
பி.பி.எஃப் முதலீடு
க.முரளிதரன் , முதலீட்டு ஆலோசகர், www.vidurawealth.com
பொது சேமநல நிதி (PPF) என்பது 15 வருட கால முதலீடு எனப் பலரும் நினைக்கிறார்கள். இது உண்மை அல்ல. அதைவிட சற்று அதிக கால முதலீடு அது. ஏனெனில், பி.பி.எஃப் கணக்கில் 15 ஆண்டுகள் முதலீடு செய்வது முடிந்த வுடன் அடுத்த ஆண்டு ஏப்ரல் 1-ம் தேதியில்தான் முதிர்வு அடையும். ஓர் உதாரணத்தை எடுத்துக்கொள்வோம்.

நீங்கள் டிசம்பர் 1, 2022-ம் ஆண்டு பி.பி.எஃப் கணக்கு தொடங்கியுள்ளீர்கள் என்று வைத்துக்கொள்வோம். அதன் பிறகு, நவம்பர் 30, 2037-ல் 15 ஆண்டுகள் நிறைவடையும். இருப்பினும், முதிர்வு தேதி அடுத்த ஏப்ரல் 1-ம் தேதி யாகும். எனவே, இது ஏப்ரல் 1, 2038 அன்று முதிர்ச்சி அடையும்.
15 ஆண்டுகள் முடிந்த வுடன், உங்கள் முன் மூன்று தேர்வுகள் இருக்கும்.
1. கணக்கை முடித்து விடுவது.
2. மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது (புதிய பங்களிப்பு இல்லாமல்).
3. மேலும் 5 ஆண்டுகளுக்கு நீட்டிப்பது (புதிய பங்களிப்புடன்).
இந்த மூன்றுவிதமான தேர்வுகளில் ஒவ்வொன்றைப் பற்றியும் சற்று விரிவாகப் பார்ப்போம்.
1. கணக்கை முடிப்பது...
15 ஆண்டுகள் நிறை வடைந்த நாளிலிருந்து ஒரு வருடத்துக்குள் இதை நீங்கள் தேர்வு செய்ய வேண்டும். நீங்கள் முழுமையான அசல் மற்றும் வட்டியைப் பெறுவீர் கள் (கணக்கு மூடப்பட்ட மாதத்துக்கு முந்தைய மாதத் தின் கடைசி நாள் வரை வட்டி கிடைக்கும்).
முதிர்வுத் தொகையைத் தவணை முறையிலும் திரும்பப் பெறலாம். ஆனால், ஓராண்டு தாண்டிவிட்டால் இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்ய முடியாது.

2. பங்களிப்பு இல்லாமல் கணக்கை நீட்டிக்கலாம்...
நீங்கள் பி.பி.எஃப் கணக்கை முடிக்கவில்லை அல்லது இன்னும் 5 ஆண்டுகளுக்கு கணக்கை நீட்டிக்கத் தேர்வு செய்யவில்லை எனில், இந்த ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்யலாம்.
இந்தக் காலகட்டத்தில் தொகையை திரும்பப் பெற வரம்பு இல்லை. எந்த நேரத்திலும் எந்தத் தடையுமின்றி பகுதியாகவோ, முழுமையாகவோ உங்கள் பி.பி.எஃப் கணக்கில் உள்ள தொகையைப் பெற முடியும். மீதமுள்ள தொகைக்குத் தொடர்ந்து வட்டி கிடைக்கும். இருப்பினும், இந்த ஆப்ஷனை வருடத்துக்கு ஒருமுறை மட்டுமே பயன் படுத்த முடியும்.

3. மேலும் 5 ஆண்டுகளுக்கு பங்களிப்புடன் நீட்டிக்கலாம்...
இந்த ஆப்ஷனைத் தேர்வு செய்ய முதிர்வு தேதியில் இருந்து ஒரு வருடம் முடிவதற்குள் நீங்கள் நீட்டிப்புக்கு விண்ணப்பிக்க வேண்டும். இப்படி நீட்டிக்காமல் வழக்கம்போல் தொடர்ந்து பங்களித்தால், அத்தகைய பங்களிப்புத் தொகையானது வருமான வரிப் பிரிவு 80C வரிச் சலுகைக்குத் தகுதியற்றது மேலும், அந்த முதலீட்டுக்கு எந்த வட்டியும் கிடைக்காது. அதை முறைப்படுத்த கடிதம் மூலம் தெரிவிக்க வேண்டும்.
இந்த மூன்றாவது ஆப்ஷனை நீங்கள் தேர்வு செய்தவுடன், மேலே குறிப்பிட்டுள்ள இரண்டாவது ஆப்ஷனுக்கு மீண்டும் செல்ல முடியாது.
இந்த ஆப்ஷன், ஒவ்வொரு நீட்டிக்கப்பட்ட காலத்தின் தொடக்கத்திலும் 60% நிலுவைத் தொகையை நீங்கள் திரும்பப் பெற அனுமதிக்கப் படுவீர்கள்.
உதாரணமாக, ஒரு கணக்கு ஏப்ரல் 1, 2016 அன்று முதிர்ச்சி அடைந்தது மற்றும் இருப்பு ரூ.1 கோடி என்று வைத்துக்கொள்வோம். பிறகு, இந்த ரூ.1 கோடியில் 60 சதவிகிதத்தை 5 வருட தடைக் காலத்தில் அதாவது, ரூ.60 லட்சத்தை எடுக்க அனுமதிக்கப்படுவீர்கள்.
இந்த நீட்டிக்கப்பட்ட 5 ஆண்டுகளில் நீங்கள் இதை ஒரே தடவையாகவோ, ஒவ்வொரு வருடமும் தவணையாகவும் எடுக்கலாம்.
மேலே உள்ள எடுத்துக்காட்டில் உள்ள மொத்த வரம்பு ரூ.60 லட்சம். ஒவ்வொரு நிதியாண்டிலும் ஒரு முறை மட்டுமே பணம் எடுக்க அனுமதிக்கப்படுகிறது. இந்த விதிமுறைகள் பலருக்குத் தெரியாது, எனவே, இந்த விதிமுறைகளை சரியாகப் புரிந்து கொண்டு நடப்பது மிகவும் நல்லது!