
ரவி சுப்ரமணியன், (GOD IS A GAMER - Published by Penguin Random House India Pvt Ltd)ஓவியங்கள்: ராஜன்
ஐந்து மில்லியன் டாலர்கள். இந்திய வங்கித் துறை வரலாற்றிலேயே மிகப் பெரிய ஃபிஷிங் ஸ்கேமில் என்.ஒய்.ஐ.பி (NYIB) வாடிக்கையாளர்கள் இழந்த தொகை இது. சந்தேகத்திற்கிடமான சில நைஜீரியக் குற்றவாளிகளினால் பல அப்பாவி வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டிருந்தார்கள்.

மும்பை காவல்துறை அதிகாரிகள் அவர்களுடைய வழக்கமான நடைமுறையைப் பின்பற்றி விசாரணை நடத்திவந்தார்கள். மற்றெந்த ஃபிஷிங் ஸ்கேம் போலவே, இப்போதும் அவர்கள் நைஜீரிய வாடி – புறநகர் பகுதியான மிரா ரோடில் இருக்கும் சிறிய இடம் – பகுதியில் ரெய்டு நடத்தினார்கள். இந்தியாவில் நடக்கும் ஃபிஷிங் ஸ்கேம்களின் மைய இடமாக இது இருந்துவந்தது. இந்த ஸ்கேம்கள் எல்லாம் ஒரு சிறு நைஜீரியக் குழுவின் வேலைதான். அவர்கள் மாதமொன்றுக்கு 100 டாலர் வாடகைக்குக் கிடைக்கும் ஒரு அறை கொண்ட வீடுகளில் வசித்துவருபவர்கள்.
சில நைஜீரியர்களை வளைத்துப் பிடித்தாலும் இந்த ஸ்கேமுக்கு ஆதாரமாக எதுவும் கிடைக்காத தால், பின்னர் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். காவல்துறையினர் ஏதோ ஓர் ஆர்வத்திலும், சந்தேகத்தின்பேரிலும் இந்த நடவடிக்கையை எடுத்தனர்.

பணத்தை இழந்த அனைத்து வாடிக்கையாளர் களுக்கும் அவர்கள் இழந்த பணத்தை என்.ஒய். ஐ.பி (NYIB) திரும்பக் கொடுத்தது. இப்படித் தருவதில் சுவாமிக்குக் கொஞ்சம்கூட இஷ்டமில்லை. இப்படித் தரவேண்டுமென்ற அவசியமும் இல்லை. என்றாலும்கூட, பீட்டர் பாரன் எடுத்த முடிவின்பேரில் இந்த முடிவு மேற்கொள்ளப்பட்டது.
‘`உங்களுடைய லாபம் எனக்கு ஒரு `ரவுண்டிங் ஆஃப்’ தொகைதான். இந்த ஸ்கேம் ஏற்படுத்திய சேவைப் பிரச்னைகள் குறித்து எழுப்பப்பட்டால், வருடாந்திரப் பொதுக்கூட்டத்தின் சூழ்நிலையே கறைபடிந்ததாகிவிடும். அதை நான் விரும்ப வில்லை. எந்தவொரு வழியிலும் என்.ஒய்.ஐ.பி-யின் (NYIB) இமேஜ் மோசமாவதற்கு அனுமதிக்க முடியாது’’ என்றார் பீட்டர் பாரன் சொன்னதை எதிர்க்காமல் மாள்விகா அப்படியே ஏற்றுக்கொண்டார். சுவாமி அதுபற்றி விவாதிக்க முயற்சி செய்தார். ஆனால், அவர் அடிபணிய வைக்கப்பட்டார்.
‘‘லாபம் பாதிக்கும் அளவுக்கு நாம் ஏன் வாடிக்கையாளர்களுக்குப் பணத்தைத் திருப்பித் தரவேண்டும், ஆதித்யா? வாடிக்கையாளர்களுடன் நாம் ஏன் இந்த வலியைப் பகிர்ந்துகொள்ள வேண்டும்.’’
