும் மரியாதையும் எந்தளவுக்கு அவசியமோ, அந்த அளவுக்கு நிதி சார்ந்த அம்சங்களும் மிகுந்த கவனத்தில் கொள்ள வேண்டிய விஷயங்களாக உள்ளன.
தற்போதுள்ள பொருளாதாரச் சூழலில் திருமணம் செய்துகொள்ளப் போகும் ஒவ்வொரு ஜோடியும் திருமணத்துக்கு முன் கட்டாயம் கவனத்தில்கொள்ள வேண்டிய நிதி சார்ந்த விஷயங்களைப் பற்றி நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன் விரிவாக எடுத்துச் சொன்னார்.
‘‘திருமண பந்தத்தில் இணையப்போகும் ஆண் - பெண் இருவரும் ஒருவருக்கு ஒருவர் பிடித்திருப்பதைத் தாண்டி, பெரும்பாலும் எதைப் பற்றியும் விவாதிப்பதில்லை. இதனாலேயே திருமணத்துக்குப் பின் பல விஷயங்களில் பிரச்னைகள் வெடிக்க ஆரம்பித்துவிடுகின்றன. திருமணத்துக்கு முன்னும், திருமணத்துக்குப் பிறகும் இருவரும் சில முக்கியமான விஷயங்களை கடைப் பிடித்தாலே நிச்சயம் நினைத்தபடி மகிழ்ச்சி யான மண வாழ்க்கையை வாழ முடியும்.
குடும்பமாக இருந்தாலும் சரி, தனிநபராக இருந்தாலும் சரி, நிதி சார்ந்து சுதந்திரமாகவும், நெருக்கடிக்கு உள்ளாகாமலும் இருக்க அடிப்படை விஷயமே எவ்வளவு சம்பாதிக் கிறோம் என்பதைவிட எவ்வளவு செலவு செய்கிறோம் என்பதைக் கவனிப்பதுதான். ஒருவருடைய செலவுகளைப் பொறுத்துதான் அவரின் நிதி எதிர்காலம் என்பது இருக்கும். ‘விரலுக்கேற்ற வீக்கம்’ என்கிற மாதிரி நம் தகுதிக்கு மீறி நாம் எதையும் செய்யக் கூடாது என்கிற அடிப்படைப் பாடத்தை நமக்குச் சொல்லித் தருகிறது.
இனி, மண வாழ்க்கையில் இணையப் போகும் தம்பதிகள் பின்பற்ற வேண்டிய நிதிப் பாடங்கள் பற்றிக் கொஞ்சம் விரிவாகப் பார்ப்போம்.

பாடம் 1 : மனம்திறந்த உரையாடல்
திருமணத்துக்குத் தயாராக இருக்கும் ஆணும் பெண்ணும் முதலில் செய்ய வேண்டிய விஷயம், மனம்திறந்து தங்களைப் பற்றி பகிர்ந்துகொள்வதுதான். அந்தப் பகிர்தலில் முக்கியமாக இடம்பெற வேண்டியது அவர்களுடைய நிதி மேலாண்மை குறித்த விஷயங்கள்தான். அதாவது, தங்களுடைய பணத்தைக் கையாளும் முறை. செலவுமுறை, வருமானம், கடன் உள்ளிட்ட விஷயங்களைப் பற்றியும் திறந்த மனதுடன் உரையாட வேண்டும். இதுவரை எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ்ந்திருக்கிறோம், இனி எப்படிப்பட்ட வாழ்க்கையை வாழ விரும்புகிறோம் என்பதையெல்லாம் தெளிவாகப் பேசிவிட வேண்டும்.
