
''நான் ஒரு வருடத்திற்கு முன்பு பழைய வீடு ஒன்றை வாங்கினேன். அந்த வீட்டில் நான்கு குடித்தனங்கள் வாடகைக்கு இருக்கின்றன. அதில் ஒரு வீட்டுக்காரர் மட்டும் கடந்த ஆறு மாதங்களாக வாடகை தரவில்லை. தகுந்த பதிலும் அவரிடமிருந்து இல்லை. அவரிடமிருந்து வாடகை பெறுவது எப்படி அல்லது அவரை வீட்டை விட்டு காலி செய்ய வைக்க என்ன செய்வது?
எஸ்.ஆத்மநாதன், சேத்பட், திருவண்ணாமலை மாவட்டம்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அழகுராமன், வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
''சொத்தை கிரயம் பெற்ற நாளிலிருந்து நீங்கள்தான் உரிமையாளர் எனவும், வாடகை என்னிடம்தான் கொடுக்க வேண்டும் என ஒரு முறையான அறிவிப்பு கொடுத்தபிறகும், அதனை அந்த வாடகைதாரர் பெற்றிருக்கும் சூழ்நிலையில் அந்த நபர் உங்களுக்கு வாடகையை தர மறுப்பதன் மூலம் 'வேண்டுமென்றே தவறான எண்ணத்தில் வாடகை தர மறுப்பவர்’ என்கிற குற்றச்சாட்டுக்கு உள்ளாகிறார். தமிழ்நாடு கட்டடங்கள் குத்தகை மற்றும் வாடகை கட்டுப்பாட்டு சட்டப்படி இரண்டு மாதங்கள் தொடர்ச்சியாக வேண்டுமென்றே வாடகை தரத் தவறினால் காலி செய்ய உத்தரவு கோரி வாடகை கட்டுப்பாட்டு அலுவலரிடம் (சிவில் நீதிமன்றம்) விண்ணப்பிக்கலாம். இதன் அடிப்படையில் காலி செய்ய உத்தரவு பிறப்பிக்கப்படும். இப்படி விண்ணப்பிக்கும்போது தங்களுக்கு வரவேண்டிய வாடகை நிலுவையையும் வசூலித்து தரக் கோரி ஒரு மனுவும் செய்தால் வாடகை நிலுவையையும் நீதிமன்றம் வசூலித்துக் கொடுத்துவிடும்.''

ஹிண்டால்கோ பங்குகளுக்கு சப்போர்ட் லெவல் மற்றும் ரெசிஸ்டன்ஸ் லெவல் தரவும்!
கதிரேசன், திருச்சி.
எஸ்.லெட்சுமணராமன், பங்குச் சந்தை ஆலோசகர்.
''எதிர்காலத்தில் நல்ல வளர்ச்சியை எதிர்நோக்கியுள்ள, அடிப்படை கட்டமைப்பு சிறப்பாக இருக்கும் நிறுவனம் என்கிற எதிர்பார்ப்பின் அடிப்படையில் நீண்ட கால நோக்கில் இந்த பங்கில் முதலீடு செய்யலாம். தினசரி வர்த்தகம் செய்பவர்கள் சர்வதேச அளவிலான நிலவரங்களைப் பார்த்து முடிவெடுக்கவும். சப்போர்ட் லெவல் ரூபாய் 112-114, ரெசிஸ்டன்ஸ் லெவல் ரூபாய் 122.

கமாடிட்டியில் தினசரி நிலவரங்களை தெரிந்துகொள்ள என்ன செய்வது? இணையதள டிப்ஸ்களை நம்பலாமா?
கே.குமரகுரு, பண்ருட்டி.
ரமணன், கமாடிட்டி நிபுணர்.
''கமாடிட்டியில் தினசரி நிலவரங்களை உடனுக்குடன் தெரிந்துகொள்ள இணையதளங்கள் நிச்சயம் உதவும். இதற்கென பல இணையதளங்கள் இருக்கின்றன. ஆனால், இணையதளங்கள் அளிக்கும் டிப்ஸ்களை அப்படியே ஏற்றுக்கொண்டு அதன் அடிப்படையில் நேரடியாக வர்த்தகத்தில் இறங்காமல் பேப்பர் டிரேடிங் எனப்படும் பயிற்சியை சில மாதங்கள் செய்யவும். அந்த அனுபவத்தின் அடிப்படையில் சரியான முடிவுகளை எடுப்பதே நல்லது. எந்த இணையதள டிப்ஸ்-ஆக இருந்தாலும் அதை பயன்படுத்தி டிரேடிங் செய்யும் முடிவு உங்களுடையதாகவே இருக்கட்டும்.''

