
எஸ்.முத்துகிருஷ்ணன்

இப்போது வீடுகட்டப் புறப்பட்டிருப்பவர்கள் மணல் விலை குறித்துத்தான் அதிகம் கவலைப்படுகிறார்கள். பொன்னைப் போல, விலை தந்து வாங்கமுடியாத நிலையை எட்டியுள்ளது, வீடு கட்டத் தேவைப்படும் ஆற்று மணல்.
அரசு எடுத்துக்கொண்ட மணல் விற்பனை!
2003-ம் ஆண்டு வரை தமிழக வருவாய்த் துறை மூலம் மணல் குவாரிகள் தனியாருக்கு ஏலம் விடப்பட்டு, அவர்கள் மூலம் மணல் விற்பனை நடந்து வந்தது. இந்த முறையில் மணல் மூலம் ஈட்டப்படும் வருமானம் பெருமளவில் அரசின் கஜானாவை விட்டுச்சென்று, தனியார் வசம் போனது.
எனவே, மணல் குவாரிகளை அரசே ஏற்று நடத்தும் என ஜெயலலிதா தலைமையிலான அப்போதைய தமிழக அரசு அறிவித்தது.
அதன்படி, வருவாய்த் துறையானது குவாரிகளை பொதுப்பணித் துறைக்கு ஒதுக்கியது. டெண்டர் மூலமாக லோடிங் கான்ட்ராக்டர்கள் தேர்வு செய்யப்பட்டு, அவர்கள் மூலமாகக் குவாரிகளுக்கு வரும் லாரிகளுக்கு மணல் ஏற்றிவிடப்பட்டது. மணலுக்கு உரிய விலையை லாரிகளிடம் இருந்து அரசின் பொதுப்பணித் துறை பெற்றுக் கொள்ளவும் ஏற்பாடு செய்யப்பட்டது. இப்படித்தான் மணல் விற்பனையை அரசே ஏற்று நடத்தும் என அப்போது (1.10.2003) பிறப்பிக்கப்பட்ட அரசாணை கூறுகிறது.
ரூ.626-லிருந்து ரூ.12,000
அதன்படி, ஆற்றுப்படுகைகளில் அமைத்த குவாரிகளில் இரண்டு யூனிட் மணல் 626 ரூபாய்க்கு விற்கப்பட்டது. அதன்பின், 2013-ம் ஆண்டு இரண்டு யூனிட் மணல் 1,050 ரூபாய் என்று மணல் விலை மாற்றி அமைக்கப்பட்டது. இந்த விலைக்கு மணல் குவாரிகளில் மணல் கிடைக்காது.
இங்கிருந்து மணல் எடுத்து யார்டுகளில் வைத்து விற்பனை செய்யும் ஒப்பந்தக்காரர்களிடம்தான் லாரிகளில் மணல் ஏற்ற முடியும். இரண்டு யூனிட் மணல் அவர்களிடம் 5,400 ரூபாய் கொடுத்து வாங்குகிறார்கள். இந்த மணல் பாலாற்றுப் படுகையில் இருந்து சென்னைக்கு வரும்போது அதன் விலை 12,000 ரூபாயைத் தொட்டுவிடுகிறது. சில நேரங்களில் ரூ.13,000 வரையிலும் விற்பனை ஆகிறது.
அ.தி.மு.க-வும் தி.மு.க-வும்
இதுகுறித்து சிவில் இன்ஜினீயர்ஸ் ஃபோரம் பொதுச் செயலாளரான பொறியாளர் எஸ்.எஸ்.பாலாஜியிடம் பேசினோம். ‘‘மணல் குவாரி முறையில் வைரஸாக லோடிங் கான்ட்ராக்ட் முறையை அ.தி.மு.க அரசு புகுத்தியது என்றால், அதில் கேன்சராக ஸ்டாக் யார்டு முறையை தி.மு.க அரசு புகுத்தியது.