உதாரணமாக, ஏற்கெனவே கடன் இருந்தால் அல்லது நிதி சார்ந்து சந்திக்கும் பிரச்னைகள் இருந்தால் தெரிவிக்க வேண்டும். பார்ட்டி, நண்பர்களுடன் ஊர் சுற்றுவது என்று இருப்பவரா, அடிக்கடி கேட்ஜெட்டை மாற்றுபவரா, மாதம் ஒருமுறை புதிதாக ஆடைகள் வாங்குபவரா, சேமிக்கும் பழக்கம் இருக்கிறதா, பணத்தைப் பற்றிய பார்வை எப்படி இருக்கிறது போன்ற விஷயங்களைத் தவறாமல் பேச வேண்டும். இதன்மூலம் கிடைக்கும் புரிந்துகொள்ளல்தான் எதிர்காலத்தில் குடும்பத்தை வளமாகக் கொண்டு செல்ல உதவும்.
ஒருவர் கண்ணை மூடிக்கொண்டு செலவு செய்பவராக இருந்தால், இன்னொருவர் அவருக்கு அதைப் புரிய வைக்க வேண்டும். குறை சொல்லாமல், சண்டை போடாமல் புரியும்படி சொல்லி, தேவையில்லாத செலவுகளைப் படிப்படியாகக் குறைப்பதற்கான முயற்சிகளை எடுக்க வேண்டும்.
இன்றைய இன்ஸ்டாகிராம், ஃபேஸ்புக் காலத்தில் தொடர்ந்து டிராவல், ஃபுட், ஃபேஷன் சார்ந்து பதிவுகள் பதிவிடப்பட்டுக்கொண்டே இருக்கின்றன. இந்தப் பதிவுகள் எல்லோருக்குள்ளும் உந்துதலை ஏற்படுத்தும். நாமும் சுற்றுலா போக வேண்டும், புகைப்படம் எடுத்து பதிவேற்ற வேண்டும். விதவிதமான ஹோட்டல்களுக்குச் சென்று சாப்பிட வேண்டும் என்கிற எண்ணத்தை எல்லோருக்குள்ளும் வரவழைத்துவிடுகின்றன. ஆனால், அந்தத் தூண்டுதலைக் கட்டுப்பாட்டுக்குள் வைத்துக்கொள்ள வேண்டும்.
நம்முடைய நிதிநிலையைப் பொறுத்துதான் நம்முடைய செலவுகள் இருக்க வேண்டுமே தவிர, பிற காரணிகள் செலுத்தும் ஆதிக்கத்தால் இருக்கக் கூடாது. நம் செலவுகள் மீது எப்போதும் ஒரு கண் இருக்கட்டும். செலவு செய்யும்முன் இரண்டு மூன்று முறை யோசியுங்கள்.
இதற்காக செலவே செய்யக் கூடாது என்று சொல்ல வர வில்லை. வீட்டுக்குத் தேவையான பொருள்களை வாங்குவது, சுற்றுலா செல்வது எல்லாம் அவசியம் தேவைதான். இதற்கான பணத்தைச் சேமித்து நம் ஆசையை நிறைவேற்றிக் கொள்ளலாமே தவிர, கடன் வாங்கிச் செலவு செய்யக் கூடாது என்பதைப் புரிந்துகொள்வது அவசியம்.
பாடம் 2: திருமணச் செலவுகள்
நம் நாட்டில் திருமணங் களுக்குச் செய்யும் செலவுகளைப் பார்த்தால், யாரும் நம்மை ஏழை நாடு என்று சொல்ல மாட் டார்கள். கடன் வாங்கியாவது விமரிசையாகத் திருமணத்தை நடத்திவிட வேண்டும் என்று நினைக்கிறார்கள் நம் மக்கள். ஆனால், இன்றைய தலைமுறை யினர் பலருக்கு திருமணத்துக் காகப் பெரிதாக செலவு செய்ய விருப்பம் இல்லை. அவர்கள் மாற்றி யோசிக்கத் தொடங்கி இருக்கிறார்கள். போட்டோ ஷூட் முதல், ஹனிமூன் வரை பல செலவுகளைத் தவிர்த்து அந்தப் பணத்தை புத்திசாலித்தன மாக சேமிக்கவும் முதலீடு செய்யவும் ஆரம்பிக்கிறார்கள்.
