தங்கம் மற்றும் பிளாட்டினத்தின் விலைப்போக்கு பற்றி சொல்கிறார்
கமாடிட்டி நிபுணர் ஷியாம் சுந்தர்.
தங்கம்!
''இரண்டு மாத காலமாக தங்கத்தின் சர்வதேச விலையானது ஒரு அவுன்ஸ் 1,640-1,700 டாலர்களுக்குள்ளாக வர்த்தகமாகி வருகிறது. இதற்கு காரணம், அமெரிக்கப் பொருளாதார நடவடிக்கைகளில் இந்த வருடத்தில் மாற்றங்கள் வரலாம் என்கிற எதிர்பார்ப்பே. அதாவது, பொருளாதார ஊக்குவிப்பு நடவடிக்கைகளில் பணப்புழக்கத்தை 2013 இறுதியில் குறைக்கலாம் அல்லது நிறுத்தப்படவேண்டும் என்கிற விவாதங்கள் நடைபெற்று வருகின்றன.
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!
அதேசமயத்தில், ஐரோப்பிய நாடுகளில் குறிப்பாக, ஸ்பெயினில் பொருளாதாரச் சீர்திருத்தங்களை அமல்படுத்துவதில் எழுந்துள்ள அரசியல் சிக்கல்கள் தங்கத்தின் விலையை இறங்கவிடாமல் தடுக் கின்றன. அதுமட்டுமில்லாமல் சீனா 9-ம் தேதி முதல் ஒரு வாரத்திற்கு புது வருடத்தைக் கொண்டாட இருக்கிறது. இவற்றின் அடிப்படையில் தங்கம் ஒரு குறிப்பிட எல்லைக்குள்ளாகவே 1,650-1,690 டாலர்கள் என்ற அளவில் வர்த்தகம் நடைபெற்று வருகிறது.

கடந்த ஆண்டில் அமெரிக்காவில் வேலை கிடைத்தவர்களின் எண்ணிக்கை எதிர்பார்த்ததைவிட அதிகமாக இருந்தது, நிறுவனங்களின் நான்காவது காலாண்டு முடிவுகள் எதிர்பார்த்ததைவிட நன்றாக இருந்த தன் காரணமாக தங்கம் மேல்நோக்கி நகராமல் பக்கவாட்டிலேயே வர்த்தகம் நடைபெறுகிறது.
இந்த மாத இறுதியில் அமெரிக்கா மற்றும் சீனாவிலிருந்து வெளியாகும் செய்திகளை அடிப்படையாக வைத்தே தங்கம் விலை செல்லும்.
பிளாட்டினம்!
கடந்த நான்கு மாதங்களில் இல்லாத அளவுக்கு பிளாட்டினம் புதிய உச்சத்தைத் தொட்டுள்ளது. சென்ற புதன்கிழமை அன்று ஒரு அவுன்ஸ் 1,735 அமெரிக்க டாலர்களாக ஏற்றம் கண்டது. உலகின் பெரிய அளவில் உற்பத்தி செய்யும் ஆங்கிலோ அமெரிக்கன் பிளாட்டினம் என்னும் நிறுவனம் தனது உற்பத்தியை அதிகரிக்க முடிவு செய்துள்ளது. இருந்தாலும், இது உடனடியாக நிறைவேறாது.

2000-ம் ஆண்டுக்குப் பிறகு தென் ஆப்பிரிக்காவின் பிளாட்டினம் உற்பத்தி 2.7%, அதாவது 5.68 மில்லியன் அவுன்ஸ் என்ற அளவிற்கு குறைவாக இருக்கும் என்று எதிர்பார்ப்பதால், கடந்த மூன்று வருடங்களில் இல்லாத வகையில், ஜனவரி மாதத்தில் இ.டி.எஃப். வழியாக 4.5 டன்கள் வரை முதலீட்டாளர்கள் இதில் முதலீடு செய்துள்ளனர். இதன் தேவை, இந்த ஆண்டு 0.5% அதிகரிக்கும் என்றும் கணிக்கப்பட்டுள்ளது.
மேலும், உலக நாடுகளின் தொடர் நடவடிக்கைகளால், குறிப்பாக, சீனா மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளில் 2013-ல் வாகனத் துறை வளர்ச்சி அதிகரிப்பதற்கான வாய்ப்புகள் இருப்பதாகப் பார்க்கப்படுகிறது. வருடத்தின் முதல் இரண்டு மாதங்களில் வாகன விற்பனை அதிக அளவில் இருக்கும் என்பதாலும் பிளாட்டினத்தின் விலை சர்வதேச அளவில் ஏற்றம் கண்டுள்ளது.
இதுதவிர, சர்வதேச நிதி ஆணையம் 2013-ல் உலக ஜி.டி.பி. 3.5% (2012-ல் 3.2%) என்கிற அளவிலேயே இருக்கும் என்று அறிவித்துள்ளது. சென்ற ஆறு மாத காலத்தில் சர்வதேச விலையானது 20%-க்கு மேல் அதிகரித்துள்ளது. இந்தியாவிலும் நேஷனல் ஸ்பாட் எக்ஸ்சேஞ்சில் இ-பிளாட்டினம் 1 கிராம் தற்போது ரூ.3,200 என்ற அளவில் வர்த்தகம் ஆகிறது.''
கச்சா எண்ணெய்!
சீனாவில் பொருளாதார நிலைமைகள் சீராகி வருவதால் கச்சா எண்ணெய்க்கான தேவை அதிகரித்துள்ளது. மேலும், உலகளவிலான டிமாண்ட் ஒரு நாளைக்கு 9,00,000 பேரல், அதாவது ஒரு சதவிகிதம் வரை அதிகரித்துள்ளது.