மணல் விலையைத் தங்கத்துக்கு இணையாக உயர்த்தி, வீடுகட்டும் ஏழை எளிய மக்கள் வயிற்றில் அடித்ததில் இருவருக்கும் பெரும்பங்கு உண்டு. ஸ்டாக் யார்டு முறையால் ஆற்றுப் படுகையில் இருந்து மணலை எடுக்க ஒப்பந்தம் எடுத்தவர்கள் மட்டுமே பொதுப்பணித் துறையிடம் மணலைப் பெற்று, அதை இரண்டாம் விற்பனையாக லாரிகளுக்கு விற்கிறார்கள்.

லோடிங் முறை இருந்திருந்தால்...
ஸ்டாக் யார்டு முறை இல்லாமல் இருந்திருந்தால் 1,050 ரூபாய்க்கு டி.டி கொடுத்துவிட்டு, லாரி உரிமை யாளர்கள் இரண்டு யூனிட் மணலைப் பெற்று டீசல் செலவு, டிரைவர், கிளீனர் கூலி, லாரி தேய்மானம் என 5,000 ரூபாய் செலவோடு சேர்த்து ரூ.6,000 முதல் 7,000 ரூபாய்க்குள் இரண்டு யூனிட் மணலை சென்னைக்குள் கொடுத்துவிடலாம். ஆனால், இப்போதுள்ள முறையால் 12,000 ரூபாய்க்கு மேல் ஆகிறது. கூடுதலாகப் பெறப்படும் இந்தப் பணம் அரசு கஜானாவுக்கு முறையாக, முழுமையாகச் செல்கிறதா என்றால், அதுவும் இல்லை. இந்தப் பிரச்னைகளால் ஆண்டுக்கு 3,000 கோடி ரூபாய் அளவுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது.
மாற்று என்ன?
மணல் விலையில் நிர்ணயம் செய்வதில் இவ்வளவு உள்குத்துகள் இருப்பதை எடுத்துச் சொல்லிப் பல போராட்டங்கள் நடத்தியும், செவிடன் காதில் ஊதிய சங்காகத்தான் அதற்கான பலன் இருக்கிறது. எனவே, கட்டுமானப் பணிகளை மேற்கொள்வோர் அரசாங்கத்தை நம்புவதைவிட மணலுக்கான மாற்று என்ன என்பதைப் பார்க்க வேண்டும்.
முக்கியப் பணிகள் மற்றும் தொழில்நுட்ப ரீதியாகக் கட்டாயமாக மணல் பயன்படுத்த வேண்டிய இடங்களைத் (பூச்சு வேலை) தவிர்த்து, இலகு தாங்குசக்தி கட்டுமானங்கள், பாதுகாப்பு தேவையற்ற கட்டுமானங்கள் (நடைபாதைகள்) மழைநீர் வடிகால் கள் போன்றவற்றுக்கு மணலுக்குப் பதிலாக மாற்றுப் பொருளைப் பயன் படுத்தலாம்.

தற்போது மணலுக்குப் பதில், கல் அரவைத் துகள்களை அரசுப் பணிகளில் பயன்படுத்தலாம் என தமிழக அரசு பொதுப்பணித் துறை ஆணை பிறப்பித்துள்ளது. அதோடு, எம்.சான்ட் எனப்படும் தயாரிப்பு மணல் ஈரோடு, கோவை மாவட்டங் களில் பயன்படுத்தப்படுகிறது. இது கற்களைச் சிறிய துகள்களாக ஒரே சீரான அளவில் உடைப்பதாகும். இத் தகைய மணல் உற்பத்திக்குத் தமிழக அரசு சலுகைகளை வழங்க உறுதி அளித்துள்ளது.
கர்நாடக அரசின் பொதுப்பணித் துறை இன்னும் ஒருபடி மேலே போய், அரசின் பணிகளுக்கு எம்.சான்ட் பயன்படுத்த வேண்டும் என்பதைக் கட்டாயப்படுத்தியுள்ளது. இதுதவிர, பித்தளைக் கழிவுகள், இரும்புத்துகள் கழிவுகள், அனல்மின் நிலைய சாம்பல், பழைய கட்டடங்களை இடிப்பதன் மூலம் உருவாகும் கழிவு ஆகியவற்றை யும் பயன்படுத்த வாய்ப்புகளை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும்’’ என்று சொல்கிறார் பாலாஜி.