இதுபோன்ற முடிவுகளை எடுக்கும் தம்பதிகளின் நிதி எதிர்காலம் திருமணத்தின் முதல் நாளிலிருந்தே ஆரம்பித்துவிடுகிறது. ஆடம்பரமான செலவு களைத் தவிர்க்கலாம். ஒருமுறை தானே திருமணம் என்று செலவு களை அதிகரித்த பெரும்பாலா னோர் வாழ்நாள் முழுவதும் அதற்காக வருத்தப்படும் நிலைக்கு ஆளாகியிருக்கிறார்கள். எனவே, திருமணத்தில் அவசியமான செலவுகளை மட்டும் செய்வது எல்லா வகையிலும் பலன் தரும்.
பாடம் 3: ஜாயின்ட் அக்கவுன்ட் கட்டாயம்
திருமணத்துக்குப் பிறகு கணவன் - மனைவி இருவருக்கும் தனித்தனியாக சேமிப்புக் கணக்கு கள் இருந்தாலும் இருவருக்கும் ஒரு ஜாயின்ட் அக்கவுன்ட் வைத்துக்கொள்ள வேண்டும்.
இந்த ஜாயின்ட் அக்கவுன்டில் மாதாந்தரச் செலவுக்கென ஒரு தொகையை வைத்துக்கொண்டு அந்தக் கணக்கிலிருந்து மட்டுமே செலவுகளை மேற்கொள்ள வேண்டும். இருவரும் சரிசமமாக சம்பாதிப்பவர் எனில், 50:50 என இருவரும் தங்களுடைய ஊதியத் திலிருந்து குடும்ப செலவுக்கு ஜாயின்ட் அக்கவுன்டுக்கு அனுப் பிக்கொண்டு அதிலிருந்து குடும்ப செலவுகளைப் பார்க்கலாம்.
குடும்பத்துக்குத் தேவையான அத்தியாவசிய செலவுகள் உணவு, மின் கட்டணம், பெட்ரோல் உள்ளிட்ட செலவுகளை இந்தக் கணக்கிலிருந்து செலவு செய்ய வேண்டும். இதன்மூலம் இருவருமே குடும்பத்தின் பொறுப்புகளைப் பகிர்ந்துகொள்ள வேண்டும். கணவர் கூடுதலாகவும் மனைவி குறைவாகவும் சம்பாதிப்பவர் எனில், 60:40 அல்லது 70:30 என்ற வகையில் குடும்ப செலவு களைப் பகிர்ந்துகொள்ளலாம். ஒவ்வொரு மாதமும் அந்தக் கணக்கை ஆய்வு செய்தாலே எதற்கு எவ்வளவு செலவு செய்திருக்கிறோம், யார் என்ன செலவு செய்திருக் கிறார்கள் என்பது தெரிந்துவிடும். அதன் மூலம் குடும்ப பட்ஜெட்டை நிர்வகித்துக்கொள்ளலாம். குடும்ப செலவுக் கான பங்களிப்புப் போக மீதப் பணத்தை கணவன் - மனைவி இருவரும் தங்களுடைய தனிப்பட்ட செலவுகள், தாய் தந்தை, உடன்பிறந்தவர்களுக்கான செலவுகளை மேற்கொள்ளும் சுதந்திரத்துடன் இருக்கலாம்.
பாடம் 4: உறவினர்கள், நண்பர்களுக்கான செலவுகள்
ஒரு உறவை வளர்க்கவும் நட்பை வளர்க்கவும் நேரமும் பணமும் செலவு செய்ய வேண்டிய சூழல்தான் இன்று நிலவுகிறது. சாதாரணமாக, டீக்கடையில் ஒரு சந்திப்பு கூடினாலே சில நூறு ரூபாய்கள் செலவு செய்ய வேண்டி யிருக்கும். திருமணத்துக்கு முன்பு வரை உடன்பிறந்தவர்கள், நண்பர்கள் உள்ளிட்டோருக்கு கணிசமான செலவுகளை மேற்கொண்டு வந்திருப்போம். ஆனால், திருமணத்துக்குப் பிறகும் அப்படி இருக்க முடியாது. குடும்பம் என்றாகிவிட்ட பிறகு, முன்னுரிமை குடும்பத்துக்குத்தான்.
