பணக்காரர்கள் மேலும் மேலும் பணக்காரர்களாகி வருவதைக் கண்டு நம்மில் பலர் ஆச்சர்யப்படுகிறோம். அவர்கள் தொட்ட தெல்லாம் பொன்னாகிறது. மைதாஸ் (Midas) மன்னன் போல தொட்டதெல்லாம் தங்கமாகும் வரத்தை அவர்கள் பெற்றிருக்கிறார்களா? இல்லை. பணக்காரர்கள் தங்கள் பணத்தைப் பல மடங்காகப் பெருக்க அவர்களுக்கு ஐந்து முக்கிய பணப்பழக்கங்களைத் தொடர்ந்து மேற்கொள் கிறார்கள். அந்தப் பணப் பழக்கங்கள் என்னென்ன என்று பார்ப்போம்.

1. பதற்றம், மனக்கிளர்ச்சிக்கு உள்ளாவதில்லை...
பணக்காரர்கள் பெரும்பாலும் எதற்கும் பதற்றப்பட மாட்டார்கள்; அவசரப்பட மாட்டார்கள். குறிப்பாக, மனக் கிளர்ச்சியுடன் (Impulsive) செயல்பட மாட்டார்கள்.கொரோனா வைரஸ் பரவல் காரணமாக, 2020 மார்ச் மாதத்தில் இந்தியப் பங்குச் சந்தை உள்ளிட்ட சர்வதேச சந்தைகள் கிட்டத்தட்ட 40% அளவுக்கு வீழ்ச்சியைச் சந்தித்தன.
பெரும்பாலான முதலீட்டாளர்கள் பதற்றமாகக் காணப்பட்டார்கள். பயம் மற்றும் பதற்றத்தில் பல முதலீட்டாளர்கள் கிடைத்த விலைக்கு பங்குகளை விற்றுத் தள்ளினர். ஆனால், பணக்கார முதலீட்டாளர்கள் மட்டும் நிதானமாக பங்குகளை விற்காமல் இருந்ததுடன், இதுதான் வாங்குவதற்கு நல்ல சமயம் என்று நினைத்து புதிதாக முதலீடு செய்தனர்.
இன்றைக்கு இந்தியப் பங்குச் சந்தை அதன் மார்ச் 2020 வீழ்ச்சியிலிருந்து 90% ஏற்றம் கண்டிருக் கிறது. பதற்றத்தில் பங்குகளை விற்றவர்கள், தவறு செய்துவிட்டோமே என வருத்தத்தில் இருக்கிறார்கள். மனக் கிளர்ச்சிக்கு உட்படாமல் இறக்கத்தில் பங்குகளை வாங்கியவர்கள் இப்போது ‘பிராபிட் புக்கிங்’ செய்துகொண்டு சந்தோஷமாக இருக்கிறார்கள்.

2. மோசமான கடன்களைத் தவிர்த்தல்...
நல்ல கடன், கெட்ட கடன் நம்மிடையே இருக்கின்றன. நல்ல கடன் என்பது உங்களின் பணத்தை பல மடங்கு பெருக்குவதாக இருக்கும். உதாரணமாக, தொழில் கடன் 10 - 12% வட்டிக்கு கிடைக்கிறது. இந்தக் கடனை வாங்கி தொழில் வளர்ச்சிக்குப் பயன் படுத்துவது மூலம் 20% வருமானம் ஈட்டுகிறார்கள்.
மதிப்பு குறையும் பொருள்களுக்கு அதிகம் செலவு செய்யாமல், மதிப்பு உயரும் விஷயங்களில் அதிகம் முதலீடு செய்வார்கள். உதாரணமாக, கேஜெட்டு களை (lifestyle gadgets) கடனில் வாங்க மாட்டார்கள். கிரெடிட் கார்டு மூலம் பொருள்களை வாங்க மாட்டார்கள். இவை எல்லாம் தேய்மான சொத்தாக இருப்பதால், பணத்தைக் கரைப்பதாக இருக்கிறது. பெரும்பாலான பணக் காரர்கள் கார் வாங்குவதாக இருந்தாலும் அதைத் தன் சொந்தப் பணத்தில் தான் வாங்குகிறார்கள். அதற்காக அவர்கள் எப்போதும் கடன் வாங்குவதில்லை.
3. சொத்துகள் மற்றும் ரிஸ்க்குகளுக்கு பாதுகாப்பு...
