கனிம எண்ணெய்கள், உணவுப் பொருள்கள், கச்சா பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு, ரசாயனங்கள் மற்றும் ரசாயனப் பொருள்கள், அடிப்படை உலோகங்கள், மின்சாரம், ஜவுளி போன்றவற்றின் விலைகள் உயர்ந்ததால் கடந்த ஆண்டை விட இந்த ஆண்டு பண வீக்கம் அதிகரித்துள்ளது.
கொரோனா பொது முடக்கம் மற்றும் ரஷ்யா - உக்ரைன் போர் ஏற்படுத்திய பாதிப்பால் உலக பொருளாதாரம் மந்த நிலையை அடைந்துள்ளது.

அமெரிக்கா, சீனா, இங்கிலாந்து உள்ளிட்ட பல்வேறு நாடுகளும் பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த தங்கள் நாடுகளில் அதற்கான நடவடிக்கைகளை எடுத்து வருகிறது.
அந்தவகையில் அமெரிக்க ஃபெடரல் வங்கி வட்டி விகிதத்தை அடுத்தடுத்து உயர்த்தியது. இதனால் டாலரின் மதிப்பு அதிகரிக்கத் தொடங்கியது, இது மற்ற நாடுகளின் பண மதிப்பில் பெரும் பாதிப்பை உண்டாக்கியது. குறிப்பாக, அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு சரிந்து வந்தது. அதைச் சரி செய்ய ரிசர்வ் பேங்க் ஆஃப் இந்தியா அதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டது.
நாட்டின் சில்லறை விலை பணவீக்கத்தை, நான்கு சதவிகிதமாகப் பராமரிக்க, ரிசர்வ் வங்கிக்கு மத்தியஅரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அந்தவகையில் 2 - 6 சதவிகிதத்துக்குள் சில்லறை விலை பணவீக்கத்தைப் பராமரிக்க வேண்டும். ஆனால், சமீபகாலமாக பணவீக்கம் இந்த இலக்கைத் தாண்டி அதிகமாக இருந்து வருகிறது.

பணவீக்கத்தைக் கட்டுப்படுத்துவதற்காக, ரிசர்வ் வங்கி, கடந்த செப்டம்பர் 30-ம் தேதியன்று, குறுகிய காலக் கடனுக்கான `ரெப்போ' வட்டிவிகிதத்தை 50 அடிப்படை புள்ளிகள் அதிகரித்தது. இதையடுத்து, வட்டி தற்போது 5.90 சதவிகிதமாக அதிகரித் துள்ளது. கடந்த மே மாதத்திலிருந்து இதுவரை, ரிசர்வ் வங்கி, மொத்தம் 190 அடிப்படை புள்ளிகள் அளவுக்கு வட்டியை உயர்த்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், பணவீக்கத்தைக் கட்டுப்படுத்த ரிசர்வ் வங்கி எடுத்த முடிவுகளின் பலன், இன்னும் ஐந்திலிருந்து ஆறு காலாண்டுகளுக்குள் தெரியவரும் என ரிசர்வ் வங்கியின் பணக் கொள்கை குழு உறுப்பினர் ஜெயந்த் ஆர்.வர்மா நம்பிக்கையுடன் தெரிவித்துள்ளார்.

இது குறித்து அவர் கூறும்போது, ``ரிசர்வ் வங்கியின் நடவடிக்கைகளால் பணவீக்கம் நிச்சயமாகக் குறையும். நாங்கள் மந்தநிலைக்கு பயப்படவில்லை. ஆனால், பொருளாதார வளர்ச்சி நாம் விரும்புவதைவிடக் குறைவாகவும்; பணவீக்கம் விரும்புவதைவிட அதிகமாகவும் உள்ளது. இந்நிலை பணக்கொள்கைக்கு சவாலாகவே உள்ளது. தற்போது பணவீக்கத்துக்கு முன்னுரிமை வழங்கி வருகிறோம். அது கட்டுக்குள் வந்த பிறகு, மற்ற நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவோம்” என்றார்.