பணம் மிச்சமாகும்
தமிழ்நாடு மணல் லாரி சம்மேளனம் பொதுச் செயலாளர் ஆர்.பன்னீர்செல்வம், ‘‘2003-ம் ஆண்டு அரசு மணல் விற்பனையை அறிமுகப்படுத்தியபோது, ஆற்றில் இருந்து லாரிகளில் மணல் அள்ளிப்போட கட்டணம் எதுவும் வசூலிக்கவில்லை. இப்போதும் அதேமுறையைக் கொண்டுவந்தால், மணல் விலை வெகுவாகக் குறைந்துவிடும். அதிகபட்சமாக 8,000 ரூபாய்க்குள் சென்னையில் இரண்டு யூனிட் மணல் சப்ளை செய்ய முடியும்.
உதாரணமாக, 600 சதுர அடி வீடு கட்ட 20 யூனிட் மணல் தேவைப்படும். அதாவது, ஐந்து லாரி மணல் தேவை. ஒரு லாரி மணல் 8 ஆயிரம் ரூபாய் என்றால், மணலுக்கு மட்டும் 80,000 ரூபாய் ஆகும். ஆனால், இப்போதுள்ள நடைமுறையில் இரண்டு யூனிட் மணல் விலை அதிகபட்சமாக 12,500 என்றால் 10 லாரி மணலுக்கு 1,25,000 ரூபாய் ஆகிறது. எனவே, 45,000 ரூபாய் மிச்சமாகும். இதைச் செய்யவேண்டியது தமிழக அரசுதான்’’ என்று விவரமாகச் சொன்னார்.
விலை குறைய என்ன வழி?
மணல் விலை குறைய என்ன வழி என்று பார்ப்போம்.
1. இப்போது இருக்கும் ஸ்டாக் யார்ட் முறையை ரத்துசெய்து, மணல் அள்ளும் லாரிகளுக்கு ஆற்றிலேயே மணல் ஏற்றிவிட வேண்டும்.
2. லோடிங் கான்ட்ராக்ட் ஒப்பந்தங்களை வெளிப்படையாக நடத்த வேண்டும். இல்லையென்றால், இந்த லோடிங் கான்ட்ராக்ட் முறையை முற்றிலுமாக அரசே ஏற்று நடத்த வேண்டும்.
3. மணல் விற்பனையை முறைப்படுத்தி, அரசின் முழு வருமானத்தை ஈட்டத் தகுந்த வகையில், இதற்கென தனித்துறை அல்லது சிறப்புப் பிரிவு ஏற்படுத்த வேண்டும்.
4. அரசு ஒப்புதல் அளிக்கும் குவாரிகள் குறித்து வெளிப்படையான அறிவிப்பு வேண்டும். அதில் குவாரியின் பரப்பளவு, தோண்ட அனுமதிக்கப் பட்டுள்ள ஆழம், இயங்கும் கால அளவு ஆகியவற்றைத் தெரிவிக்க வேண்டும்.
5. அப்படி இயங்கும் குவாரிகள் அவற்றின் நிர்ணயிக்கப்பட்ட எல்லைகள் குறிக்கப்பட்டு பார்வையில் தெரியும்வகையில் அமைவதோடு, அனுமதிக்கப்பட்ட ஆழத்தைக் கொண்ட ஒப்பீட்டுக் குழிகளைத் தேவையான எண்ணிக்கையில் அமைக்க வேண்டும்.
6. வயிற்றுப் பிழைப்புக்காக மாட்டு வண்டியில் மணல் அள்ளுவோரைப் பிடித்து வழக்கு போட்டு மணல் திருடியவர்கள் என்றும், மணல் கொள்ளையர்கள் என்றும் அடையாளப்படுத்தும் அரசு, உண்மையான மணல் கொள்ளையர்களைப் பாதுகாத்து சமூகத் தீங்கு இழைத்து வருவதை இனியேனும் நிறுத்த வேண்டும்.
மணல் விலை கணிசமாகக் குறைந்தால் மட்டுமே சாதாரண மனிதர்களின் கனவான சொந்த வீடு நனவாகும்!