
இந்த வாரம் அதிகம் விலை ஏற்றம் கண்டது கச்சா எண்ணெய்தான்! ஏன் இந்த விலை ஏற்றம்?, வரும் வாரத்திலும் விலை அதிகரிக்குமா? என விளக்கமாகக் கூறுகிறார் ஏஞ்சல் புரோக்கிங் நிறுவனத்தின் கமாடிட்டி புராடக்ட் ஹெட் சிவக்குமார்.
##~## |
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
ஐரோப்பிய நாடுகளான கிரீஸ், இத்தாலி, ஸ்பெயின் போன்றவை கச்சா எண்ணெய்க்கு ஈரானை நம்பி இருக்கின்றன. இதனால்தான் கடந்த ஒன்பது மாதங்களில் இல்லாத அளவுக்கு கடந்த வியாழக்கிழமை அன்று கச்சா எண்ணெய் விலை அதிகரித்தது. மேலும், ஜெர்மனியின் கச்சா எண்ணெய் இன்வென்டரி டேட்டாவும், அமெரிக்காவின் லேபர் டேட்டாவும் பாசிட்டிவாக இருந்ததும் விலையேறக் காரணமாக அமைந்தது. ஆக மொத்தத்தில் ஈரான் பிரச்னை, அமெரிக்கப் பொருளாதார புள்ளிவிவரங்கள் சாதகமாக இருப்பதால், வரும் வாரத்திலும் கச்சா எண்ணெய் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.
கடந்த வெள்ளிக்கிழமை மாலை 108.20 டாலருக்கு வர்த்தகமாகி வந்த கச்சா எண்ணெய் குறுகிய காலத்தில் இறங்கினால் 105.25 டாலருக்கும், ஏறினால் 114.85 டாலருக்கும் போகும். எம்.சி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் மார்ச் 19-ம் தேதி அன்று முடியும் ஒரு பி.பி.எல். கச்சா எண்ணெய் கான்ட்ராக்ட் தற்போது 5,350 ரூபாய்க்கு வர்த்தகமாகி வருகிறது. இதன் விலை அதிகரித்து 5,447 ரூபாய்க்கு செல்லும். அதையும் தாண்டி விலை ஏறினால் 5,675 ரூபாய்க்கு செல்ல வாய்ப்பிருக்கிறது. கச்சா எண்ணெய் வாங்கும் நேரமிது.''

கார் கம் (GUAR GUM)!
கார் கம் விதை கடந்த வெள்ளிக்கிழமை அன்று 4% விலை அதிகரித்தது. கார் கம் விதை வரத்து அதிகரித்ததும், முன்பு வாங்கிய ஆர்டர்களுக்காக ஏற்றுமதி செய்ததினாலும் விலை அதிகரித்தது. கடந்த நிதியாண்டில் ஏற்றுமதி செய்யப்பட்ட கார் கம் அளவை இந்த ஆண்டில் இப்போதே செய்துவிட்டதாக அரசுப் புள்ளிவிவரங்கள் சொல்கின்றன. ஜோத்பூர் ஸ்பாட் மார்க்கெட்டில் நூறு கிலோ கார் கம் 505 ரூபாய் அதிகரித்து, 15,721 ரூபாய்க்கு வர்த்தகமானது. தேவை அதிகரித்திருப்பதால் விலை ஏறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மஞ்சள்!
கடந்த வாரத்தில் அதிகமான மஞ்சள் சந்தைக்கு வந்ததைத் தொடர்ந்து ஒரு குவிண்டாலுக்கு இருநூறு ரூபாய் வரை விலை குறைந்தது. ஏப்ரல் மாதம் வரை புதிய ஆர்டர்கள் குறைவாக இருந்தாலும், வடமாநிலங்களில் இருந்து நல்ல ஆர்டர்கள் வருமென எதிர்பார்க்கப்படுகிறது. வர்த்தகர்கள் குறைந்த விலைக்குக் கேட்டாலும், விளைச்சலுக்குப் பணம் தேவை என்பதால் விலை குறைத்துத் தரவும் விவசாயிகள் தயாராக இருக்கிறார்கள்.
இந்த வருடம் 60 லட்சம் மஞ்சள் பேக் விற்பனைக்கு வருமென வர்த்தகர்கள் எதிர்பார்க்கிறார்கள். ஈரோடு விரலி மஞ்சள் ஒரு குவிண்டால் 2,650 ரூபாயிலிருந்து 4,170 ரூபாய் வரை விற்பனையானது. வரத்து அதிகரித்திருப்பதால் வரும் வாரத்தில் விலை குறையவே வாய்ப்புண்டு.

ஜீரா!
சீஸனல் டிமாண்ட் காரணமாக ஜீரா விலை ஏறத் துவங்கியுள்ளது. மார்ச் மாதம் துவக்கத்தில் புதிதாக வரும் ஜீராவை வாங்கவே வர்த்தகர்கள் விரும்புவார்கள். நடப்பு நிதியாண்டில் ஜீரா ஏற்றுமதி ஏப்ரல் முதல் டிசம்பர் வரையில் 31,500 டன்னாக இருந்ததாக ஸ்பைஸ் போர்டு ஆஃப் இந்தியா தெரிவித்துள்ளது. மேலும், 2011-2012-ம் ஆண்டிற்கான ஜீரா உற்பத்தி 35 லட்சம் பைகளாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக என்.சி.டி.எக்ஸ். வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. என்.சி.டி.எக்ஸ். எக்ஸ்சேஞ்சில் கடந்த வெள்ளிக்கிழமை அன்று மார்ச் மாத கான்ட்ராக்ட் ஒரு குவிண்டாலுக்கு 135 ரூபாய் உயர்ந்து 14,190 ரூபாய்க்கு வர்த்தகமானது. வரும் வாரத்தில் விலை சற்று அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மிளகு!
கடந்த வாரத்தில் மிளகை விவசாயிகள் பதுக்கி வைத்ததால் சப்ளை தேக்கமடைந்தது. இதன் காரணமாக விலை அதிகரித்தது. கடந்த வருடம் 49,000 டன்னாக இருந்த உள்நாட்டு மிளகு விளைச்சல் இந்த வருடம் 43,000-45,000 டன்னாக குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது. விளைச்சல் குறைந்து அதிக ஏற்றுமதி டிமாண்ட் இருப்பதன் காரணமாக கொச்சி மிளகு, சந்தையில் நூறு கிலோ 790 ரூபாய் அதிகரித்து 33,500 ரூபாய்க்கு மேல் வர்த்தகமானது. வரும் வாரத்திலும் விலை அதிகரிக்க வாய்ப்புண்டு.

-பானுமதி அருணாசலம்