டீமேட் கணக்குத் தொடங்க விண்ணப்பித்தால் கேன்சலேஷன் காசோலை கேட்கிறார்கள். இப்படி தரலாமா?
- ராதாகிருஷ்ணன், சென்னை.
ஆர்.கணேசன், முதன்மை மேலாளர், பஞ்சாப் நேஷனல் வங்கி.
''தரலாம், தவறு கிடையாது. பொதுவாக வாடிக்கையாளர்களின் விவரங்களை குழப்பம் இல்லாமல் பதிவு செய்யும் காரணத்திற்காக இப்படி கேட்கப்படும். சம்பந்தப்பட்ட வங்கியின் குறியீட்டு எண், வங்கிக் கிளையின் குறியீட்டு எண், ஐ.எஃப்.எஸ்.சி. குறியீட்டு எண் போன்ற விவரங்கள் காசோலையில் இடம் பெற்றிருக்கும் என்பதால் ரத்து செய்யப்பட்ட ஒரு காசோலை கேட்கப்படுகிறது. நீங்கள் கொடுக்கும் காசோலை ரத்து செய்யப்பட்டது என்பதால், தவறாகப் பயன்படுத்த வாய்ப்புகள் இல்லை. எனவே, பயமின்றி தரலாம்!''
நான் ஒரு பொதுத்துறை நிறுவனத்தில் ஆயுள் காப்பீடு எடுத்துள்ளேன். அதற்கு நாமினியாக எனது மனைவியை நியமித்துள்ளேன். இருவரும் ஒரே சமயத்தில் இறக்க நேரிட்டால் காப்பீடு தொகை வாரிசுகளுக்கு எப்படி சேரும்?
- எம்.பிரகதீஸ், பழனி.
வைதேகி, வழக்கறிஞர், சென்னை உயர்நீதிமன்றம்.
''காப்பீடு எடுத்தவருக்கு ஏதாவது அசம்பாவிதம் ஏற்பட்டால் இழப்பீடு தொகை நேரடியாக வாரிசுகளுக்குச் சேர்ந்துவிடும். நாமினி என்பவர் வாரிசுகளுக்குப் பணத்தைப் பெற்றுத் தரும் பொறுப்பு மட்டுமே கொண்டவர். நாமினியும் சேர்ந்து இறக்க நேரிட்டால் இழப்பீடு தொகை வாரிசுகளுக்குச் சேர்வதில் எந்த சிக்கலும் இல்லை. ஒருவேளை நேரடி வாரிசுகள் இல்லாதபட்சத்தில் பாலிசிதாரரின் ரத்த உறவு சார்ந்த பிற வாரிசுகளுக்கு இழப்பீடு தொகை சேர்க்கப்படும். வாரிசு யார் என்பதில் குழப்பம் இருக்கும்பட்சத்தில் நீதிமன்ற உத்தரவுபடி உரிய வாரிசுகளிடம் இழப்பீடு தொகை ஒப்படைக்கப்படும்.''

இ.டி.எஃப். திட்டங்களுக்கும் நிஃப்டி பீஸ் திட்டங்களுக்கும் உள்ள வேறுபடு என்ன?
- எஸ்.ஸ்ரீதர், திருப்பூர்.
சுவாமிநாதன், இயக்குநர், ஓம் ஸ்பெக்ட்ரம் ஃபைனான்ஷியல் பிளானர்.
''பங்குச் சந்தையில் வர்த்தகமாகும் மியூச்சுவல் ஃபண்டுகளை எக்ஸ்சேஞ்ச் டிரேடட் ஃபண்டுகள் (இ.டி.எஃப்.) என்பார்கள். அதில் ஒரு ஃபண்ட்தான் நிஃப்டி பீஸ் (Nifty BeEs) என்பது. இந்த ஃபண்டில் தேசிய பங்குச் சந்தை குறியீடான நிஃப்டி-யின் விகிதாசாரத்துக்கு ஏற்ப பங்குகளில் முதலீடு செய்யப்படும்.''