இந்தியாவில் அறிமுகப்படுத்தப்பட்ட யு.பி.ஐ வசதி உலக அளவில் மிகவும் பாராட்டப்பட்ட பணப் பரிவர்த்தனை முறையாக இருந்துவருகிறது. இந்த யு.பி.ஐ வசதி மூலம் டிஜிட்டல் பணப்பரிவர்த்தனைகள் மிக வேகமாக அதிகரித்திருக்கின்றன.
ரொக்கப் பணப் பயன்பாட்டைக் குறைக்கவும், பணப் பரிவர்த்தனையை மிகவும் எளிமையாகவும் விரைவாகவும் மாற்றவும் பெரும் உதவியாக யு.பி.ஐ பரிவர்த்தனை இருந்துவருகிறது.

சில ஆண்டுகளுக்கு முன்வரை பணப் பரிமாற்றம் செய்யவும், கடைகளில் பொருட்கள், சேவைகளைப் பெறவும் வங்கிகளிலும், ஏடிஎம் வாசல்களிலும் நீண்டநேரம் காத்திருக்க வேண்டிய நிலை இருந்தது. ஆனால் யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை முறையை இந்திய தேசிய பணப்பரிவர்த்தனை கழகம் அறிமுகப்படுத்திய பிறகு ஒரு ரூபாய் முதல் லட்ச ரூபாய் வரைக்கும் சில நொடிகளில் பணப்பரிவர்த்தனை செய்ய முடிகிறது. வங்கிகளின் வேலை குறைந்திருக்கிறது. ஏடிஎம்களுக்கான தேவை குறைந்திருக்கிறது.
இது மட்டுமல்லாமல் இது பல டிஜிட்டல் ஸ்டார்ட் அப்கள் தொடங்கவும் வழிவகை செய்தது. கூகுள் பே, போன் பே, பேடிஎம் போன்றவை யு.பி.ஐ பரிவர்த்தனைகள் வளர்ச்சி அடைய முக்கியப் பங்கு வகித்திருக்கின்றன.
ஆனால் இந்தியாவில் நாம் பயன்படுத்தக்கூடிய இந்த யு.பி.ஐ பணப்பரிவர்த்தனையை வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் பயன்படுத்துவதில் சில கட்டுப்பாடுகள் இருந்தன. இந்திய மொபைல் எண்கள் மூலம் மட்டுமே அவர்கள் யு.பி.ஐ பரிவர்த்தனையை மேற்கொள்ள முடிந்தது. இந்நிலையில் தற்போது வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தங்களின் வெளிநாட்டு மொபைல் எண்கள் மூலமாகவும் யு.பி.ஐ வசதியைப் பயன்படுத்தலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதன்படி முதல்கட்டாக சிங்கப்பூர், அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா, ஹாங்காங், ஓமன், கத்தார், சவுதி அரேபியா, ஐக்கிய அரபு அமீரகம், பிரிட்டன் ஆகிய 10 நாடுகளை சேர்ந்த வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்களது சர்வதேச மொபைல் எண்கள் மூலமாக யு.பி.ஐ சேவைகளைப் பயன்டுத்திக் கொள்ள வழிவகை செய்யப்பட்டுள்ளது.
சர்வதேச மொபைல் எண்களைப் பயன்படுத்தி என்ஆர்இ, என்ஆர்ஓ கணக்குகள் மூலமாக யு.பி.ஐ பணப்பரிவர்த்தனை வசதியைப் பெற முடியும். இந்த வசதியை வரும் ஏப்ரல் 30 -க்குள் நடைமுறைக்குக் கொண்டுவர வேண்டுமென இந்திய வங்கிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.