
பிரதமர் மோடியின் பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் சிறு, குறு மற்றும் நடுத்தர தொழில்களை செய்துவருபவர்களும் (MSME), விவசாயிகளும் அதிகம் பாதிக்கப்பட்டு இருக்கிறார் கள். இந்தப் பாதிப்புகளுக்கு மருந்து தடவுகிற மாதிரி, எம்.எஸ்.எம்.இ தொழில்முனைவோர்களுக் கான உத்தரவாதக் கடன் நிதி (Credit Guarantee Fund Trust For Micro and Small Enterprises) திட்டத்தில் எந்த உத்தரவாதமும் இல்லாமல், இதுவரை வழங்கப்பட்டு வந்த கடன் தொகை ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்துள்ளார்.
கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள விவசாயக் கடன்களுக்கான 60 நாட்களுக்குரிய வட்டியை மத்திய அரசே ஏற்கும் எனவும், 3 கோடி கிசான் கிரெடிட் கார்டுகள் ரூபே கார்டுகளாக மாற்றப்படும் எனவும் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்துள்ளார். இதனால் தொழில்முனை வோர்களும் விவசாயிகளும் நன்மை அடைவார்களா என சிறு மற்றும் குறுந்தொழில் முனைவோர் அமைப்பினருடனும் விவசாயச் சங்கப் பிரதிநிதிகளுடனும் பேசினோம்.


ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
தமிழ்நாடு சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத் (டான்சியா) தலைவர் சி.பாபு, “சி.ஜி.டி.எம்.எஸ்.இ திட்டத்தில் கடன் பெறத் தகுதி உள்ளவர்களுக்கு உத்தரவாதமாகத் தரவேண்டிய ரூ.10 லட்சத்தையே வங்கிகள் தருவதில்லை. மேலும், எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.1 கோடி வரை கடன் தரலாம் என்பதையும் வங்கிகள் மதிப்பதில்லை. தற்போது ரூ.1 கோடியிலிருந்து ரூ.2 கோடியாக உயர்த்தினால் மட்டும் வங்கிகள் அழைத்துத் தந்துவிடப் போகின்றனவா?
எங்களைப் பொறுத்தவரை, மாற வேண்டியது தொகை அல்ல, வங்கியாளர்கள்தான். தற்போது பண மதிப்பு நீக்கத்தினால் வங்கியில் அதிக டெபாசிட் ஆகிவந்திருக்கிறது. இனியாவது வங்கிகள் எஸ்எம்இ-களுக்குக் கடன் வழங்க முன்வரும் என்று நம்புகிறோம்” என்றார்.
கோவை சிறு மற்றும் குறுந்தொழில்கள் சங்கத்தின் (கொடீசியா) செயலாளர், இளங்கோ, ‘‘சி.ஜி.டி.எம்.எஸ்.இ திட்டத்தில் ரூ.2 கோடி கடன் வழங்கும் திட்டத்தை இரண்டாவது முறையாக பிரதமர் அறிமுகப்படுத்துகிறார். முதல்முறையாக அறிமுகம் செய்தபோதே இந்தத் திட்டம் சரியாக நடைமுறைப்படுத்தப்படவில்லை. மேலும், எந்த உத்தரவாதமும் இல்லாமல் ரூ.1 கோடி வரை கடன் தரலாம் என்பதில், ரூ,25 லட்சம்கூட வங்கிகள் தரவில்லை.

இப்போது இந்தத் தொகையை ரூ.2 கோடியாக உயர்த்தி இருப்பது நல்ல விஷயம். வங்கிகள் இனியாவது இதை முழுவீச்சில் நடைமுறைப்படுத்த வேண்டும். வளரும் துடிப்புள்ள, திறமையுள்ள புதிய எம்.எஸ்.எம்.இ-களுக்கு எந்தச் சாக்குபோக்கும் சொல்லாமல், இழுத்தடிக்காமல் கடன் வழங்க வேண்டும்’’ என்று முடித்தார்.
கேப்பிட்டல் மார்க்கெட் சர்வீசஸ் நிறுவனத்தின் தலைவர் சிவக்குமாரிடம் கேட்டோம். ‘‘இந்தத் திட்டம் ரூ.2 கோடியாக உயர்த்தப்பட்டதால், எம்.எஸ்.எம்.இ-களுக்கு எந்தப் பயனும் இல்லை. ஏனெனில், ஒரு கோடி கடனையே வங்கிகள் தர வேண்டியவர்களுக்கு ஒழுங்காகத் தரவில்லை. ‘ரிஸ்க் அவர்ஷன்’ காரணத்தினால் வங்கிகள் எம்.எஸ்.எம்.இ-களுக்கு கடன் தரவே பயப்படுகின்றன. வங்கி மேனேஜர்கள், பிரச்னைகளைத் தவிர்க்கவே நினைக்கின்றனர்.
பண மதிப்பு நீக்க நடவடிக்கையால் ஏற்பட்டுள்ள பொருளாதாரத் தொய்வில் எம்.எஸ்.எம்.இ-கள் வெகுவாகப் பாதிக்கப் பட்டிருப்பதால், அவர்களுக்குத் தரப்பட்ட கடனுக்கான வட்டி விகிதத்தைக் குறைப்பது, கடன் சலுகைக் கொடுப்பது போன்றவற்றைச் செய்யலாம். மாறாக, கடன் தொகையை உயர்த்துவதினால் எந்தப் பயனும் இல்லை. ரூ.1 கோடி கடன் என்றாலும், அது தகுதியுள்ள எம்.எஸ்.எம்.இ-களுக்கு மறுக்கப்படாமல் வங்கிகள் தருவதற்கு மத்திய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும்’’ என்றார்.
அடுத்து, விவசாய சங்கங்களின் பிரதிநிதிகளைச் சந்தித்தோம். முதலில், தஞ்சை மாவட்ட காவிரி விவசாயிகள் பாதுகாப்புச் சங்கத்தின் துணை செயலாளர் சுகுமாறனிடம் கேட்டோம்.

