‘‘டேய் முகுந்த், நம்ம ஸ்ரீனி அமெரிக்காவுல இருந்து வந்திருக்கான்டா. ‘காஸ்ட்லி ரிசார்ட் புக்பண்றேன்’னு சொல்லியிருக்கான்” என்றான் ரோகித்.
“காஸ்ட்லியா...? அதிக விலை கொடுத்தா போதுமா..? தரம்தான்டா முக்கியம்” என்றான் முகுந்த்.
“கரெக்ட்டா சொன்ன மச்சான். நல்ல ரிசார்ட்டுக்குப் போகலாம்னு சொன்னா பரவாயில்ல. காஸ்ட்லியான ரிசார்ட்டுக்குப் போகணும், அங்க ஃபுட் ஐட்டம் ஆயிரம் ரூபாய்க்குக் கம்மியா இருக்கவேகூடாதுன்னு ஸ்ரீனி சொல்றான்” என்றான் ரோஹித்.
“அவன் ஃபாரின் போயிட்டு வந்திருக்கான். அப்படித்தான் பேசுவான். ஒண்ணும் பிரச்னையில்லடா... நான் ஸ்ரீனிகிட்ட பேசிக்கிறேன்” என்றான் முகுந்த்.

ஸ்ரீனிக்கு முகுந்த் போன் செய்தான். ஸ்ரீனி போனை எடுத்தவுடன், “நான் ரோகித்கிட்ட பேசிட்டேன்.உனக்கு அப்டேட் பண்ணியிருப்பான். எனக்கு இப்ப டயம் இல்ல... நீ ரோகித்கிட்டேயிருந்து எல்லா டீடெய்லும் வாங்கிக்க” என்று சொல்லிவிட்டு போனை கட் பண்ணிவிட, முகுந்துக்கு ஸ்ரீனியின் வெளிநாட்டு மோகத்தை உணர முடிந்தது.
ரிசார்ட்டிற்குச் செல்வதற்கு முதல்நாள் ஸ்ரீனி கால் செய்தான். “டேய் ரோகித்... இது கான் கால். முகுந்தும் லைன்ல இருக்கான், ஒருசில விஷயங்கள் சொல்றேன்... நோட் பண்ணிக்கங்க. நாம என்ன டிரஸ் போடணும், என்ன சாப்பிடணும் என எல்லாமே நான் டிஸைட் பண்ணிடேன்டா. உங்களுக்கான டிரஸ், தேவையான காஸ்மெட்டிக்ஸ் எல்லாமே தயார்” என்றான் ஸ்ரீனி.
ஸ்ரீனி கால் கட் செய்தவுடன் ரோகித்தும், முகுந்த்தும் பேசிக்கொண்டனர். “டேய் பார்ட்டிக்குப் போகணுமாடா” என்றான் ரோகித்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

முகுந்த்திற்கு சட்டென்று ஓர் எண்ணம் தோன்றியது “ரோகித்... இவன் பேசறதையெல்லாம் பார்த்தா அவன் ஆழ்மனசுலேர்ந்து பேசுறது போல இல்லடா. ஏதோ சந்தர்ப்ப சூழ்நிலையால அப்படி பேசுறான். அவனுடைய எண்ணம் ஃபாரின் போனவனெல்லாம் மிகப்பெரிய அறிவாளி போலவும், இங்க இருக்கறவங்கயெல்லாம் அவங்களைவிட கீழ் என்பது போலவும்தான் இருக்குடா” என்றான் முகுந்த்.
“சரிடா நாம என்ன பண்ணாலாங்கற?” என்றான் ரோகித். “அவனுக்கு நாளைக்கு ஒரு நல்ல பாடம் புகட்டலாம்டா.அவன் சொல்றதையெல்லாம் தப்பா எடுத்துக்க வேண்டாம். ஒரு நல்ல நட்போட அடையாளமே தவறாகப் புரிந்து கொண்டிருப்பதைத் திருத்துறதுதான். அது நம்மளோட கடமையும்கூட” என்று ரோகித்தை தயார்படுத்தினான் முகுந்த்.