பீட்டர் தனது முடிவை என்.ஒய்.ஐ.பி-க்குத் (NYIB) தெரிவித்த அன்று மாலை, ஆதித்யாவைச் சந்தித்து இப்படிக் கேட்டார் சுவாமி.
‘‘பகிர்ந்துகொள்ளத் தேவையில்லைதான்’’ - ஆதித்யா ஒப்புக்கொண்டார். ‘‘ஆனால், சுவாமி, நம்முடைய வங்கிகளில்...’’
சுவாமி நிமிர்ந்து பார்த்தார்.
‘`….. ஓ.கே, ஓ.கே, உங்களுடைய வங்கிகளில்...’’
சுவாமி சிரித்தார்.

‘`... பிராந்திய அலுவலகங்களுடன் முரண்பாடு வைத்துக்கொள்ளாமல் இருப்பது எப்போதுமே நல்லது. அப்படி வைத்துக்கொண்டால், நீங்கள் உணர்வதற்குமுன்பே உங்கள் தொழிலை முடிவுக்குக் கொண்டு வந்துவிடுவார்கள். அவர்கள் ஐந்து மில்லியன் டாலரை வாடிக்கையாளர் களுக்குத் திருப்பித் தரநினைத்தால், தந்துவிட்டுப் போகட்டும். அதை நீங்கள் ஏற்றுக்கொள்ளுங்கள். அந்தத் தொகையை வேறு ஏதாவது பிசினஸிலிருந்து சம்பாதித்துத் தருமாறு அவர்கள் சொல்ல மாட்டார்கள். எனவே, அவர்கள் சொல்கிறமாதிரி நடந்துகொள்ளுங்கள்’’ என்றார்.
‘`ஆதித்யா, பிராந்திய அலுவலகம் சொல்வதை நீங்கள் அமைதியாக ஏற்றுக்கொள்வீர்களா?”
‘`இல்லை, நான் ஏற்றுக்கொள்ளமாட்டேன்’’ ஆதித்யா மிகவும் தெளிவாகச் சொன்னார்.
‘`அப்படியென்றால் என்னை மட்டும் ஏன் ஏற்றுக்கொள்ளச் சொல்கிறீர்கள்?”
‘`ஏனென்றால், அந்தக் காலம் முடிந்துவிட்டது. பதினைந்து வருடங்களுக்குமுன்பு நான் ரீடெயில் பாங்கின் தலைமைப் பொறுப்பிலிருந்தபோது நான் கொலை செய்திருந்தால்கூட எனக்கு எந்தப் பாதிப்பும் ஏற்பட்டிருக்காது. ஆனால், இப்போது நிறைய மாறிவிட்டது. அந்த நாள்களில், ‘`இந்தியா - முதலீட்டுக்கான ஓர் இலக்கு’’ என நான் பல கதைகளைச் சொல்லி யிருப்பேன். 100 கோடி மக்கள் உள்ள நாட்டில் என்றைக்காவது லாபம் வரும் என்கிற நம்பிக்கையில் ஆண்டுக்கு ஆண்டு முதலீடு செய்ய பன்னாட்டு வங்கிகள் எச்சில் ஊறக் காத்திருந்தன.
ஆனால், இன்றைக்கு இருக்கக் கூடியவர்களிடம் அந்த `பசி’ இல்லை. இப்போது எதிர்ப்புக் கெல்லாம் இடமில்லை. பன்னாட்டு நிறுவனங்கள் அதனுடைய இந்தியக் கிளைகள் வேலை செய்வதைத்தான் எதிர்பார்க்கிறதே தவிர, சிந்திப்பதை அல்ல’’ என்றார்.
சுவாமி வெறுப்புடன் தலையை ஆட்டினார். அவருக்கு ஆதித்யா சொல்வதில் உடன்பாடில்லை.