குடும்ப வளர்ச்சியின் எதிர்காலத்தைக் கருத்தில் கொண்டு சில அவசியமற்ற செலவுகளை நாம் பரிசீலனைக்கு உட்படுத்த வேண்டும். தேவையில்லாமல் நண்பர்களை அழைத்துக்கொண்டு பார்ட்டி, சினிமா, ஊர் சுற்றுவது என்று செலவுகளை மேற்கொள்வது எப்போதாவது மட்டும் இருக்கலாம். அடிக்கடி எனில், அது உங்களுடைய நிதி எதிர்காலத்தையே பாதிக்கும்.
இது தவிர, உறவினர்கள், உடன் பிறந்தவர்கள், தாய் தந்தை என்று வரும் போது தம்பதிகள் இருவரும் தங்களுடைய குடும்பச் சூழல் பற்றித் தெளிவாகப் பேசிக்கொள்ள வேண்டும். அதாவது, குடும்பத்தின் பொறுப்புகளை யார் கவனிப்பது, அதில் எந்தெந்தப் பொறுப்பு களை எல்லாம் திருமணத்துக்குப் பிறகு தொடரலாம், எதையெல்லாம் தவிர்க்கலாம் என்பதைப் பற்றித் தெளிவாகப் பேசி முடிவெடுத்துக்கொள்ள வேண்டும்.
பெற்றோர்கள், உடன்பிறந்தவர்களின் அன்றாடச் செலவுகளுக்கோ, படிப்புக்கோ பணஉதவி செய்து வந்தால் அதைத் தவிர்க்க முடியாது. ஆனால், பண உதவி செய்கிறார் என்பதற்காகவே வேலைக்குப் போகாமல் சுற்றி வருபவர் களுக்காகத் தொடர்ந்து உதவி செய்வது அவசியம் இல்லை. உறவினர்களுக்கு உண்மையிலேயே பண உதவி தேவை எனில், அதைப் பெருந்தன்மையுடன் செய்யுங்கள். ஆனால், அப்படிப்பட்ட உதவிக்கு ஒரு எல்லை உண்டு. அந்த எல்லை அறிந்து செய்வது கணவன் - மனைவிக்குள் தேவை இல்லாமல் பிரச்னை ஏற்படுவதை நிச்சயம்ன் தடுக்க உதவும். பந்தா காட்டுவதற்காகவோ, நல்லவன் என்று பெயர் எடுப்பதற்காகவோ நீங்கள் பணத்தைச் செலவு செய்பவராக இருந்தால் அதை உடனே நிறுத்துவது நல்லது.
மணமகன்/மணமகளின் பெற்றோருக்கு வேண்டிய உதவிகளை மறுக்காமல் செய்யலாம். அவர்களைத் தாண்டி, எப்படியும் பண உதவி செய்துவிடுவார் என்கிற எதிர் பார்ப்பில் இருப்பவர்களுக்கு பணரீதியிலான உதவிகளை செய்யத் தைரியமாக மறுத்துவிடுங்கள்.
இது மாதிரியான விஷயங்களை முடிந்தவரை முன்கூட்டியே நேரடியாகப் பேசிவிடுவது நல்லது. இதனால் சில மனக்கஷ்டங்கள் ஏற்படலாம் என்றாலும், பிற்பாடு பெரிய அளவில் மனக்கசப்புகள் ஏற்பட்டு, உறவு விரிசல் அடையாமல் இருக்க இது நிச்சயம் உதவும்.
