
ஜெ.சரவணன்
கல்வி, மருத்துவம் மற்றும் திருமணம் உள்ளிட்ட செலவுகளுக்கும், தொழில் தொடங்கவும் மற்றும் விரிவாக்கம் செய்யவும் பெரும்பாலானோர் தங்களது சொத்துகளை அடமானம் வைப்பது வழக்கமான விஷயமாகவே இருந்துவருகிறது. வங்கிகளும், கடன் நிறுவனங்களும் சொத்து அடமானத்தின் பேரில் கடன் வழங்குவதையே மிகவும் விரும்புகின்றன.

இதனால் கடந்த சில ஆண்டுகளாகவே, வங்கி களின் சில்லறைக் கடன் வளர்ச்சியைக் காட்டிலும், சொத்து அடமானக் கடன் சிறப்பான வளர்ச்்சி அடைந்திருக்கிறது. இதனால் சொத்து அடமானத்தின் பேரில் வழங்கப்படும் கடனில் சில புதிய சிக்கல்கள் உருவாகி வருகின்றன.
தற்போது ரியல் எஸ்டேட் துறை மந்தமாக இருப்பதால், சொத்துகளின் மதிப்புக் குறையலாம் என்கிற எதிர்பார்ப்பில், சொத்து அடமானம் மீது தரும் கடன் சதவிகிதத்தை வங்கிகள் குறைக்கத் திட்டமிட்டுள்ளன. வங்கிகள் சொத்து மதிப்பின் மீது 60-70% வரைதான் கடனாக வழங்குகின்றன. தற்போது அதனை மேலும் குறைத்து 50% என்ற நிலையில் கொடுக்க முடிவு செய்துள்ளதாகத் தகவல்கள் வெளியாகி உள்ளன.
மத்திய அரசு எடுத்த பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ரியல் எஸ்டேட் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருக்கிறது. இதனால் கட்டுமானத் தொழிலும் பாதிப்படைந்துள்ளது. அமைப்புசாராத் துறையில் பணப் புழக்கம் 30 முதல் 50% வரை குறைந்துள்ளது. இந்த நிலையில், சொத்து அடமானக் கடன் அதிகமாகத் தந்தால், கொடுத்தக் கடனைத் திரும்ப வாங்கமுடியாத நிலை ஏற்படலாம். அப்போது, அடமானமாக வைக்கப் பட்ட சொத்துகளை விற்று, கடனைத் திருப்ப வேண்டியிருக்கும். இப்போதுள்ள சூழ்நிலையில், சொத்துகளை விற்பது அவ்வளவு எளிதான காரியம் அல்ல. அப்படியே விற்றாலும் குறைந்த விலைக்கே விற்க முடியும். ஏனெனில் வீடு மற்றும் நிலங்களின் விலை 15-20% வரை குறைய வாய்ப்புள்ளது என்கிறார்கள் ரியல் எஸ்டேட் துறையைச் சேர்ந்தவர்கள்.
எனவே, புதிதாகச் சொத்து அடமானத்தின் பேரில் கடன் வாங்க நினைப்பவர்களுக்குச் சொத்து மதிப்பில் முன்பைவிடக் குறைவாகவே கடன் கிடைக்கும் நிலை உருவாகி இருக்கிறது!