நாட்டில் உற்பத்தியாகும் பம்ப் செட்டுகளில் 60% கோவை மாவட்டத்தில்தான் உற்பத்தி செய்யப்படுகிறது. பெரு நிறுவனங்கள் மட்டுமல்லாமல், சுமார் 3,000 குறு, சிறு மற்றும் நடுத்தர பம்ப் உற்பத்தி மற்றும் உதிரிப்பாகங்கள் தயாரிப்பு நிறுவனங்கள் கோவையில் உள்ளன. சுமார் ஒரு லட்சம் பேர் இந்தத் தொழிலை நம்பியுள்ளனர்.

முன்பு தினசரி 25,000 முதல் 30,000 மோட்டார் பம்ப் செட்டுகள் உற்பத்தி செய்யப்பட்டு வந்தன. இதன் மூலம் நாளொன்றுக்கு சுமார் 50 கோடி ரூபாய் வரை வியாபாரம் நடந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை, கடந்த சில ஆண்டுகளாக பாதிக்கும் மேல் குறைந்துவிட்டது.
மின்வெட்டு, பணமதிப்பிழப்பு, ஜி.எஸ்.டி, கொரோனா வைரஸ் நெருக்கடிகள் ஒருபக்கம். மறுபக்கம் கோவைக்கு போட்டியாக குஜராத் மாநிலத்திலும் விலை குறைவான மோட்டார் பம்ப் செட்டுகள் தயாரிக்கப்படுகின்றன. பொதுவாக, கோடை காலத்தில் பம்ப் செட் தேவை அதிகம் இருக்கும்.
அதன்படி, இந்தாண்டு பம்ப் செட் விற்பனை சற்றே சூடுபிடிக்க தொடங்கியது. இதனிடையே கடந்த சில வாரங்களாக பெய்யும் கனமழை காரணமாக பம்ப் செட் விற்பனை பாதிக்கப்படுள்ளது என தொழில் துறையினர் வேதனை தெரிவிக்கின்றனர்.
இது குறித்து பம்ப் செட் உற்பத்தியாளர்கள் கூறுகையில், “நெருக்கடிகள், மந்தநிலை விலகி, இப்போதுதான் பம்ப் செட் சந்தை சற்று மீண்டது. கோடை மழை காரணமாக விவசாயப் பணிகள் பாதிக்கப்பட்டுள்ளன. இதன் காரணமாக பம்ப் செட் தேவை கணிசமாக குறைந்துவிட்டது. மேலும், ஜி.எஸ்.டி சார்ந்த பிரச்னைகள் மற்றும் வீட்டு கடனுக்கான வட்டி விகிதத்தை வங்கிகள் உயர்த்திவிட்டன.

இதனால் தனி வீடுகள் எண்ணிக்கை குறைந்து, பம்ப் செட் தொழில் பாதிக்கப்பட்டுள்ளது. பல இடங்களில் தொழிலாளர்கள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. இதே நிலை தொடர்ந்தால் நாங்கள் வேறு தொழிலை நோக்கித்தான் செல்ல வேண்டும்” என்றனர்.
இந்தத் துறையில் ஏற்பட்டுள்ள சிக்கல் கூடிய சீக்கிரமே விலகும் என்று எதிர்பார்ப்போம்!