பாடம் 5: வீடு, கார், சுற்றுலா, கடன்
திருமணம் முடிந்ததுமே வீடு, கார், சுற்றுலா என்று யோசிப்பது வழக்கமாகிவிட்டது. மாப்பிள்ளை வீடு வாங்கிட்டாரு, காரு வாங்கிட்டாரு என்று மனைவியின் வீட்டார் பெருமையாகப் பேசுவார்கள். அந்தப் பெருமைக் காக நீங்கள் உங்களுடைய சக்திக்கு மீறி எக்கச்சக்கமாகக் கடன் வாங்கி செலவு செய்தால், பின்நாள்களில் கடனை அடைக்க வேண்டிய கடமை தம்பதிகளையே சேரும்.
நமக்கே நமக்கென ஒரு வீடு வாங்க நினைப்பதில் தவறில்லை. அதற்காக எவ்வளவு கடன் வாங்குகிறீர்கள் என்பதுதான் முக்கியம். வீட்டுக் கடன் வாங்கு வதாக இருந்தால் முதலில் டவுன் பேமென்டாகக் கணிசமான பணத்தைத் தயார் செய்துவிட்டு பின்னர், கடன் வாங்கச் செல்லுங்கள். வீட்டுக் கடனுக் காக நீங்கள் வாங்கும் கடனின் இ.எம்.ஐ உங்களுடைய மாத வருமானத்தில் 50 சதவிகிதத்துக் கும் குறைவாக இருக்குமாறு பார்த்துக்கொள்ளுங்கள்.
அதே போல், கடனில் நல்ல கடன், கெட்ட கடன் என்று இரண்டு வகை உண்டு. கடன் வாங்கி, நீங்கள் வாங்கும் பொருள் அல்லது சொத்து, அடுத்து வரும் காலத்தில் மதிப்பு உயரும் வகையில் இருந்தால், அதை நல்ல கடன் என்று சொல்லலாம். அல்லது கடன் மூலம் வாங்கும் பொருள்மூலம் ஏதேனும் வருமானம் வந்தாலும் அதை நல்ல கடன் என்றே சொல்லலாம். ஆனால், கடன்மூலம் வாங்கும் பொருளின் மதிப்பு அடுத்து வரும் காலத்தில் கணிசமாகக் குறையும்பட்சத்தில் அதைக் கெட்ட கடன் எனலாம்.
நல்ல கடனுக்கு உதாரணம், வீட்டுக் கடன். கெட்ட கடனுக்கு உதாரணம் வாகனக் கடன். அலுவலகம் சென்று வர வாகனம் தேவை எனில், இருசக்கர வாகனம் வாங்கிக்கொள்வது நல்லது. கடனில் கார் வாங்குவது அவசியமற்றது. கார் மூலம் வருமானம் ஏதும் ஈட்டப் போகிறீர்கள் எனில்கூட பரவாயில்லை. இல்லாவிட்டால், கார் கடன் மோசமான நிதி நிலைக்குக் காரணமாகிவிடும். கார் வாங்கினால் மாதம்தோறும் இ.எம்.ஐ கட்ட வேண்டியது ஒருபக்கம் இருக்க, பெட்ரோல் செலவு, இன்ஷூரன்ஸ் செலவு, பராமரிப்புச் செலவு, காரைப் பாதுகாக்க செலவு எனப் பல செலவுகளைக் கட்டாயம் செய்துதான் ஆக வேண்டும். குடும்பத்தின் நிதிநிலை ஓரளவுக்கு சிறப்பாக வளர்ச்சி அடையும் வரை தேய்மானச் சொத்துகளைக் கடனில் வாங்குவதைத் தவிர்க்கலாம்.