அடுத்த நாள் ரிசார்ட் ட்ரிப்பிற்கு ஸ்ரீனி கொடுத்த ஆடைகளைப் போட்டுக் கொண்டு, அவன் கொடுத்த பொருள்களுடன் ரோகித்தும்,முகுந்தும் தயாராகியிருந்தனர். அப்போது அங்கு வந்த ஸ்ரீனி, “டேய் செமடா மச்சான்ஸ். ஃபாரின் பொருள்கள்னா அது தனியா தெரியுது பாத்தில்ல, சரி சரி ஏறுங்கடா. பிஎம்.டபிள்யூடா ஃபாரின் காரு” என்றான்.
அதன்பிறகு முகுந்தையோ ரோஹித்தையோ அவன் பேசவிடவில்லை. வழியெங்கும் அயல்நாட்டு வாழ்கையைப் பற்றியும் குடும்பத்துடன் தான் அங்கு எவ்வளவு சந்தோஷமாக இருக்கிறான் என்பது பற்றியும், தனது ஆடை மற்றும் தான் உபயோகப்படுத்தும் அத்தனை பொருள்களும் வெளிநாட்டு பொருள்கள் என்றும் புகழ்ந்து கொண்டே வந்தான்.
தொடர்ந்து ஸ்ரீனி, “என் பையன் தேட் ஸ்டாண்டர்டுதான் படிக்கிறான். ஸ்கூலேர்ந்து வந்ததும் வெளில போய் சேறுலெல்லாம் விளையாட மாட்டான். ஆப்பிள் ஐபேட் வாங்கிக்கொடுத்துருக்கேன். அதுலதான் கேம்ஸ் விளையாடுவான்” என்றான்.
ஸ்ரீனி பெருமையாக ஏதாவது சொல்லும் ஒவ்வொருமுறையும் முகுந்தும்,ரோகித்தும் ஒருவரையொருவர் பார்த்துக்கொண்டனர். அவனது பழைய வாழ்க்கை முறை, வறுமை நிலையில் அவன் பேசியது போன்றவற்றை எண்ணிக்கொண்டனர்.

ரிசார்ட்டை அடைந்தார்கள். பார்ட்டியின் இறுதியில் ஸ்ரீனிக்குத் தாங்கள் சர்ப்ரைஸ் வைத்திருப்பதாகச் சொல்லி, அங்கிருந்த சிப்பந்திகளிடம் சைகை செய்தனர். ஒவ்வொரு பாக்ஸாக வந்தது. எல்லாவற்றின்மீதும் ஃபாரின் சீல் குத்தப்பட்டிருந்தது.
அவற்றைப் பார்த்த ஸ்ரீனி, “பாத்தியா நான் சொன்னேன்ல... இதுக்குதான் இந்த ரிசார்ட்க்கு வரணும்னு சொன்னேன்” என்றான். “எல்லாமே ஃபாரின் பிராண்ட் அதனாலதான் இவ்வளவு டேஸ்டா இருக்கு” என்றான்.
முகுந்தும் ரோகித்தும் ஸ்ரீனியிடம் வந்து கேட்டனர். “நீ குடிச்சியே அது என்ன தெரியுமா?” என்று. அதற்கு ஸ்ரீனி, “ஓ தெரியுமே... அது ஒரு ஃபாரின் எனர்ஜி புராடக்ட்” என்றான். இருவரும் சிரித்துக்கொண்டே “நீ குடிச்சது நம்ம ஊர் கேப்பைக் கூழ்டா” என்றார்கள். “உனக்கு நாங்க கொடுத்த டீசர்ட் திருப்பூர்ல தயார் பண்ணினது” என்றனர்.
ஸ்ரீனிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் நின்றுகொண்டிருந்தான்.