‘‘இதனால் எங்களைப் போன்ற விவசாயிகளுக்கு ஒரு பலனும் கிடையாது. கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்பட்டுள்ள மத்திய கால கடன்களுக்குத்தான் இந்த 60 நாள் வட்டி ஏற்புச் சலுகை வழங்கப்பட இருப்பதாக கூட்டுறவு வங்கி அதிகாரிகள் தெரிவிக்கிறார்கள். மத்திய கால கடன் என்பது, கதிர் அடிக்கும் இயந்திரம், அறுவடை இயந்திரம் போன்றவற்றுக்கு வழங்கப்படும் கடன்களாகும். சாதாரண சிறு, குறு விவசாயிகளுக்கு இந்தக் கடன் வழங்கப்படுவதில்லை. பெரும் செல்வந்தர் களும், தனியார் நிறுவனத்தினரும்தான் இந்தக் கடன்களை வாங்கி விவசாயிகளுக்கு வாடகைக்கு விட்டு, வருமானம் பார்க்கிறார்கள். 60 நாள் வட்டித் தள்ளுபடி என்பது பணக்காரர்களுக்கு மட்டுமே பலன் கொடுக்கும்.
பயிர் கடன்களுக்கான 60 நாட்களுக்குரிய வட்டியையும் மத்திய அரசு ஏற்கும் என ஒருவேளை அறிவிக்கப்பட்டாலுமேகூட, அதனால் விவசாயிகளுக்குப் பெரிய பலன் எதுவும் கிடைக்காது. காரணம், கூட்டுறவு வங்கிகளில் வாங்கப்படும் பயிர் கடன்களுக்கு முதல் எட்டு மாதங்களுக்கு வட்டி கிடையாது. எனவே, கடன் வாங்கப்பட்ட முதல் 60 நாட்களுக்குரிய வட்டியைத் தள்ளுபடி செய்வதினால், தமிழ்நாட்டில் உள்ள விவசாயிகளுக்கு எந்தப் பலனும் கிடையாது.
எட்டு மாதங்களுக்குப் பிறகு உள்ள 60 நாட்களுக்கு வட்டித் தள்ளுபடி என அறிவிக்கப்பட்டாலுமேகூட, விவசாயிகளுக்கு பெரிய அளவில் பலன் கிடைக்காது. காரணம், உரிய காலத்தில் பயிர் கடனை அடைக்கவில்லை என்றாலும் 8 சதவிகிதம்தான் வட்டி விதிக்கப் படுகிறது. 50 ஆயிரம் ரூபாய் பயிர் கடன் வாங்கியுள்ள விவசாயிக்கு 60 நாட்களுக்கு உரிய வட்டியான வெறும் 666 ரூபாயைத்தான் மத்திய அரசு ஏற்கப்போகிறது” என புள்ளிவிவரமாக எடுத்துச் சொன்னார்.

தமிழக உழவர் முன்னணி ஆலோசகர் கி.வெங்கட்ராமன், ‘‘புதிய ரூபே கார்டுகளால் விவசாயிகளுக்கு எந்தப் பலனும் ஏற்படாது. ஏற்கெனவே உள்ள கிசான் கிரெடிட் கார்டு திட்டத்தின்படி வழங்கப்படும் கடன்களுக்கான தொகை விவசாயிகளின் சேமிப்புக் கணக்கில்தான் வரவு வைக்கப்படுகிறது. வழக்கமான ஏ.டி.எம் கார்டுகளைப் பயன்படுத்தி அதை கையாள முடியும். புதிய ரூபே கார்டு வந்தால்தான், விவசாயிகளால் ஸ்வைப் செய்து பணத்தை எடுக்க முடியும் என்பது ஏமாற்று அறிவிப்பு.
இதனால் விவசாயிகளுக்கு பாதகம் ஏற்படவே வாய்ப்பு அதிகம். காரணம், இதில்தான் மானியம் வரவு வைக்கப்படும் என்கிறது மத்திய அரசு. தொடக்கத்தில் வரவு வைப்பார்கள். முழுத் தொகை கொடுத்து, இடுபொருட்களை விவசாயிகள் வாங்குவார்கள். பிறகு படிப்படியாக மானியத்தைக் குறைத்து, பிறகு முழுமையாகவே நிறுத்திவிடுவார்கள். முழு விலை தந்து இடுபொருட்கள் வாங்கிய விவசாயிகளுக்கு அதுவே பழகிவிடும். ரூபே கார்டுக்குச் சேவைக் கட்டணம் விதிக்கவும் வாய்ப்பு உள்ளது. ரூபே கார்டைப் பயன்படுத்தி, இடுபொருள் உள்ளிட்டவற்றைக் கடனில் வாங்க முடியும் என்ற வசதி அளிக்கப்பட்டால், விவசாயிகள் மேலும் கடனாளிகளாக மாறுவார்கள். உத்தரப்பிரதேசம் உள்ளிட்ட ஐந்து மாநில தேர்தலில் விவசாயிகளிடம் ஓட்டு வாங்கவே பிரதமர் மோடி இந்தத் திட்டங்களை கவர்ச்சிகரமாக அறிவித்துள்ளார்” என்றார்.
ஆக, பிரதமர் மோடியின் அறிவிப்பினால் சிறு தொழில்முனைவோர்களுக்கும் விவசாயிகளுக்கும் பெரிய நன்மை எதுவும் கிடைக்குமா என்பது சந்தேகம் என்றே தெரிகிறது!