பாடம் 6: திடீர் பண உதவி
இப்போதெல்லாம் திடீர் திடீரென்று பலரும் பண உதவி கேட்டு வருகிறார்கள். அவசர மருத்துவச் செலவு, குழந்தைக்கு பள்ளிக் கட்டணம் கட்டுவது என ஏதோ ஒரு காரணத்தைச் சொல்லி, நம் மனதில் பாதிப்பை ஏற்படுத்த நினைக்கிறார்கள். இப்படி உதவி கேட்டு வருகிறவர்களில் உண்மையானவர்களுக்கு மட்டும் உதவி செய்யுங்கள். அவசர உதவி என்று கேட்டுவிட்டு, பணம் வாங்கிச் செல்பவர்களில் பலர், பிற்பாடு அந்தப் பணத்தைத் திரும்பத் தருவதே இல்லை. அதற்காக அவர்களிடம் பலமுறை கேட்க வேண்டிய கட்டாயம் நமக்கு ஏற்பட்டுவிடுகிறது. எனவே, திரும்பி வராத நிலையில் இருக்கும் பண உதவிகளை முடிந்தவரை செய்யாமல் விட்டுவிடுவதே நல்லது. அல்லது 50,000 ரூபாயைக் கடன் கேட்கிறார்கள் எனில், 2,000, 3,000 கொடுங்கள். இவ்வளவுதான் முடிந்தது என்று சொல்லிவிடுங்கள். இதற்காகக் கடன் கேட்டு வந்தவர் நம்மைப் பற்றி என்ன நினைத்தாலும் கவலைப்படாதீர்கள்.

பாடம் 7: பொறுப்பு பகிர்வும், பரஸ்பர ஆதரவும்
திருமண பந்தத்தை அத்தனை சவால்களை மீறியும் அழகாகக் கொண்டு செல்ல வேண்டுமென்றால் எல்லா விஷயத்திலும் பரஸ்பரம் நல்ல புரிந்துகொள்ளல் அவசியம். தராசை சமன் செய்வது போலத்தான் ஒருவர் இறங்கினால் இன்னொருவர் அதைச் சரி செய்ய வேண்டும். குடும்பப் பொறுப்பையும் பாரத்தையும் சமமாகப் பிரித்துக்கொள்ள வேண்டும். கடன் இருந்தால் இருவரும் அதை அடைப்பதில் பங்கெடுத்துக்கொள்ள வேண்டும். இரு தரப்பும் சமநிலையைப் பேணுவதன் மூலம் குடும்பத்தை வளர்ச்சியின் பாதையில் கொண்டு செல்லலாம்.
கொரோனா போன்ற நெருக்கடி சமயங்களில் வேலை இழப்பு, வருமானம் குறைப்பு போன்ற சவால்களை எல்லாம் பார்த்தோம். அதுபோன்ற சமயத்தில் ஒருவர் இன்னொருவருக்கு ஆதரவாக பக்கபலமாக இருக்க வேண்டியது அவசியம். ஒருவர் இன்னொருவருடைய நிலைமையைப் புரிந்து அவருடைய வளர்ச்சிக்கு உதவும் வகையில் செயல் படுவது மகிழ்ச்சியாக வாழ்க்கையைக் கொண்டு செல்ல உதவும். ஒருவர் இன்னொருவருடைய சுதந்திரத்துக்கு இடமளிக்க வேண்டும். என்றாலும் குடும்ப வளர்ச்சியை பாதிக்கும் விஷயங்களில் கண்டிப்புடன் இருப்பதில் தவறில்லை.
பாடம் 8: சொத்துகள் வாங்கும்போது
வீடு போன்ற சொத்துகள் வாங்கும்போதும், முதலீடு என்று வரும்போதும் பெரும்பாலும் ஆண்களே அதைப் பற்ந்த் தீர்மானிக்கிறார்கள். திருமணத் துக்குப் பிறகு, சொத்துகள் வாங்கும்போது, முதலீடுகளைத் திட்டமிடும்போது கலந்து ஆலோசித்து முடிவெடுப்பது நல்லது. ரகசியமாக எதையும் வைத்திருக்க வேண்டியதில்லை. அப்படி இருந்தால் அதுவே உறவில் விரிசலைக் கொண்டு வந்துவிடும்.