அப்போது ஸ்ரீனியை பார்த்துப் பேசிய முகுந்த், “ ஒவ்வொரு நாட்டிற்கும் ஒவ்வொரு தட்பவெட்ப நிலை இருக்கிறது. அந்தந்த தட்பவெட்ப நிலைக்குத் தகுந்தமாதிரியான உணவு, உடை, உறைவிடம் மாற்றம் பெறும். ஒவ்வொரு நாட்டிற்குள்ளுமே மாறுபாடு இருக்கிறது. நீ சொல்கிறபடி ஒரு சில வெளிநாட்டுச் சாதனங்களை நம்நாட்டில் பயன்படுத்தலாம். ஆனால், முற்றிலுமாக அது சாத்தியமற்ற விஷயம்” என்றான்.
ரோகித் தொடர்ந்தான்... “நம் நாட்டுலேயிருந்து தயாராகக்கூடிய பல பொருள்கள் வெளிநாட்டிற்கு ஏற்றுமதியாகி, அங்கிருக்கும் பிராண்ட் லேபில் போட்டு அதை பலமடங்கு விலை கூட்டி விற்கின்றனர். இதைத் தெரிந்தேதான் அதனை நாம் அங்கிருந்து வாங்கிவந்து இங்குள்ளவர்களுக்குக் கொடுக்கிறோம். அதில்தான் நம் மக்களும் மகிழ்ச்சியடைகின்றனர்.
வெளிநாட்டுப் பொருளைப் பயன்படுத்தவே கூடாது என்பதல்ல என் நோக்கம்; நமக்கும், நம்நாட்டுக்கும், காலச்சூழலுக்கும் ஏற்றமாதிரியான உணவுகளையும் பொருள்களையும் உடைகளையும் பயன்படுத்த வேண்டும் என்பதே எனது எண்ணம்” என்றான் முகுந்த். அத்துடன், “நீ சொல்கிற விதத்தில்தான் நம்நாட்டைப் பற்றிய எண்ணம் உன் மகனின் மனதில் பதியும். அதை யோசித்தாயா?” என்றான்.
மீண்டும் தொடர்ந்த ரோகித், “வெளிநாடுன்னு போனா வெறும் பொருள்களைத்தான் வாங்கி பயன்படுத்தணும்னு இல்ல, அவர்கள்கிட்டேயிருந்து நாம் கத்துக்க வேண்டிய சில நல்ல பழக்கங்களும் இருக்கு. நேரத்தைச் சரியா பயன்படுத்தறது, சின்ன விஷயம் பண்ணினாலும் அதைப் பாராட்டுறதுன்னு இந்த மாதிரியான விஷயங்களை நாம அவங்ககிட்ட கத்துக்கலாம்டா” என்றான்.
“நீ சொல்வதும் சரிதான்டா. நான் இப்பத்தான் நினைக்கிறேன். நான் பிறந்து வளர்ந்த, எனக்கு எல்லாமே தந்த என்னுடைய நாட்டைப் பற்றி நான் என்னவிதமான எண்ணத்தை என் மகனின் மனதில் பதித்திருக்கிறேன் என் செயல்பாடுகள் மூலம்” என்றான் ஸ்ரீனி. மேலும், “என்ன நினைச்சா எனக்கே அசிங்கமா இருக்குடா” என்றான்.
அதைக் கேட்ட முகுந்தும், ரோகித்தும், “இன்று உனக்கு ஏற்பட்ட இந்த மனமாற்றம் பலருக்கும் ஏற்பட்டால், நம்நாட்டை வளப்படுத்த முனைப்பு ஏற்படும்” என்றனர். “நம்ம நாட்டில் இல்லாத வளங்களே இல்லை. இவையனைத்தையும் வெளிநாட்டவர்கள் பயன்படுத்திக் கொள்கின்றனர்” என்றான் முகுந்த். “நீ சொல்வதும் சரிதான்” என்றபோது ஸ்ரீனி தெளிவடைந்திருந்தான்.
படங்கள்: ப.சரவணக்குமார்
