ஒவ்வொரு இந்தியர் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது தெரியுமா? #DoubtOfCommonMan

`பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது.’
விகடனின் #DoubtOfCommonMan பக்கத்தில் சுந்தரச்சோழன் என்ற வாசகர், "இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..? வட்டியுடன் எவ்வளவு கடன் தொகையைக் கட்ட வேண்டியுள்ளது?" என்ற கேள்வியை எழுப்பியிருந்தார்.
எல்லா நாடுகளுமே மக்கள் நலத் திட்டங்களுக்காகவும் தொழில் வளர்ச்சிக்காகவும் உலக வங்கி மற்றும் உள்நாட்டு வங்கிகளில் கடன் வாங்குவது வழக்கம்தான். நமது வாசகரின் கேள்விக்கான விடையைத் தெரிந்துகொள்ள மத்திய அமைச்சகம் வெளியிட்டுள்ள கடன் நிலை ஆய்வறிக்கையை அலசினோம். அதில் அவரின் முதல் கேள்விக்கான பதில் கிடைத்தது.
இந்தியா இதுவரை எவ்வளவு கடன் வாங்கியுள்ளது..?
2010-11-ம் நிதியாண்டு முதல் இந்தியாவின் கடன் நிலை பற்றிய ஆய்வறிக்கையை மத்திய அரசு வெளியிட்டு வருகிறது. இந்த ஆய்வறிக்கையின் 8-வது பதிப்பு கடந்த ஏப்ரல் மாதம் வெளியானது. அந்தப் பதிப்பில் இந்தியாவின் கடன் குறித்து தகவல் கிடைக்கிறது.
2018-ம் ஆண்டு செப்டம்பர் மாதம் வரை இந்திய அரசு 82,03,253 கோடி ரூபாய் கடன் பெற்றுள்ளது. மேலும், அந்த ஆய்வறிக்கையில் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் பொதுக் கடன் 51.7% அதிகரித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த ஆண்டு மத்தியில், ஐ.நா சபை வெளியிட்ட மக்கள் தொகை கணக்குப்படி இந்தியாவின் மக்கள் தொகை 136.64 கோடி. இந்தியாவின் மொத்தக் கடன் 82,03,253 கோடி ரூபாய் என்றால், ஒவ்வொரு இந்தியக் குடிமகன் தலையிலும் எவ்வளவு கடன் இருக்கிறது?
ஒவ்வொரு இந்தியக் குடிமகனின் தலையிலும் தோராயமாக இருக்கும் கடன் தொகை 60,034 ரூபாய்.
மேலும், இந்த ஆய்வறிக்கைகளிலிருக்கும் சில தகவல்களைப் பார்ப்போம்... 2014-ம் ஆண்டு ஜூன் மாதம் வரை இந்தியாவின் மொத்தக் கடன் தொகை 54,90,763 கோடியாக இருந்துள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் 82,03,253 கோடியாக உயர்ந்துள்ளது.
மோடி பிரமதராகப் பதவியேற்ற பின்பு, பல்வேறு திட்டங்களுக்காகக் கடந்த 5 ஆண்டுகளில் மட்டும் சுமார் 28 லட்சம் கோடி ரூபாய் கடனாகப் பெற்றுள்ளது இந்திய அரசு.
இதுகுறித்து பொருளாதார நிபுணர் நாகப்பனிடம் பேசினோம்.
"பொதுவாக ஒரு நாடு கடன் வாங்குவது உள்கட்டமைப்பு, புதிய திட்டங்கள் உள்ளிட்ட சில விஷயங்களுக்காகத்தான். எவ்வளவு கடன் வாங்குகிறோம் என்பதை அரசாங்கமே பட்ஜெட்டில் வெளிப்படையாகச் சொல்கிறது. இப்படி அதிகமாக கடன் வாங்குவதற்குக் காரணம், மக்கள் சரியாக வரி கட்டாததுதான். உதாரணத்துக்கு, ஒருவர் நிலம் வாங்குகிறார் என்றால் 11 சதவிகிதம் வரி கட்ட வேண்டும். ஆனால், பாதி தொகையைக் காசோலையாகவும் மீதியை ரொக்கமாகவும் கொடுக்கிறார். இதன்மூலம் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் ஏமாற்றப்படுகிறது. இது மட்டுமல்ல பல வகைகளில் அரசாங்கத்துக்கு வர வேண்டிய வரிப் பணம் சரிவர வருவதில்லை. இதனால் அரசாங்கம் கடன் வாங்க வேண்டிய சூழலுக்குத் தள்ளப்படுகிறது. மேலும், அரசங்கத்துக்குக் கிடைக்கும் வரிப் பணத்தில் மக்களுக்காகப் பல சலுகைகளை வழங்கப்படுகின்றன. உதாரணத்திற்கு, அலுவலகங்களில் வேலை பார்ப்பவர்களுக்கு வழங்கப்படும் பிஎஃப் தொகைக்கு, அரசாங்கம் 8 சதவிகத்திற்கு மேல் வட்டி வழங்குகிறது. இந்த வட்டித் தொகையானது அரசாங்கத்திற்குக் கிடைக்கும் வரிப் பணத்திலிருந்தே செலுத்தப்படுகிறது. இதனால் அரசாங்கத்திற்கு நஷ்டமே ஏற்படும். இதேபோன்று வழங்கப்படும் பல சலுகைகளால் அரசாங்கம் கடன் வாங்கும் சூழ்நிலை உருவாகிறது.

