
சந்தை
காரைக்குடி என்கிற வார்த்தையைக் கேட்டவுடனே, நம் அனைவருக்கும் பிடித்த செட்டி நாடு உணவுகள் ஞாபகத்துக்கு வரும். அத்துடன், கண்டாங்கி சேலை, செட்டி நாடு கூடை, காரைக்குடி கொட்டான், மங்கு, மரவைச் சாமான்கள், கலைநயமிக்க மரச் சாமான்கள்... என அந்த லிஸ்ட் நீண்டு கொண்டே போகிறது.
இவை அனைத்தையும் ஒரே இடத்தில் பார்க்க முடியுமா? ‘சென்னையில் காரைக்குடி’ என்கிற நிகழ்ச்சியின் மூலம் காரைக்குடியின் பெயர் சொல்லும் அத்தனை பொருள்களையும் காட்சிப்படுத்த இருக்கிறார்கள். இந்த நிகழ்ச்சி வருகிற டிசம்பர் 18-ம் தேதி எழும்பூர் ராணி மெய்யம்மை அரங்கில் ‘காரைக்குடி சந்தை’ என்ற பெயரில் நடைபெற உள்ளது.
இதுகுறித்து காரைக்குடி சந்தை நிகழ்ச்சியின் ஒருங்கிணைப்பாளர்கள் விஜி பழனியப்பன் மற்றும் விசாலாட்சி கணேஷுடன் பேசினோம்.

“காரைக்குடி நகரத்தார் சங்கம் சார்பாக முதன்முறையாக கடந்த 2019-ம் ஆண்டு காரைக்குடி சந்தை என்னும் நிகழ்ச்சி நடத்தப் பட்டது. இதில் 50 பெண் தொழில்முனை வோர்கள் பங்கேற்று ஸ்டால்கள் அமைத்தனர். சுமார் 6,000 பேர் பார்வையாளர்களாக கலந்து கொண்டனர்.
வரும் 18-ம் தேதி நடக்கவிருக்கும் சந்தையில் ஸ்டால் அமைக்க 80 பெண் தொழில்முனைவோர்கள் முன்பதிவு செய்துள்ளனர். இந்தச் சந்தையில் செட்டி நாட்டுக் கொட்டான், கூடைகள், பித்தளை, மங்கு, மரவைச் சாமான் கள், கலைநயமிக்க மரச் சாமான்கள், செட்டி நாட்டுக் காட்டன் புடவைகள், பெரியவர்கள், சிறுவர்கள் மற்றும் குழந்தைகளுக்காக வடிவமைக்கப்பட்ட ரெடிமேட் ஆடைகள், பை வகைகள், வெள்ளிச் சாமான்கள், தங்கம் மற்றும் வைர ஆபரணங்கள், செட்டிநாட்டுக்கே உரித்தாகிய மாவு வகைகள், பலகாரங்கள் ஆகியவை விற்பனை செய்யப்பட உள்ளன. தவிர, பார்வையாளர்கள் செட்டிநாடு உணவுகளை சுவைக்க தனி ஸ்டால்களும் அமைக்கப்பட உள்ளன’’ என்றார்கள்.
இந்த நிகழ்ச்சியில் கலந்துகொள்ளத் தயாரா?