‘`சுவாமி, இதை நீங்கள் ஒரு நாள் உணர்வீர்கள். விளையாட்டுக்கான விதிகள் எல்லாம் மாறிவிட்டன. நிறுவனங்கள் தங்கள் தொழில் வாழ்க்கையில் நீடித்திருப்பதைவிட, தங்களை மேம்படுத்திக்கொள்கிற மாதிரி தெரியவில்லை. இருக்கக் கூடிய ஒருசில வேலைகளைப் பலரும் துரத்திக் கொண்டிருக் கின்றனர். உங்கள் வேலையைப் பாதுகாத்துக்கொள்வதுதான் உங்களுடைய முன்னுரிமையாக இருக்கவேண்டும். நீங்கள் உயிரோடிருந்தால், இன்னொரு நாள் போராடிக்கொள்ளலாம்.’’

சுவாமி வேறு எங்கோ பார்த்துக் கொண்டிருந்தார்.
‘`பிராந்திய அலுவலகம் சொல்வதில் தப்பேதும் இல்லை. பீட்டர் சொல்வதுபோல, இந்தியா தரக்கூடிய லாபத்தோடு ஒப்பிடும் போது போர்டு லெவலில் இதற்காகப் போராடுவது அவரைப் பொறுத்தளவில் முக்கியமான தில்லை என அவர் நினைத்திருப்பார். ஆண்டுப் பொதுக்கூட்டத்தில் ஒரு முட்டாள் எழுந்து, இந்தியாவை உதாரணமாகக் காட்டி என்.ஒய்.ஐ.பி–யின் பாதுகாப்பு குறித்தும், டேட்டா நேர்மை குறித்தும் கேள்வி கேட்டால் எப்படியிருக்கும் என்று கற்பனை செய்துபாருங்கள்.
இது உலகின் மற்ற பகுதிகளில் அவர்கள் பெற்றுவருகிற வெற்றியின் பிரகாசத்தை மங்கச் செய்துவிடும். வாடிக்கையாளர் களின் புகார்கள், மேலதிகாரிகளின் விரிவாக்கங்கள் எனப் பல வலிகளை இதனால் அவர்கள் எதிர்கொள்ள வேண்டியிருக்கும்.
எனவே, அவர்கள் ஐந்து மில்லியன் டாலர் கொடுப்பதன் மூலம் இவையெல்லாம் நடக்காதபடி பார்த்துக்கொள்வார்கள். அவர்கள் கண்ணோட்டத்திலிருந்து நீங்கள் பார்த்தால், விவாதம் செய்யமாட்டீர்கள்” என்றார்.
இதற்கு, சுவாமி எந்தப் பதிலும் சொல்லவில்லை. ஆனால், அவர் பிசினஸ் சம்பந்தப்பட்ட விஷயத்தில் அவருடைய கருத்துக்கள் மதிக்கப் பட்டவில்லை என்பதை எண்ணிக் கொதித்துக்கொண்டிருந்தார்.
‘`எப்படியிருந்தாலும், காவல் துறையினர் இந்த வழக்கில் வெற்றி பெற்றால், கொஞ்சம் பணத்தையாவது குற்றவாளிகளிடமிருந்து மீட்க முடியும். அந்தப் பணம் வங்கிக்குத்தான் வரும். ஐந்து மில்லியனில் ஒருபகுதி இப்படியாகக் கிடைத்துவிடும். எனவே, உற்சாகமாக இருங்கள். உங்களுடைய போனஸ் இந்த வருடமும் கிடைக்கும் என நம்புகிறேன்” என்று கூறினார்.
ஆதித்யா கடைசியாகச் சொன்னதைக் கேட்டு, சுவாமிக்குச் சிரிப்பு வந்தது.
‘`மக்களை எப்படி நல்லா வச்சுக்கிறதுனு உங்களுக்குத் தெரியும் ஆதித்யா. ஒருவர் அதை ஒப்படைக்க...’’