உலக வங்கியில் கடன் வாங்குவது ஒரு பாதுகாப்பான விஷயம். காரணம். அங்குதான் மிகக் குறைந்த அளவிலான (2 அல்லது 3 சதவிகித வட்டி) வட்டிக்குப் பணம் தரப்படும். இதுவே உள்நாட்டுக் கடன் என்றால் வட்டி அதிகமாக இருக்கும்" என்றவரிடம் "பணமதிப்பிழப்பு நடவடிக்கையால் கடன் அதிகரித்திருப்பதாகச் சொல்லப்படுகிறதே" என்றோம்.
"பணமதிப்பிழப்பிற்கும் இதற்கும் எந்த சம்பந்தமுமில்லை. பணமதிப்பிழப்பின் போது ரிசர்வ் வங்கி புதிய நோட்டுகளை அச்சடித்ததால் கடன் வாங்கும் அளவு குறைந்திருந்தாலும் குறைந்திருக்குமே தவிர அதிகரிக்க வாய்ப்பில்லை. அப்படி ஒரு கருத்தை யாரவது முன் வைத்தால் அது போலியான கருத்து. திட்டங்களை நிறைவேற்றவே கடன்களை வாங்குகிறார்கள்..." என்றார் அவர்.
உலக வங்கியில் கடன் வாங்குவது ஒரு பாதுகாப்பான விஷயம். காரணம், அங்குதான் 2 அல்லது 3 சதவிகித வட்டிக்குப் கடன் தரப்படும்.பொருளாதார நிபுணர் நாகப்பன்
"மேலும் மேலும் கடன் வாங்காமல் இருக்க என்ன செய்ய வேண்டும்?" என்று நாகப்பனிடம் கேட்டோம்.
"காங்கிரஸ் ஆட்சிக் காலத்திலேயே நேரடி மானியம் என்ற திட்டத்தை வகுத்தார்கள். அந்த திட்டத்தை தற்போது பி.ஜே.பி அரசாங்கம் அமல்படுத்தியுள்ளது. முன்பெல்லாம் மானியம் என்பது ஒரு நிறுவனத்திற்கு வழங்கப்பட்டது. உதாரணமாக உரம் தயாரிக்கும் நிறுவனத்திற்கு மானியத்தை வழங்கி, விவசாயிகளுக்குக் குறைந்த விலைக்குச் சந்தையில் உரத்தை விற்க வேண்டும் என்று அரசாங்கம் கூறியது. அந்த மானியத்தை வாங்கிக் கொண்டு, நிறுவனங்கள் உரம் தயாரிப்பில் அந்த மானிய தொகையைப் பயன்படுத்தாமல் ஏமாற்றின. இதனைத் தடுப்பதற்காக, 'நிறுவனங்கள் என்ன விலை வேண்டுமானாலும் வைத்துக் கொள்ளட்டும்... நாங்கள் மானியத்தை நேரடியாக விவசாயிகளிடம் கொடுத்துவிடுகிறோம்' என்ற முடிவுக்கு வந்தது அரசாங்கம். இதன்மூலம் பணம் சேமிக்கப்படுகிறது. இதுமட்டுமல்லாமல் போலி ரேஷன் அட்டைகளை ஒழித்தது, உஜ்வாலா திட்டம் மூலம் மின்சாரம் சேமிப்பு, பெட்ரோலுக்கான வரி உயர்வு என்று பல்வேறு சிறப்புத் திட்டங்கள் மூலம் பல்லாயிரம் கோடி ரூபாய் பணத்தைச் சேமித்து வருகிறது. ஆனால் இந்தத் தொகை அனைத்தும் நிதிப் பற்றாக்குறையைத் தீர்க்கவே சரியாகிவிடுகிறது. இதுபோன்று இன்னும் பல திட்டங்களைக் கொண்டு வருவதன் மூலமும் வரிப் பணத்தை வசூலிப்பதில் கெடுபிடிகளைக் கொண்டு வருவதன் மூலமும் கடன் வாங்குவதைக் கட்டுப்படுத்தலாம்" என்றார்.
