சேமிப்பு |

|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மு ந்தைய நிறுவனத்தில் இருந்த மாதிரியான படிவங்கள்தான். பி.எஃப் நியமனம், வங்கிக் கணக்கு திறப்பதற்கான ஃபாரம் போன்ற வழக்கமான படிவங்களை கடகடவென்று நிரப்பிக்கொடுத்த பார்த்திபனின் முன்னால், அஞ்சலக சேமிப்புத் திட்ட ஃபாரம் ஒன்றை அதிகாரி நீட்டியவுடன் ஆச்சரியமாகிவிட்டார். ‘‘என்ன சார் இது... நான் என்ன வேலை செய்ய வேண்டும்... என்ன ஷிஃப்டில் பணியாற்ற வேண்டும்... எத்தனை நாள் லீவு எடுத்துக் கொள்ளலாம் என்பதையெல்லாம் கம்பெனி சொல்லலாம். ஆனால், நான் என்ன சேமிக்கவேண்டும் என்பதையும் கம்பெனியே முடிவு செய்யவேண்டுமா என்ன? இந்தமுறை விநோதமாக இருக்கிறதே..!’’ என்றார். மனிதவளத்துறை அதிகாரி சிறு புன்னகையோடு நிமிர்ந்து உட்கார்ந்தார். ‘‘அதுபற்றி பிறகு சொல்கிறேன். அதற்கு முன் ஒரு சிறு கணக்கு. பதில் சொல்லுங்கள் பார்த்திபன்...’’ என்று ஆரம்பித்தார். ‘‘இன்று நுகர்வோர் கலாசாரம் பெருகிப்போச்சு. எந்தப் பொருளைப் பார்த்தாலும் வாங்கிப்போடத் தோன்றும். அதற்கு ஏற்றமாதிரி பொருட்களின் விலையும் குறைந்துகொண்டே போகிறது... சரியா?’’ ‘‘சரிதான்..!’’ ‘‘முன்பிருந்த காலத்தில் வியாபாரத் தொழில் இத்தனை பிரபலமாகவில்லை. அதனால், குறிப் பிட்ட சில நிறுவனங்கள் பொருட்களைத் தயாரித்து, விலையும் நிர்ணயம் செய்து, மார்க்கெட்டில் விற்று வந்தன. அவர்கள் சொன்னதுதான் விலை. அப்போது வியாபாரிகளின் ஃபார்முலா எப்படி இருந்தது தெரியுமா..? தயாரிப்பு செலவு ப்ளஸ் லாபம், இரண்டும் சேர்ந்ததுதான் பொருளின் விலை! |

ஆனால், காலமாற்றத்தில் ஒரே பொருளை பல கம்பெனிகள் தயாரிக்கும் நிலை வந்ததும் விலை நிர்ணயிப்பதிலும் போட்டி எழுந்தது. யார் குறைவான விலையில் பொருட்களைக் கொடுத்து மார்க்கெட்டில் லீடராக இருப்பது என்ற போட்டியில் விலையைக் குறைக்க ஆரம்பித்தார்கள். இப்போது ஃபார்முலா மாறிவிட்டது. விற்கக்கூடிய விலை மைனஸ் தயாரிப்பு செலவு, இதுதான் லாபம்..!’’ என்று சொன்ன அந்த அதிகாரி, ‘‘இப்போது உங்கள் விஷயத்துக்கு வருவோம். பிடித்தமெல்லாம் போக உங்கள் சம்பளம் எவ்வளவு வரும்?’’ தன் கையிலிருந்த பேப்பர்களைப் பார்த்து கணக்கிட்ட பார்த்திபன், ‘‘பத்தாயிரத்து எழுநூறு ரூபாய் சார்...’’ என்றார். ‘‘போன மாசம் எவ்வளவு வந்தது பார்த்திபன்?’’ ‘‘அஞ்சாயிரம் சார்!’’ ‘‘ஆக, இந்த மாதம் உங்களுக்குக் கிடைக்க இருக்கிற கூடுதல் வருமானம் ஐந்தாயிரத்து எழுநூறு... அது ஐந்தாயிரத்து இருநூறாக இருந்தால் உங்களுக்கு ஏதாவது நஷ்டமா?’’ ‘‘இல்லை சார்... அந்தத் தொகையே எனக்கு லாபம்தானே..!’’ ‘‘அதைத்தான் நாங்களும் செய்கிறோம்... உங்களுக்கு ஐந்நூறு ரூபாய் சம்பளம் குறைவு என்ற எண்ணத்தை உண்டாக்கிவிட்டு அதைச் சேமிப்பாக மாற்றுகிறோம். உங்கள் சம்பளத்தின் முதல் செலவே சேமிப்பாக இருக்கவேண்டும் என்று சொல்கிறோம்’’ என்றார் அந்த அதிகாரி. பார்த்திபனுக்கு அந்த கான்செப்ட் பிடித்திருந்தது. ஆனாலும் ஒரு சந்தேகம்... ‘‘உங்கள் ஐடியா ஓகே... ஆனால், அஞ்சலக சேமிப்புத் திட்டம் எதற்காக..? நானே வெளியே எடுத்துக்கொண்டு போய் ஏதாவது நல்ல ரிட்டர்ன் கிடைக்கும் திட்டத்தில் சேமித்துக்கொள்ள மாட்டேனா?’’ ‘‘இது ஊழியர்களின் மீது நம்பிக்கை இல்லாமல் இல்லை. வெளியில் அதிக ரிட்டர்ன் கொடுக்கும் சேமிப்புகளில் ரிஸ்க்கும் அதிகம் இருக்கிறது. ஏதாவது ஒரு சந்தர்ப்பத்தில் அந்த ரிஸ்க் காரணமாக சேமிப்பு தடைபட்டால் அடுத்து சேமிப்பைத் தொடரமாட்டோம். பழக்கம் விட்டுப் போகும். அஞ்சலக சேமிப்பில் பாதுகாப்பு அதிகம். முதலுக்கு மோசமில்லை. ஓரளவு வட்டியும் தருகிறார்கள். இதிலே மாதம் 500 ரூபாய் போட்டால் ஆண்டுக்கு 6,000 ரூபாய் சேர்ந்து விடும். ஐந்து, ஆறு வருடங்களில் அது வட்டியுடன் முப்பது ஆயிரத்துக்கும் மேலாகிவிடும். அதை அப்படியே எடுத்து நல்ல பலன் தரும் வேறு விஷயத்தில் முதலீடு செய்தால்... பணம் பெருகும் இல்லையா..! காலம் போகப்போக, உங்கள் சம்பளமும் கூடிக்கொண்டே போகும். அப்போது உங்கள் சேமிப்பையும் கூட்டலாம். இன்னொரு 250 ரூபாய் சேமிப்புத் திட்டத்திலும் சேரலாம். அது ஒரு பக்கம் வளர... இது ஒரு பக்கம் வளர, இப்படியே உங்கள் சர்வீஸ் முழுக்கத் தொடர்ந்து சேமித்தால்... ரிட்டயர்மென்டின்போது நீங்கள் நிச்சயம் ஒரு கோடீஸ்வரராக ரிட்டயர் ஆகலாம்... முடியும்!’’ என்றார் அதிகாரி. ‘‘ரொம்ப நல்ல திட்டம் சார். வேலைக்குச் சேரும்போதே இப்படி சேமிப்புக்காக பணத்தை பிடித்துக்கொள்வதால் இவ்வளவுதான் வருமானம் என்று மனசு பழகிவிடும். நான் நிச்சயம் கோடீஸ்வரனாவேன். நன்றி’’ என்று எழுந்து, அதிகாரியிடம் விடைபெற்ற பார்த்திபனின் கைகுலுக்கலில் தெரிந்தது நன்றியின் அழுத்தம். நினைவில் வைத்துக்கொள்ளுங்கள், பார்த்திபனை மட்டுமல்ல... உங்களையும் கோடீஸ்வரனாக்கும் ஃபார்முலா \ வருமானம் \ சேமிப்பு = உங்கள் செலவு. ஓகே-யா! |