அதேபோல், அன்பின் காரணமாக மனைவியின் பேரிலேயே சொத்து வாங்கி அதனால் பாதிக்கப்பட்டவர்களும் உண்டு. நிதி எதிர்காலம் என்ற விஷயத்தில் எந்தவித உணர்வு ரீதியிலான முடிவுக்கும் இடம்கொடுக்காதீர்கள். சொத்து வாங்குவதில் இருவருடைய பங்கும் இருக்கும்பட்சத்தில், எந்த அளவுக்குப் பங்கு இருக்கிறதோ, அந்தளவுக்கு பங்கு உரிமை உண்டு என்று தெளிவாகக் குறிப்பிட்டு சொத்து பத்திரங்களைப் பதிவு செய்யுங்கள். இதனால் ஏதேனும் எதிர்பாராத விதமாகப் பிரிய வேண்டிவந்தால் திருமணத்தால் எல்லாத்தையும் இழந்துவிட்டேன் என்று புலம்ப வேண்டிய தேவை இருவருக்கும் இருக்காது.
பாடம் 9: குழந்தை பெற்றுக்கொள்வதில் திட்டமிடல் வேண்டும்
திருமணமானதுமே புதுமணத் தம்பதிகளைத் துரத்தும் கேள்விகளில் ஒன்று ‘விசேஷம் உண்டா’ என்பதுதான். இந்தக் கேள்வி சமகாலத்தில் புதுமணத் தம்பதிகளைப் பெரும் மன உளைச்சலுக்கு ஆளாக்கிக்கொண்டிருக்கிறது என்பதை மறுக்கவே முடியாது.
குழந்தை பெற்று, அதை வளர்த்து ஆளாக்குவது என்பது இன்றைக்கு மிகப் பெரிய அளவில் செலவு வைக்கும் விஷயமாக இருக்கிறது. இதனால் பல விதங்களிலும் தியாகம் செய்ய வேண்டிய கட்டாயம் இருக்கிறது.
இன்று எல்லாமே தனிக் குடும்பங்களாகிவிட்ட சூழலில் குழந்தைகளைப் பார்த்துக்கொள்வது யார் என்ற பிரச்னை அதிகரித்துள்ளது. கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்பவர்களாக இருக்கும்பட்சத்தில், குழந்தையை யார் வளர்ப்பது என்பதைப் பேசி முடிவுசெய்துவிட்டு, குழந்தையைப் பெற்றுக்கொள்வது நல்லது. திருமணத்துக்கு முன்பு கணவன் - மனைவி இருவரும் வேலைக்குச் செல்லும் போது நிறைய பணம் வருமானமாக வரும். ஆனால், திருமணமான சில மாதங்களிலேயே கர்ப்பமாகிவிட்டால், பெண் வேலையை விட வேண்டியிருக்கும். அப்போது ஒரு வருமானம் திடீரென நின்றுவிடும். ஒரே வருமானத்தில் குடும்பத்தை ஓட்ட வேண்டிய நிலையில், குழந்தை வளர்ப்புக் கான செலவையும் செய்யும் போது சில மனஸ்தாபங்கள் ஏற்பட்டு, அதனால் நிம்மதி இல்லாத சூழ்நிலை உருவாகும். புது உறுப்பினர் நம் வீட்டுக்கு வரும் மகிழ்ச்சியை இந்த மனஸ்தாபம் குறைத்துவிடும். எனவே, நன்கு யோசித்து குழந்தையைப் பெற்றுக் கொள்ளும் முடிவை எடுக்கலாம்.
மேலும், கர்ப்பம் தரித்த பின் வேலையை விட்டுவிட்டு, பல மாதங்களுக்குப் பின் மீண்டும் வேலைக்குச் சேர்வதில் பல சிக்கல்களைச் சந்திக்க வேண்டி இருக்கும். இந்தப் பிரச்னையையும் எப்படி சமாளிக்கப்போகிறோம் என்பது குறித்து நன்கு யோசித்து முடிவெக்கலாம்.