பெரும்பாலும், பணக்காரர்கள் முதிர்ச்சி பலன்களை தரும் எண்டோவ்மென்ட் பாலிசிகளை எடுப்பதில்லை. அவர்கள் இந்த வகை பணப்பலன் பாலிசிகள் நீண்டகாலத்தில் ஆண்டுக்கு சராசரியாக 5 சதவிகிதத்துக்கு மேல் வருமானம் தருவதில்லை என்பதை அறிந்திருக்கிறார்கள். அவர்கள் குறைந்த பிரீமியத்தில் அதிக கவரேஜ் அளிக்கும் டேர்ம் பிளான்தான் எடுக்கிறார்கள். அதுவும் கோடிக் கணக்கான ரூபாய் கவரேஜுக்கு பாலிசி எடுத்திருக்கிறார்கள். இதேபோல், ஹெல்த் இன்ஷூரன்ஸ் பாலிசியைத் தனக்கும் தன் குடும்பத்தினருக்கும் போதிய அளவுக்கு எடுத்திருக்கிறார்கள். பணக்காரர்கள் எப்போதும் குறைவாகச் செலவு செய்து அதிகம் பெறுவதைப் பழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள்.
4. முதலீட்டுப் பரவலாக்கம்...
‘‘எல்லா முட்டைகளையும் ஒரே கூடையில் வைக்கக்கூடாது’’ என்பார்கள். இது இரண்டு விஷயத்தை விளக்குகிறது. ஒன்று, கூடை தவறி விழுந்தால், எல்லா முட்டைகளும் உடைந்துவிடும். அடுத்து, எப்போதும் ஒரு விஷயத்துக்காக ஒன்றை மட்டுமே நம்பி இருக்கக் கூடாது. பணக்காரர்கள் முதலீடு என்று வருகிறபோது ஏதாவது ஒரு சொத்துப் பிரிவில் மொத்தத் தொகையையும் போட மாட்டார்கள். அவர்களின் சொத்தானது பங்குச் சந்தை, தங்கம், ரியல் எஸ்டேட், வங்கி ஃபிக்ஸட் டெபாசிட், மியூச்சுவல் ஃபண்ட் எனப் பரந்துவிரிந்து இருக்கும். செல்வம் உருவாக்கு வதன் அடிப்படையாக முதலீட்டுப் பரவலாக்கத்தை (Diversification) குறிப்பிடலாம்.
பணக்காரர்கள் எப்போதும் தங்களின் முதலீட்டை தங்களின் கட்டுப்பாட்டுக்குள்தான் வைத்திருக் கிறார்கள். அவர்கள் எப்போதும் எளிதில் பணமாக்க முடியாத ரியல் எஸ்டேட் போன்ற சொத்துகளில் மொத்தப் பணத்தையும் போடுவதில்லை.
5. முடிவுகள் மீதான விரைந்த நடவடிக்கைகள்...
பணக்காரர்கள் அவர்களின் முடிவு களை எப்போதும் தள்ளிவைப்பதோ, தாமதப்படுத்துவதோ இல்லை. ஒரு திட்டத்தில் அவர்கள் உறுதியாக இருக்கும் பட்சத்தில் அதை விரைந்து நடைமுறைப் படுத்தி வெற்றி பெறுகிறார்கள். தாமதப் படுத்தும் செயல்கள் பண இழப்பை ஏற்படுத்தும் என்பதை பணக்காரர்கள் அறிந்தவர்களாகவும், பணத்தைச் சரியாக நிர்வகிப்பதில் கண்ணும்கருத்துமாகவும் இருக்கிறார்கள்.
புகை பிடித்தல், மது அருந்துதல் போன்ற மோசமான பழக்கங்கள் நம் உடல்நலனைப் பாதிக்கும். அது மாதிரி, மோசமான பணப் பழக்கங்கள் நம்மை ஏழை ஆக்கிவிடும். எனவே, உங்கள் வாழ்க்கையில் அதிக பணம் சேர்க்க சரியான பண பழக்கங்களை பின்பற்றுங்கள்!
வரிச் சலுகை... செயல்சாரா வருமானம்... பணக்காரர்களின் பளிச் செயல்பாடுகள்!
அனைத்து வரிச் சலுகைகளையும் முழுமையாகப் பயன்படுத்துவது பணக்காரர்களின் பணப் பழக்கமாக இருக்கிறது. அவர்கள் வங்கி சேமிப்புக் கணக்கில் இருக்கும் பணம் மூலம் கிடைக்கும் வட்டி வருமானத்துக்கு அதிக வரி கட்ட வேண்டியிருக்கும் என்பதால், அந்தத் தொகையை லாபத்துக்கு குறைவான வரி கட்டும் பங்குச் சந்தை சார்ந்த முதலீடுகளுக்கு (நிறுவனப் பங்குகள், ஈக்விட்டி ஃபண்டுகள்) மாற்றி வைத்துவிடுகிறார்கள்.
பணக்காரர்கள் செயல்சாரா வருமானத்துக்கு (Passive Income) விரைந்து ஏற்பாடு செய்துவிடுகிறார்கள். அதாவது, ஒரு முறை மேற்கொள்ளும் ஒரு செலவு அல்லது முதலீடு மூலம் நிரந்தரமாக வருமானம் பெறுவதை அவர்கள் வழக்கமாகக் கொண்டிருக்கிறார்கள். உதாரணத்துக்கு, கட்டடங்கள் மூலமான வாடகை வருமானம், முதலீடு மீதான வருமானத்தைக் குறிப்பிடலாம்.