உலகில் வாழும் ஒவ்வொருவர் மீதும் சுமார் 23.30 லட்சம் ரூபாய் கடன் உள்ளது'International Institute Of finance
இந்திய அரசின் ஆய்வறிக்கைகளை அலசிக் கொண்டிருந்தபோது இன்னொரு ஆய்வறிக்கை நம் கண்ணில் பட்டது. சமீபத்தில் வெளியான சர்வதேச நிதியத்தின் (International Institute Of finance) ஆய்வறிக்கைதான் அது. அந்த ஆய்வறிக்கையில் ஒரு அதிர்ச்சியூட்டும் தகவல் இடம்பெற்றிருந்தது. 'உலகில் வாழும் ஒவ்வொருவர் மீதும் சுமார் 23.30 லட்சம் ரூபாய் கடன் உள்ளது' என்பதே அது. உலக நாடுகளின் மொத்தக் கடன், 255 ட்ரில்லியன் டாலர் என்கிறது சர்வதேச நிதியம் அமைப்பு. இது இந்திய மதிப்பில் சுமார் 18,360 லட்சம் கோடி ரூபாய்.
உலக நாடுகள், 2019-ம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் மட்டும் 5,040 லட்சம் கோடி ரூபாய்க் கடன் பெற்றுள்ளன. இதில் 2.7 சதவிகிதம் இந்தியா பெற்ற கடன் என்று சர்வதேச நிதியத்தின் ஆய்வறிக்கை குறிப்பிட்டுள்ளது.
இந்திய அரசு வட்டியுடன் எவ்வளவு கடன் தொகையைக் கட்ட வேண்டியுள்ளது?
2016-17 நிதியாண்டில் 5,144.26 கோடி, 2017-18 நிதியாண்டில் 5,950.76 கோடி - இது இந்தியா செலுத்தியுள்ள வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டி.
புதிய திட்டங்கள் தொடங்குவதற்காக அடிக்கடி கடன் வாங்குவதால் மொத்தமாக வட்டியுடன் கட்ட வேண்டிய தொகை எவ்வளவு என்பதைக் கண்டறிய முடியவில்லை. ஆனால், இந்திய அரசு ஆண்டுதோறும் வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடன்களுக்காக எவ்வளவு வட்டித் தொகை செலுத்துகிறது என்பதைக் கண்டறிந்தோம்.
ஆண்டுதோறும் இந்தத் தொகை மாறிக்கொண்டே இருக்கிறது. வெளிநாட்டுக் கடன்களுக்கான வட்டித் தொகை எவ்வளவு என்பதற்கான விடை மத்திய பட்ஜெட்டில் கிடைத்தது. அதில் கடந்த 2016-17 நிதியாண்டில் 5,144.26 கோடி ரூபாயும், 2017-18 நிதியாண்டில் 5,950.76 கோடி ரூபாயும் வட்டி செலுத்தியுள்ளதாகக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதேபோல உள்நாட்டு கடன்களுக்காக 2016-17 நிதியாண்டில் 3,70,589.82 கோடி ரூபாயும் 2017-18 நிதியாண்டில் 4,04,131.58 கோடி ரூபாயும் வட்டியாக செலுத்தியுள்ளது. இதேபோன்று அனைத்து ஆண்டுக்கான பட்ஜெட் அறிக்கையிலும் வெளிநாட்டுக் கடன் மற்றும் உள்நாட்டுக் கடன்களுக்காகச் செலுத்தும் வட்டித் தொகை குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த வட்டித் தொகை ஆண்டுக்கு ஆண்டு மாறுவதற்கான காரணம் என்ன?

"இதற்கு 2 காரணங்கள் உள்ளன. ஒன்று, உலக வங்கியில் மிகக் குறைந்த அளவிலான வட்டி என்றாலும், அந்த வட்டி விகிதத்தில் சிறு சிறு மாற்றம் இருந்துகொண்டே இருக்கும். மற்றொரு காரணம், இந்திய அரசாங்கம் உலகி வங்கியிடம் வாங்கிய பெரிய தொகையைச் செலுத்திவிட்டு சிறிய தொகையைப் பெற்று அதற்கான வட்டியைச் செலுத்தியிருக்கலாம் அல்லது சிறிய தொகை கடனை அடைத்துவிட்டு பெரிய தொகை வாங்கி அதற்கான வட்டித் தொகையைச் செலுத்திக்கொண்டிருக்கலாம். இதே உள்நாட்டுக் கடன்களுக்கும் பொருந்தும். எனவேதான் வட்டிக் கட்டும் தொகையில் மாற்றம் இருந்துகொண்டே இருக்கிறது" என்கிறார் நாகப்பன்.
இதேமாதிரி உங்களுக்குத் தோணும் கேள்விகள், சந்தேகங்களை கீழே பதிவு செய்யுங்க!