சிகரம் தொடுவோம்! |

|
ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மி ன்னலாக இருந்தார் செந்தில். அதுதான் அவரை இந்த மேனேஜர் இருக்கைக்குக் கொண்டுவந்து உட்கார்த்தி இருக்கிறது. ராமனாதனுடன் பேசிய விஷயங்களை கனகச்சிதமாக முடித்துவிட்டு அடுத்த ரவுண்ட் பேச்சு வார்த்தைக்குத் தயாராகிவிட்டார். இந்தமுறை ராமனாதன் வழக்கமாகச் செல்லும் கிளப்புக்கு செந்திலை வரச் சொல்லியிருந்தார். பாரம்பரியமான அந்த கிளப்பில்தான் பல பெரிய மனிதர்களின் அறிமுகம் ராமனாதனுக்குக் கிடைத்தது. இங்கு கலெக்ட் செய்யும் முக்கியமான டிப்ஸ்களை பங்குச் சந்தையில் எப்படிப் பயன்படுத்திக் கொள்வது என்பது ராமனாதனுக்குக் கைவந்த கலை. பத்தாவது நிமிடத்தில் உள்ளே நுழைந்தார் செந்தில். ‘‘வணக்கம்... போனிலேயே உற்சாகம் கொப்பளித்ததே... எல்லா வேலைகளையும் முடித்துவிட்டீர்களா?’’ என்றார் ராமனாதன். ‘‘ஏற்கெனவே வங்கி கணக்கு, பான் நம்பர் எல்லாம் இருக்கிறது. பல வங்கிகளில் டீமேட் அக்கவுன்ட்டை ஆரம்பிக்க வசதி இருந்ததால் அதையும் துவங்கிவிட்டேன். நீங்கள் கொடுத்த ஹோம் வொர்க்கில் ஒன்று மட்டும்தான் மிஸ்ஸிங்... தரகரைத் தேர்வு செய்வது! அதுமட்டும் தான் கொஞ்சம் குழப்பமாக இருந்தது. உங்களிடம் இன்னொரு ரவுண்ட் பேசிவிட்டு முடிவு செய்ய லாம் என்று பாக்கி வைத்திருக்கிறேன்’’ என்று சின்ன தயக்கத்துடன் செந்தில் சொல்ல, ஆதரவாக அவருடைய தோளில் தட்டினார் ராமனாதன். ‘‘வங்கிக் கணக்கு, பான் நம்பர், டீமேட் அக்கவுன்ட் எல்லாம் அரசும் வங்கியும் சார்ந்த விஷயங்கள். அதில் தவறாக முடிவெடுக்க வாய்ப்பில்லை. ஆனால், தரகரை முடிவு செய்வதில் நிதானம் வேண்டும். நீங்கள் இந்தக் குறுகிய கால அவகாசத்தில் தரகரை முடிவு செய்யாமல் இருப்பதிலிருந்தே நீங்கள் தெளிவாகத்தான் இருக்கிறீர் கள் என்பது புரிகிறது’’ என்ற ராமனாதன், அந்த கிளப்பின் அன்றைய ஸ்பெஷல் டிபனை ஆர்டர் செய்தார். |

‘‘நகரத்தில் உள்ள தரகர் பட்டியலை முழுக்க அலசிப் பார்த்துவிட்டேன். தெரிந்த நண்பர்களிடம் பேசினேன். தலையைப் பிய்த்துக்கொள்ளாத குறை! தரகர்களின் எண்ணிக்கை இவ்வளவு அதிகமாக இருக்கிறதே!’’ என்று செந்தில் ஆச்சர்யப்பட்டுக் கேட்க, அதற்குள் ஆர்டர் செய்த ரசகுல்லாவும் கீரைவடையும் வந்து சேர்ந்தன. சூடாக வந்த கீரைவடையை தன் பக்கம் நகர்த்திக் கொண்டு ரசகுல்லாவை செந்திலுக்குக் கொடுத்த ராமனாதன், புன்னகையுடன் பேச ஆரம்பித்தார். ‘‘ஒரு நல்ல தரகரைத் தேர்ந்தெடுத்துவிட்டால், அதன் பிறகு நம் வேலை பாதியாகக் குறைந்துவிட்டது என்று அர்த்தம். அவருடைய வழிகாட்டுதல் சரியாக இருந்தால் நாம் கவலையின்றி முதலீடு செய்யலாம். கிட்டத்தட்ட வாழ்க்கைத் துணையைத் தேர்ந்தெடுப்பது மாதிரி அக்கறையோடு செய்யவேண்டிய விஷயம் இது’’ என்று சொன்ன ராமனாதன், தரகரைப் பற்றி சில முக்கியமான பாயின்ட்களைச் சொல்ல... செந்தில் வேகமாக குறித்துக் கொள்ள ஆரம்பித்தார். ‘‘தரகர் செபி அமைப்பிடம் பதிவு செய்துகொண்டவரா என்பதைக் கவனமாகச் சரிபார்த்துக்கொள்ள வேண்டும். அதிக அளவில் பணம் முதலீடு செய்பவர்கள் அல்லது தினசரி லட்சக்கணக்கில் வியாபாரத்தில் ஈடுபடுபவர்கள் என்றால், நேரடித் தரகரிடம் போகலாம். சிறிய முதலீடு என்றால் துணைத் தரகரை (சப் புரோக்கர்) தேர்ந்தெடுத்தாலே போதும். நம் மேல் கவனமும் அக்கறையும் காட்டி அவர்கள் செயல்படுவார்கள் என்பதே காரணம். அடுத்து, பங்குச் சந்தையில் ஈடுபடுவதெற்கென உள்ள பரீட்சையில் தரகரோ, அவருடைய ஊழியரோ பாஸ் செய்ததற்கான அத்தாட்சியை டிஸ்ப்ளே செய்திருக் கிறார்களா என்பதைப் பார்த்தாலே தெரிந்துவிடும். இதெல்லாம் அடிப்படையான விஷயங்கள்’’ என்று ராமனாதன் நீளமாகச் சொல்லிக்கொண்டிருக் கும்போதே, ஸ்ட்ராங்கான காபி வந்தது. அதை எடுத்து மெல்ல உறிஞ்சிக்கொண்டே செந்திலைப் பார்த்த ராமனாதன், ‘‘இப்போது நான் சொன்ன விஷயங்களை அடிப்படையாக வைத்து தரகரை முடிவு செய்தவுடன், டிரேடிங் அக்கவுன்ட்டை துவங்கிவிடுங்கள். அப்படியே சில பங்குகளைப் பற்றிச் சொல்கிறேன். குறித்து வைத்துக்கொண்டு முடிந்தால் குறைந்த அளவில் வாங்கிப் பாருங்கள்’’ என்று சொல்லிவிட்டு, நிமிர்ந்து பார்த்தார். செந்தில் முகத்தில் ஏதோ கேள்வி இருப்பதாகத் தெரிந்தது. ‘‘இப்போது வங்கிகளே ஆன்லைன் டிரேடிங் வசதியை ஏற்படுத்தித் தருகிறதே... அந்த வங்கிகளும் கிட்டத்தட்ட தரகர்கள் மாதிரிதானே... அதை நாம் தேர்ந்தெடுக்கலாமா?’’ என்று செந்தில் கேட்டதும், ‘‘எங்க ஊரிலே, ‘தூண்டில்காரனுக்கு தக்கையிலே கண்ணு’ என்று ஒரு பழமொழி சொல்வார்கள். அதுபோல, சிந்தனை எல்லாம் பங்குச் சந்தைதான் போலிருக்கே’’ என்ற ராமனாதன், வங்கிகள் வழங்கும் ஆன்லைன் வசதிகளைப் பற்றி விரிவாகப் பேச ஆரம்பித்தார். அதற்கு முன்... வா சகர்களே உங்களில் பலர் செந்திலைப் போல டீமேட் அக்கவுன்ட் திறந்து பங்குச் சந்தையில் குதிக்க தயாராக இருப்பீர்கள். நாங்கள் சொன்ன 2,000 ரூபாயில் பான் மற்றும் டீமேட் அக்கவுன்ட் துவங்க ஐந்நூறு ரூபாய் செலவு செய்திருப்பீர்கள். மீதம் 1,500 ரூபாய் வைத்திருப்பீர்கள். தரகருடன் டிரேடிங் அக்கவுன்ட் தொடங்கிய வுடன் கீழே குறிப்பிட்ட பங்குகளை வாங்கலாம். இந்தப் பங்குகளின் விலை அதிகரிக்கும் என்றோ, இந்த முதலீட்டின் மீது உடனடியாக வருமானம் கிடைக்கும் என்றோ எந்தவிதமான உத்தரவாதமுமில்லை. இந்தப் பங்குகளின் விலை ஏற்ற, இறக்கம், பங்குச் சந்தையின் ஏற்ற இறக்கம், உங்களுக்கு அனுபவ பாடத்தைப் போதிக்கப் போகிறது. அதற்கான விலைதான் இது. உங்கள் தரகர் மற்றும் நண்பர்களைக் கலந்து ஆலோசித்து வேறு பங்குகளையும் வாங்கலாம். இதன் அடிப்படை என்னவென்றால், எல்லாப் பணத்தையும் ஒரே நிறுவனப் பங்குகளில் அல்லது ஒரே துறையில் ஈடுபட்டு வரும் சில நிறுவனங்களின் பங்குகளில் முதலீடு செய்வது அதிக ரிஸ்க் என்பதால், பல துறைகளாகப் பிரித்து முதலீடு செய்யவேண்டும் என்பதே முக்கியம். பங்கு 1 : இந்திரப்ரஸ்தா மெடி ரூ.40-க்குள் வர்த்தகமாகிறது. அதில் 5 பங்குகளை வாங்குங்கள். பங்கு 2 : ராமா நியூஸ் பிரின்ட் ரூ.10-க்கு வர்த்தகமாகிறது. இதில் 25 பங்குகளை வாங்குங்கள். பங்கு 3 : செயில் ரூ.85-க்கு வர்த்தகமாகிறது. இதில், 5 பங்குகளை வாங்குங்கள். பங்கு 4 : யூகோ வங்கி ரூ. 26-க்கு வர்த்தக மாகிறது. 10 பங்குகளை வாங்குங்கள். பங்கு 5 : டாடா டெலி ரூ.24-க்கு வர்த்தக மாகும் இப்பங்குகளில் 10 வாங்குங்கள். மேலே சொன்ன பங்குகளின் விலைகள் சிறிது ஏறியோ இறங்கியோ இருகக்கலாம். நீங்கள் வாங்கும்போது மார்க்கெட்டின் அன்றைய விலையை அனுசரித்து இதில் மாறுதல்கள் செய்தும் கொள்ளலாம். ஒவ்வொரு பங்குக்கும் புரோக்கர் கமிஷன் குறைந்த பட்சம் ரூபாய் 25 வரை தேவைப்படும். பங்குகளை வாங்கியாகிவிட்டதா..? இப்போது உங்கள் முதலீடு மொத்தமும் பங்குகளாக மாறி இருக்கும். பங்குகளை வாங்கிய கம்பெனிகளின் முதலாளிகளில் நீங்கள் ஒருவராகிவிட்டீர்கள். முதலாளிகளுக்கே உரிய பொறுப்பு உங்களுக்கு வந்துவிட்டது. இந்நிறுவனங்களின் செயல்பாட்டைக் கண்காணிக்க வேண்டியது உங்கள் பொறுப்பல்லவா?
|