கடன் |

கடை
தேடி வருது வங்கி! |

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மா லைநேர நெரிசலில் சிக்கியிருந்தது சென்னை, தி.நகரில் உள்ள ரங்கநாதன் தெரு... பாத்ரூம் குழாய்க்கு புதிதாக ஒரு ஃபிட்டிங் வாங்கலாம் என்று ஒரு கடைக்குள் புகுந்தபோது... கடைக்காரர், எதிரே நின்று கொண்டிருந்த ஒருவரிடம் ரூபாயை எண்ணிக் கொடுத்துக்கொண்டிருந்தார். எதிரே நின்றிருந்த மனிதர் கையில் இருந்த கிரெடிட் கார்ட் ஸ்வைப்பிங் மெஷின் போன்ற இயந்திரத்தில் ஏதோ எண்களை அழுத்தி, கடைக்காரருக்கு ரசீது பிரின்ட் எடுத்துக் கொடுத்தார். கூடவே, ‘‘உங்க கடனில் இன்னும் இவ்வளவு ரூபாய் கட்ட வேண்டியிருக்கு. நாளைக்கு வந்து அடுத்த தவணையை வாங்கிக் கொள்கிறேன்’’ என்று சொல்லிவிட்டு அடுத்த கடையைத் தேடிப்போனார். குழாய்க்கு ஃபிட்டிங் வாங்கும் வேலையை விட்டுவிட்டு, ‘‘என்ன கடைக்காரரே... இது என்ன தண்டல் கடனுக்கு ரசீது எல்லாம் கொடுக்கறாங்களா?’’ என்றோம். ‘‘இது தண்டல் இல்லை, வங்கிக் கடன் வசூல்... எங்களுக்கு மாதாமாதம் கட்டுவது சிரமமாக இருக்கும் என்பதால் தினமும் வங்கியில் இருந்து வந்து வசூலித்துக்கொள்வார்கள். உடனுக்குடன் ரசீதும் கொடுத்துவிடுவதால் நம்பிக்கையாக இருக்கிறது’’ என்றார் அந்தக் கடைக்காரர். அடுத்தகடையில் வசூல் செய்து கொண்டிருந்த அந்த மனிதரைப் பிடித்து ‘இது என்ன புதுமாதிரியான கடன்?’ என்று விசாரித்தோம். நேராக நம்மை அழைத்துப்போய், ரெப்கோ வங்கியின் நிர்வாக இயக்குநர் பாலசுப்பிரமணியன் முன்னால் நிறுத்தினார். |

‘‘வணிகத்தை விரிவுபடுத்த கடன் வாங்கும் சிறு வணிகர்கள், பெரும்பாலும் தண்டல்காரர்களையே தேடிப்போகிறார்கள். காரணம், வங்கிக் கடன் என்றால் பல நடைமுறைச் சிக்கல்கள் இருப்பதாக வணிகர்கள் எண்ணிக் கொள்வதுதான். பலருக்கு வங்கியில் கணக்கே இருப்பதில்லை. கேட்டால், ‘காலையில் கடையைத் திறந்தால் ராத்திரிவரை கடையிலேயேதான் இருக்க வேண்டியிருக்கிறது. இதில் வங்கிக்குப் போய்வர நேரம் ஏது?’ என்பார்கள். அவர்களுக்கு கடையைத் தேடி வந்து கடன் கொடுக்கும், தேடிவந்து வசூலித்துக்கொள்ளும் தின வசூல்காரர் சரியானவராகத் தெரிகிறார். அவர்களைப் போல கடையைத் தேடிவந்து வசூலிப்பவராகவும், வங்கிகளைப் போல நல்ல சலுகைகளோடு கடன் கொடுப்பவராகவும் ஒரே ஆள் இருந்தால் இந்த சிறு வணிகர்களின் வாழ்க்கை நல்ல விதமாக இருக்குமே... அதிக வட்டி வாங்கும் தண்டல்காரர்கள் கையில் சிக்கி, இவர்கள் அவதிப்படக்கூடாதே என்ற நோக்கத்தோடு நாங்கள் தொடங்கிய திட்டம் இது. இதற்காகவே ‘ரெப்கோ ஜீனியஸ்’ என்ற பில்லிங் மெஷினை உருவாக்கி இருக்கிறோம்’’ என்று மிக நீண்ட அறிமுகத்தைக் கொடுத்தார் பாலசுப்பிர மணியன். வியாபாரத்தில் அன்று கிடைக்கும் லாபத்தை அன்றே செலவழித்துவிடும் இந்த சிறு வணிகர்களுக்கு முதலில் சேமிக்கும் பழக்கத்தைக் கற்றுக்கொடுக்கிறது ரெப்கோ வங்கி. வணிகர்களின் பெயரில் ஒரு சேமிப்புக் கணக்கைத் துவக்கி, தினமும் கடைக்கு வந்து பணத்தை வாங்கிக்கொண்டு போய் அந்தக் கணக்கில் டெபாசிட் செய்கிறார்கள். குறைந்தபட்சம் ஐம்பது ரூபாயாக இருந்தாலும் கடைதேடி வந்து வாங்கிச் செல்கிறார்கள். குறைந்தபட்சம் மூன்று மாதங்களுக்குப் பிறகு, அந்த சேமிப்புக் கணக்கில் கணிசமான தொகை சேர்ந்தவுடன், அந்தத் தொகையைப் போல இரண்டு மடங்கோ மூன்று மடங்கோ கடனாகக் கொடுக் கிறார்கள். அந்தக் கடன் தொகையையும் இத்தனை தவணைகள் என்ற கணக்கில் பிரித்துக்கொண்டு, அதை தினம் தினம் வந்து வசூலித்துக் கொள்கிறார்கள். இன்னொருபக்கம் சேமிப்பும் வளர்ந்து கொண்டே இருக்கும். அந்தச் சேமிப்பையே பணயமாக வைத்துக் கொண்டு கடன் கொடுப்பதால் வேறு எந்த செக்யூரிட்டி எதையும் கேட்பதில்லை வங்கி. வணிகர்கள் சேமிக்கும் பணத்துக்கு 5% வட்டி தரும் வங்கி, கொடுக்கும் கடனுக்கு 13% வட்டி வசூலிக்கிறது. குறைந்தபட்சமாக ரூபாய் பத்தாயிரம் முதல் ஐந்து லட்சம் வரை பல்வேறு திட்டங்களில் கடன் வழங்குகிறது ரெப்கோ வங்கி. தினமும் பணம் கட்டகட்ட அசலும் குறையும், வட்டியும் குறையும். ஒரு நாள் தவறினாலும் விட்டுக்கொடுத்து அடுத்த நாள் சேர்த்துக் கட்டிக்கொள்ளலாம். வங்கிக்கெல்லாம் யாரால் அலையமுடியும் என்ற சலிப்போடு இருக்கும் வணிகர்களே... வாசலுக்கே வரும் வாய்ப்பைப் பயன்படுத்திக்கொள்ளுங்கள், வியாபாரத்தைப் பெருக்குங்கள்!
|

|