கச்சா எண்ணெய் அதிகமாக ஏற்றுமதி செய்யும் நாடான சவுதி அரேபியா கடந்த முப்பது வருடங்களில் இல்லாதளவுக்கு தனது உற்பத்தியைக் குறைத்துள்ளது என இன்டர்நேஷனல் எனர்ஜி இன்ஃபர்மேஷன் தெரிவித்துள்ளது. மேலும், ஒரு நாளைக்கு 6,50,000 பேரல் கச்சா எண்ணெய் 'ஒபேக்’ நாடுகள் உற்பத்தி செய்யவேண்டியது இருக்கும் எனவும் ஐ.இ.ஏ. தெரிவித்துள்ளது. 'ஒபேக்’ கூட்டமைப்பில் இருக்கும் 12 நாடுகளில் சராசரியாக 31.4 மில்லியன் பேரல்கள் சென்ற வருடத்தில் உற்பத்தி செய்தன. இது ஆண்டு உற்பத்தியில் இதுவரை இல்லாதளவுக்கு அதிக உற்பத்தி என்பது குறிப்பிடத்தக்கதாகும். மேலும், 2010-ம் வருடத்திற்குப் பிறகு 'ஒபேக்' கூட்டமைப்பில் இல்லாத அமெரிக்கா, கனடா, பிரேசில் உள்ளிட்ட நாடுகள் தங்களது சப்ளையை அதிகரித்துள்ளன.
சீனாவின் 2012-ம் ஆண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதி சென்ற வருடத்துடன் ஒப்பிடும்போது 6.8 சதவிகிதம் அதிகரித்துள்ளது. உலக அளவில் கச்சா எண்ணெய் தேவை அதிகரித்து வருவது ஒருபக்கமெனில், இந்தியாவில் கச்சா எண்ணெய்க்கான சுங்க வரியை வரும் பட்ஜெட்டில் அதிகரிக்க இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
2010-2011-ம் ஆண்டின் கச்சா எண்ணெய் இறக்குமதிக்கான சுங்க வரி மூலம் 26,000 கோடி ரூபாய் அரசுக்கு வருமானம் கிடைத்துள்ளது. இதுவே அடுத்த நிதியாண்டில் 20,000 கோடி ரூபாயாக குறைந்தது. வரும் பட்ஜெட்டில் சுங்க வரியை அதிகரிப்பதன் மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும். இதனால் ஏற்படும் விலை ஏற்றத்தை நுகர்வோருக்கு மாற்றுவதனால் அரசின் பற்றாக்குறை குறையும். சீனாவின் வர்த்தகம் அதிகமானது மற்றும் உலகளாவிய தேவைகள் அதிகமாக இருப்பதால் கச்சா எண்ணெய் விலை வரும் வாரத்தில் அதிகரிக்க வாய்ப்புண்டு.
அடிப்படை உலோகங்கள்!
சென்ற வாரத்தில் யூரோவின் மதிப்பு குறைந்ததாலும், ஐரோப்பிய மத்திய வங்கித் தலைவர் பொருளாதார இழப்பு தொடரும் என்று கூறியதாலும் காப்பரின் விலை குறைந்தது. காப்பரை அதிகமாக நுகரும் சீனாவில் வருடப் பிறப்பு வரவிருப்பதால் காப்பர் வாங்குவது குறைந்திருக்கிறது.

மேலும்,காப்பரின் இன்வென்ட்டரி அதிகரித்து எல்.எம்.இ. இன்வென்ட்டரி 3,86,500 டன்னாக கடந்த வாரத்தில் இருந்துள்ளது. இது கடந்த 2011 டிசம்பர் மாதத்திற்குப் பிறகு அதிகரித்திருக்கும் இன்வென்ட்டரி ஆகும். இதனால் காப்பரின் விலையில் சுணக்கம் இருந்தாலும் சீனாவின் வர்த்தக புள்ளி விவரங்கள் சாதகமாக இருப்பதால் விலை இறக்கம் குறையலாம்.
ஜிங்க் விலையும் சென்ற வாரத்தில் ஐரோப்பிய பொருளாதாரப் பிரச்னைகள் காரணமாகக் குறைந்தது. கடந்த 1994-க்குப் பிறகு டிசம்பர் 2012-ம் வருடத்தில் அதிகளவு ஜிங்க் ஸ்டாக் இருக்கிறது. ஸ்டாக் அதிகமாக இருப்பதால் வரும் வாரத்தில் காப்பர் மற்றும் ஜிங்க் உலோகங்களின் விலை குறைந்து வர்த்தகமாகலாம்.