உரையாடலை ஆதித்யாவின் போன் பாதியில் நிறுத்தியது. அவர் போனை பார்த்துவிட்டு சுவாமியிடம், ‘‘இது சந்தீப்’’ என்று முணுமுணுத்தார். ‘`முதலில் இவரிடம் பேசிவிடுகிறேன்’’ என்று பேச ஆரம்பித்தார்.
‘`ஹாய், சந்தீப்’’ அவர் சுவாமி நிற்குமிடத்தில் சிறிது தூரம் போனில் பேசிக்கொண்டே நடந்துசென்றார்.
அவர் திரும்பிவந்தபோது, சுவாமி அவரை ஆர்வத்துடன் பார்த்தார். ‘`என்ன ஆச்சு, பிரச்னை இல்லையே!’’ என்று கேட்டார்.
‘`வழக்கம்போல, சேல்ஸ் பிட்ச் சரியாக நடக்கவில்லை. ஆர்.எ.கே வங்கி அதனுடைய கிரெடிட் கார்டு ப்ராசஸை இந்தியாவுக்கு அவுட்சோர்ஸ் செய்ய ஏகப்பட்ட பட்ஜெட் வைத்திருக்கிறது. நாங்கள் அதைப் பெற முயற்சி செய்தோம்.
இன்ஃபோசிஸும், டெக் மஹிந்திராவும் அதற்குப் போட்டி போடுகின்றன. நாங்கள் குறிப்பிட்டிருக்கிற விலைக்கு போட்டியாளர்கள் பக்கத்தில்கூட நெருங்க முடியாது. அதனால் எங்களுக்குத்தான் அது கிடைக்குமென்று நினைத்தேன். ஆனால், சந்தீப்புக்கு நம்பிக்கையில்லை, பார்க்கலாம்.’’
‘‘என்.ஒய்.ஐ.பி-யில் நாமெல்லாம் ஒன்றாக வேலை பார்த்தபோது உற்சாகமாக இருந்தது, ஆதித்யா. அந்த மேஜிக்கைத் திரும்ப நம்மால் உருவாக்க முடியுமென்று நீங்கள் நினைக்கிறீர்களா?’’
‘`கண்டிப்பாக, நம்மால் முடியும். டைமிங் சரியா இருக்க வேண்டும், அவ்வளவுதான்’’ என்று சொல்லிவிட்டு, ஆதித்யா சிரித்தார்.
(பித்தலாட்டம் தொடரும்)
தமிழில்: சித்தார்த்தன் சுந்தரம்

ஒரு லட்சம் கோடியைத் தாண்டியது ஜி.எஸ்.டி வரி!
கடந்த ஏப்ரலில் ஜி.எஸ்.டி வரியானது ரூ.1 லட்சம் கோடியைத் தாண்டி யிருக்கிறது. கடந்த ஏப்ரல் மாதத்தில் ரூ.1.3 லட்சம் கோடியை எட்டியிருக்கிறது. கடந்த ஆண்டு ஜூலை மாதத்தில் அறிமுகமான ஜி.எஸ்.டி வரி ரூ.93,590 கோடியை ஈட்டித் தந்தது. அடுத்தடுத்த மாதங்களில் இந்த ஜி.எஸ்.டி வரியானது குறைய ஆரம்பித்து, கடந்த நவம்பரில் மிகக் குறைந்த அளவான ரூ.83,716 கோடியை எட்டியது. பிறகு மீண்டும் உயரத் தொடங்கிய ஜி.எஸ்.டி வரி, கடந்த ஏப்ரலில் ரூ.1.3 லட்சம் கோடியை எட்டியுள்ளது. புதிய உச்சமான ரூ.1 லட்சம் கோடியை இனி குறையாமல் பார்த்துக் கொள்ள வேண்டியது மத்திய அரசாங்கத்தின் கடமை!