குழந்தை விஷயத்தில் உங்களுடைய சூழல், நிதி நிலை இவையெல்லாவற்றையும் கருத் தில்கொண்டு எதற்கு முதலில் முக்கியத்துவம் தர வேண்டும் என்பதை தீர்மானிப்பது அவசியம். குழந்தை விஷயத்தில், இயல்பாக கருத்தரித்தால் அதை மகிழ்ச்சியுடன் ஏற்றுக் கொள்ளுங்கள். இல்லாவிட்டால் காத்திருங்கள். உறவினர்கள், நண்பர்கள், சமூகம் சொல்லும் எதற்கும் காது கொடுக்காதீர்கள்.
அதேபோல், குழந்தையைக் கவனித்துக்கொள்ள என்ன ஏற்பாடு என்று திட்டமிடுங்கள். வேலையை விடாமல் பேறுகால விடுமுறையை எடுத்துக்கொண்டு குழந்தையைப் பார்த்துக்கொள்ள என்னவெல்லாம் வாய்ப்பிருக்கிறது என்று பாருங்கள்.

பாடம் 10: சேமிப்பும் முதலீடும்
வாழ்க்கையில் அடுத்து என்ன நடக்கும் என்பது யாருக்கும் தெரியாது. காரணம், எப்போது வேண்டுமானாலும் எதுவும் நடக்கலாம் என்ற வகையிலான வாழ்க்கை முறையைத்தான் நாம் வாழ்ந்துகொண்டிருக்கிறோம். இது நடக்கும், நடக்காது என்று உறுதியாக எதுவும் நம்மால் சொல்ல முடியாது. எனவே, விபத்து, உயிரிழப்பு, வேலை இழப்பு, வருவாய் இழப்பு போன்ற எதுவும் நடக்கலாம் என்பதை மனதில் வைத்துக்கொண்டு அதற்கேற்ப திட்டமிடுதல் அவசியம்.
திருமணமானதும் முதலில் கணிசமான தொகையை அவசர காலத் தேவைக்காக சேமிக்க ஆரம்பியுங்கள். இளம்வயதிலேயே டேர்ம் இன்ஷூரன்ஸ் எடுத்துக்கொள்வது நல்லது. பிரீமியம் மிகக் குறைவாகவும் கவரேஜ் அதிகமாகவும் கிடைக்கும். அடுத்து, மருத்துவ செலவுகளைச் சமாளிக்க ஃபேமிலி ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசி ஒன்று எடுத்துக் கொள்ளுங்கள். இதன்மூலம் இன்னொரு பலனும் உண்டு. வரி செலுத்துபவராக இருந்தால், வரிச் சலுகைக்காக இவற்றைக் கணக்கில் காட்டலாம். இவை தவிர, உபரியாகப் பணம் இருந்தால், அவற்றை முதலீடு செய்யலாம். கணிசமான தொகையை மியூச்சுவல் ஃபண்டிலும், குறிப்பிட்ட அளவில் தங்கத்திலும் சேமிக்கலாம்’’ என விளக்கமாகப் பேசி முடித்தார் நிதி ஆலோசகர் லலிதா ஜெயபாலன்.
திருமணத்துக்கு விதிப் பொருத்தம் எந்த அளவுக்கு முக்கியமோ, அந்த அளவுக்கு நிதிப் பொருத்தமும் முக்கியம் என்பதை வலியுறுத்து வதாகவே இருந்தது அவர் சொன்ன கருத்துகள். ஏற்கெனவே பல தம்பதியினர் அழகாகத் திட்டமிட்டு தங்களுடைய நிதி நிலையை மேம்படுத்திக்கொண்டு வருகிறார்கள். சில தம்பதியினர் சரியான புரிந்துகொள்ளல் இல்லாமல், நிதிப் பற்றாக்குறையிலும் கடன் சுமையிலும் தவிக்கிறார்கள். இந்த இரண்டில் நீங்கள் எப்படி இருக்கப்போகிறீர்கள் என்பது முக்கியமான விஷயம்!